தீட்டு, வீட்டுக்குத் தூரம்,வீட்டு விலக்கு,மாதவிலக்கு,மாதவிடாய் ...பெண் உடலின் இயற்கையான நிகழ்வான உதிரப்போக்குக்குத்தான் எத்தனை பெயர்கள்.அதை வைத்துத்தான் எத்தனை (மூட)நம்பிக்கைகள்.பயங்கள்...
மாதவிலக்குச் சமயத்தில் பெண்கள் வெளியில் சென்றால் விபத்து நடக்கும்.குளித்தால் சளி பிடிக்கும்,காயம் படும்,கனமான பொருட்களைத் தூக்கக் கூடாது.பூக்களைத் தொட்டால் கருகிவிடும்.தனித் தட்டில்தான் சாப்பிடவேண்டும்.தலைக்குக் குளிக்காமல் வீட்டுக்குள் நடமாடக்கூடாது.சாப்பிட்ட மிச்சத்தை நாய்க்குப் போட்டால் வயிறு வலிக்கும்.இப்படிப் பல கூடாதுகள்.கிராமப்புறங்களில் சடங்கான பெண்ணை தனிக் குடிசையில் ஒதுக்கி வைப்பதோடு குளிக்க வெளியே வருவதானால்கூட ஒரு இரும்புக்கம்பியை பாதுகாப்புக்குக் கொடுத்தனுப்புவார்கள்.பேய் அடித்துவிடுமாம்.
இந்த மாதிரியான நடவடிக்கைகள் மாதவிலக்குப் பற்றிக் கசப்பான உணர்வைப் பெண்கள் மனதில் பதிய விடுகிறது.இதோடு வலி எரிச்சல் சோர்வு கசகசப்பு எல்லாம் சேர "ஏன்தான் பெண்ணாகப் பிறந்தோம்" என்ற சலிப்புத் தட்டுகிறது.
மாதவிலக்கு என்பது முழுக்க முழுக்க உடல்நலம்.ஆரோக்யம் தொடர்பானதே அன்றி இத்தகைய நம்பிக்கைகள் சம்பந்தப்பட்டதல்ல என்று புரியவைப்பதே இந்தப் பதிவின் நோக்கம்.
அந்த மூன்று நாட்களில் (சிலருக்குக் கூடலாம் குறையலாம்)உண்டாகும் அத்தனை பிரச்சனைகளைப் பற்றியும் பிரபல மகப்பேறு நிபுணர்கள் டாக்டர் ஞானசௌந்தரி டாக்டர் தமிழிசை டாக்டர் சுமதி டாக்டர் ராஜசேகர் ஆகியோர் துணையோடு A - Z தெளிவுபடுத்து சுலபமான கேள்வி பதிலாக அவள் விகடனில் 2003 ம் ஆண்டு வந்த பெண்கள் இணைப்பை பிரயோசனம் கருதி நான் பதிவில் இணைக்கிறேன்.
கடைக்குப் போய் சானிட்டரி நாப்கின் கேட்டு வாங்கக்கூடத் தயங்கும் நாம் எப்படி குழந்தைகளுக்கு மாதவிலக்கு பற்றிப் புரியவைக்கப் போகிறோம். நம் உடல்பற்றி அதன் மாற்றங்கள் இயல்பு பிரச்சனைகள் பற்றி நாம்தான் தயங்காமல் பேசியாக வேண்டும்.
பூப்பெய்தல் என்கிற பருவமடைதல் கட்டம் எப்படிப்பட்டது ?அது எவ்வாறு நிகழ்கிறது ?
பூப்பெய்தல் என்பது குழந்தைப் பருவத்திலிருந்து கன்னிப் பருவத்துக்கு மாறுவதற்கான இடைக்கால நிகழ்ச்சி.
முதல் மாற்றமாக மார்பகங்கள் வளர்ச்சியடைய ஆரம்பிக்கின்றன.10 - 11 வயதில் (இப்போ 9-13)இது தொடங்கும்.ஒரு வருடத்துக்குள் பிறப்புறுப்புமீது முடிகள் முளைக்க ஆரம்பிக்கும்.பின்பு உடல்வளர்ச்சியில் வேகம் தென்படும்.அந்த வயதில் ஒரு பெண் அதே வயது ஆணைக் காட்டிலும் வளர்ச்சி அடந்தவளாகத் தெரிவாள்.இடுப்பு எலும்பு வளர்ச்சி அதிகமாகும்.பூசினாற்போல் சதைப்பற்று ஏற்படும்.அக்குகளில் முடி வளர்வதுதான் இந்த மாற்றங்களில் கடைசியாக நிகழ்வது.அதன்பின் இந்த மாற்றங்களின்வெளிப்பாடாக மாதவிலக்கு நேரிடுகிறது.
இவையெல்லாம் வெளியில் தெரியும் மாற்றங்கள்.உடலின் உள்ளே என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன ?
பலரும் நினைப்பதுபோல் மாற்றங்கல் கர்ப்பப்பை மற்றும் சினைப்பையில் மட்டும் ஏற்படுவதில்லை.
மூளையில் இருந்து GNRH என்ற ஹார்மோன் சுரந்து அது பிட்யூட்டரி என்ற சுரப்பியைத் தூண்டி பின்பு அந்த சுரப்பியிலிருந்துவரும் சில ஹார்மோன்கள் கர்ப்பப்பைமீதும் சினைப்பையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது.அதாவது மூளையில் ஒரு பகுதியிலிருந்து வரும் அந்த GNRH ஹார்மோன் தான் அத்தனை நிகழ்வுகளுக்கும் மூலகாரணம்.இது குழந்தையாக இருக்கும்போதே சுரக்க ஆரம்பிக்கிறது.கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிறது.முதலில் அவ்வப்போது குறிப்பாக இரவு மட்டுமே சுரக்கும்.பின்பு இடைவெளி குறைந்து அளவு அதிகமாகி 90 நிமிடதிற்கு ஒருமுறை இரத்தத்தில் கலக்கும் அளவுக்கு சுரக்க ஆரம்பிக்கும்.அப்போது சினைப்பை வேலை செய்ய ஆரம்பிக்கிறதுஇதனாலேயே முதன் முதாலாக மாத விலக்கு நிகழ்கிறது.
ஆரம்பத்தில் ஹார்மோன்கள் கலப்பதில் தாமதங்கள் இடையூறுகள் ஏற்படலாம்.அதனால்தான் பூப்படைந்த பின்பும் சில மாதவிலக்கு சரியாகவராது.இந்தக் கால அளவு ஒரு வருடம் முதல் ஐந்து வருடமாகக்கூட இருக்கலாம்.போகப்போகச் சரியாகிவிடும்.
இன்ன வயதிற்குள் பூப்படைய வேண்டும் என்று இருக்கிறதா?
18 வயதில்கூட ஏற்படாவிட்டால் டாக்டரைப் பார்க்க வேண்டும்.நான்கு வயதில் பூப்படைந்து ஐந்து வயதில் கருத்தரித்த குழந்தைகள்கூட உண்டு.அதெல்லாம் அபூர்வம்.7 முதல் 9 வயதிற்குள் பூப்படைதலை "விரைவி படுத்தப்பட்ட பூப்பெய்தல்"என்கிறோம்.
சிறுவயதில் பூப்படைந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
சரியான சைக்கிள் எது ?பாதுகாப்பானது எது ?
எத்தனை நாட்களுக்கு ஒருமுறை விலக்காவதை ஒழுங்கான மாதவிலக்கு என்று சொல்லலாம் ?
அதைச் சுழற்சி என்போம்.சைக்கிள் சாதாரணமாக 28 நாட்கள் ஒரு சுழற்சி.சிலருக்கு இரண்டு மூன்று நாட்கள் குறைவாக அல்லது கூடுதலாக குறிவாக அல்லது கூடுதலாக வரலாம்.அது தப்பில்லை.
இந்தச் சுழற்சிக்குள் என்னென்னெ நடக்கிறது ?அந்த 28 நாட்களில் கருத்தரிக்கக்கூடிய உறவுக்கு பாதுகாப்பான நாட்கள் எப்படி வகைப்படுத்துவது ?
அந்த 28 நாட்களை பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளலாம்.1-5 மாதவிலக்கு நாட்கள்.5-10 நாட்கள் ஆரம்ப நாட்கள்.அப்போது ஈஸ்ரோஜன் அதிகம் சுரக்கும்.கருமுட்டை வளர ஆரம்பிக்கும்.கர்ப்பப்பையில் உள்ள நடு ஜவ்வும் வளர ஆரம்பிக்கும்.
10 முதல் 14 நாட்கள் அதே வளர்ச்சி வேகமாகி 14 ம் நாள் குமிழ் உடைந்து கரு வெளிப்படும்.எனவே அதுதான் கருத்தரிக்க உகந்த காலகட்டம்.
14 முதல் 28 நாள்வரை பின்பகுதி நாட்கள்.ப்ரொஜெட்ஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும்.கர்ப்பப்பைய்ன் உள்ளே ஜவ்வு அதிக தடிமனாகத் தென்படும்.(ஒருவேளை கருத்தரித்தால் அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தில் மெத்தைபோல)கரு உருவாகவில்லை என்றால் நடு ஜவ்வுக்கு ரத்த ஓட்டம் குறைந்துவிடும்.
தண்ணீரும் உரமும் போட்டபோது வளரும் பயிர் அந்த இரண்டும் இல்லையென்றால் கருகுவதுபோல கர்ப்பப்பையில் வளர்ந்திருக்கும் நடுச்சதை (Endometrium)சுருங்கி அந்தச் சதையும் ரத்தமும் சில மாற்றங்கள் ஏற்பட்டு உதிரப் போக்காக வெளிவரும்.மறுபடியும் ஐந்து நாட்கள் கழித்து இதே சுழற்சி தொடங்கும்.
லிமிட் என்று உண்டா ?
மூன்று முதல் 6 நாட்கள் இருக்கலாம்.3 க்குக் குறைவாக 6 க்கு மேல் இருக்குமானால் அது அசாதாரணம்.
எவ்வளவு ரத்தம் வெளியேறுவதை சாதாரணம் எனலாம் ?
சுமார் 50 ம்ல்லி லிட்டர் என் இந்த அளவும் வேறுபடலாம்.அப்போது தினமும் அரை மி.லி முதல் மி.கி வரை இரும்புச் சத்தும் வெளியேறுகிறது.உதிரப்போக்கு 80 மில்லிக்கு மேல் இருந்தால் இரும்புச் சத்து மாத்திரை சாப்பிடுவது நல்லது.
ரத்தம் கட்டியாக வெளியேறுவது ஏன்?
அது அதிகப்படியான உதிரம் அல்லது திரவநிலை அடைவதற்கு முன்பே வெளிப்பட்ட உதிரம் எனக் கூறலாம்.
இந்தக் காலகட்டத்தில் உள்ளே வேறென்ன நடக்கிறது ?ஒவ்வொரு சுழற்சியிலும் சினைப்பையில் சுமார் 50 குமிழிகள் உருவாக ஆரம்பித்து பின்பு ஹார்மோன்கள் உந்துதலால் ஒருகுமிழ் பெரிதாகி அதனுள் கருமுட்டை உற்பத்தியாகி 14 ம் நாள் ஹார்மோன்கள் உதவியால் அந்தக் குமிழ் வெடித்துக் கரு வெளிவந்து விந்துவை எதிர்கொள்ளத் தயாராகிறது.
மாதவிலக்கு வருமுன் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன ?
மார்பகம் பாரமாகத் தோன்றும்.பெரிதாவது போலத் தெரியும்.வலிக்கும்.இவை 2 அல்லது 4 நாட்களுக்குமுன் ஏற்படும்.இது சகஜம்.சிலருக்கு இந்த அறிகுறிகள் அதிகமாகக் இருக்கலாம்.
14 ம்நாள் கருமுட்டை வெளிவரும் நாளில் வயிறு வலி இருக்கலாம்.வயிறு உப்பியிருப்பது போல கனமாக உணரலாம்.
உடல் நீர் கோர்த்தது போல எடை அதிகமானதாய் தோன்றும்.14 ம் நாளில் இருந்து வளவளப்பான திரவம் சுரப்பது அதிகமாக இருக்கும்.
இந்த மாற்றங்கள் pre Menstural Syndrome என்பார்கள்.தலைவலி,கால்வலி, மற்றும் வீக்கம்,அடிவயிற்றில் வலி,அதிக பசி,அலர்ஜிஃசளி ஏற்படுவது பருக்கள்,குடல் உபாதை,முதுகு வலி,படபடப்பு,அரிப்பு,அதிக வியர்வை போன்ற மாற்றங்கள் நேரலாம்.
உடல் தவிர மன நிலையிலும் மாற்றங்கள் ஏற்படும்தானே ?
நிச்சயமாக.கவலை,பதற்றம்,ஆர்வமின்மை,ஈடுபாடின்மை,அசதி,கோபம் டென்சன்,எரிச்சல்,தூக்கமின்மை,குடும்ப வாழ்க்கை பாதுகாப்பற்றதாக உணர்தல்,தற்கொலை எண்ணம்,தனிமை விரும்புதல்,தாழ்வு மனப்பான்மை போன்ற உணர்வுகள்.
இந்தப் பிரச்சனைகளுக்கு காரணம் இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.இவை ஒரு சுழற்சியின் கடைசி நாட்கள் அல்லது மாதவிலக்கு வருவதற்கு முந்தைய நாட்களில் ஏற்படுவதால் ஹார்மோன் பாதிப்பாக இருக்கலாம்.பி.6 என்ற விட்டமின் பற்றாக்குறையாக இருக்கலாம்.தைராய்ட் போன்ற நாளமில்லாச் சுரப்பிகளின் தாக்கம் Prolaction Prostoulandins போன்ற ஹார்மோன்களின் குறைபாடு காரணமுமாகலாம்.அதிகப்படி நீர் சுரப்பதும் சர்க்கரை அளவு குறைவதும்கூட காரணமாகலாம்.
[இன்னொரு பாகமும் பேசுவோம்]
ஹேமா(சுவிஸ்)