நல்லா யோசிச்சுப் பாத்தா சில சங்கடங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் நாங்களும் எங்கள் முட்டாள்தனங்களுமே தான் காரணம்.ஒரு கதையொன்று.எனக்கு அப்பா சொன்ன ஞாபகம்.ஏனோ இன்று மீட்டெடுத்தேன்.ஒரு ஊர்ல சரியான புளுகுக்காரி ஒருத்தி இருந்தாவாம்.அவ ஒரு நாள் ஒரு சந்தைக்குப் போனாவாம்.அப்ப அவ சந்தையில ஒரு கடைக்காரர் பெரிய கூண்டுக்குள்ள கனக்க 100 க்கு மேலான பறவைகளை வச்சிருந்ததைப் பாத்தாவாம்.பாக்க நல்ல வடிவாயும் வித்தியாசம் தெரியாம ஒரே அளவா ஒரே கலரிலயும் சத்தம் போட்டபடி இருந்திச்சாம்.இவவுக்கு ஏனோ அதைப் பாத்து வாங்கவேணும்போல ஆசையாய் இருந்திச்சாம்.என்றாலும் நிறைய விலையாய் இருந்தபடியால் சுத்திச் சுத்தி வந்துகொண்டேயிருந்தாவாம்.
கன நேரத்துக்குப் பிறகு ஒரு அதிசயம் அதிஷ்டம் மாதிரி அவவின்ர கண்ல ஒரு பறவை வித்தியாசமாப் பட்டிச்சாம்.என்னவென்றால் எல்லாப் பறவைகளும் 10 ரூபா என்றிருக்க ஒரு பறவை மாத்திரம் 1000 ரூபா என்று இருந்திச்சாம்.என்ன - ஏன் என்று விசாரிச்சாவாம் கடையில.அப்ப கடைக்காரார்"அட நீங்க சரியான புத்திசாலிபோல இருக்கே.எப்பிடிக் கண்டு பிடிச்சீங்க.ஏதாச்சும் சாத்திரம் பாக்கத் தெரியுமா சாத்திரம் படிச்சிருக்கீங்களான்னு" கேக்க அவவுக்கு அப்பிடியே தலைல ஐஸ் வச்சமாதிரி ஆயிடிச்சாம்.இப்ப கடைக்காராருக்குத் தெரிஞ்சுபோச்சு இவவை இனிச் சுகமா ஏமாத்தலாம் என்று.இப்ப அவர் தன்ர தொழிலை ஆரம்பிச்சாராம்.
அவர் சொன்னாராம் "பாருங்க தங்கச்சி இது பாக்கத்தான் எல்லாப் பறவைகள்போல இருந்தாலும் இது அவைகளைவிட வித்தியாசமானது.இது சும்மா சினிமாப் பாட்டு மட்டும் பாடாது.கர்நாடக சங்கீதம் தொடங்கி சிங்களப்பாட்டு வரைக்கும் பாட முடியும்"என்றாராம்.
அவ உடன விட்டால் யாராச்சும் வாங்கிட்டாலும் என்று உடனேயே 1000 ரூபா கொடுத்து வாங்கிக்கொண்டு போனாவாம்.பிறகென்ன பக்கத்துவீடு முன்வீடு என்று தான் வாங்கின பறவையைப் பத்தி புளுகாத் தள்ளிக்கொண்டிருந்தாவாம்.
ரெண்டு நாள் பொறுத்து நல்ல கோவத்தோட அந்தக் கடைக்கு வந்தாவாம் அவ."என்ன நீங்க குடுத்த பறவை பாடவேயில்லையே" என்று சத்தம் போட்டுப் பேசினாவாம்.அதுக்கு அந்தக் கடைக்காரர் பாடவில்லையா "ஏன் ஆச்சரியமாயிருக்கே.சரி அது மணியைக் கொத்துதா" என்று கேட்டாராம்.அதுக்கு அவ "என்ன மணி என்று கேக்க மணிதான்.எப்பிடி ஒரு ஒத்திசை இல்லாம எப்பிடிப் பாடும் பறவை.இந்த மணியைக் கொண்டுபோய் அதன் கூண்டுக்குள்ள கட்டிவிடுங்க.மணி அசைஞ்சு சத்தம் வரும்.அப்ப பறவையும் சேர்ந்து பாடத் தொடங்கும்.
மணி ஒன்றும் பெரிய விலையில்ல.200 ரூபாதான்."என்று சொல்லி அவவின் தலைல மணியைக் கட்டி அனுப்பிவிட்டாராம்.
அடுத்த நாள் திரும்பவும் அதே கோவத்டோட வந்தாவாம்."நீங்க குடுத்த மணியையும் கட்டினேன்.அப்பவும் பறவை பாடமாட்டுதாம் ஏன் ?"என்று கேட்டாவாம்.அப்பவும் ஆச்சரியத்தோட அவவின் சோகத்தைக் கேட்ட கடைக்காரர் "என்ன தங்கச்சி நீங்க.
மணியைக் கட்டினபிறகும் பாடாம இருக்குதென்றால்..ம்...ஏன் என்று யோசிக்கிறமாதிரி ஒரு பாவனை செய்துகொண்டு அது ஊஞ்சல் ஆடுதா?" என்று கேட்டாராம்.
அவவோ ஒன்றுமே விளங்காமல் "என்ன ஊஞ்சலா ?"என்று கேட்க "என்ன தங்கச்சி நீங்க.1000 ரூபா குடுத்து இந்தப் பறவையை வாங்குறீங்க.ஓரளவு பறவையைப் பத்தித் தெரிஞ்சிருப்பீங்க என்றுதான் நான் சொல்லாம இருந்தன்.இப்பிடி ஒன்றுமே தெரியாம இருக்கீங்களே.பறவை ஒரே இடத்தில குந்திகொண்டிருந்தா அதுக்கு எப்பிடிக் குஷி வரும்.ஊஞ்சல் ஆடினா சதோஷத்தில பாடவேணும் என்று என்ற ஆசை வரும்.இந்தாங்க இந்த ஊஞ்சலைக் கொண்டு போய்க் கட்டுங்க.300 ரூபாதான்.பாருங்க நாளைக்கு வந்து சொல்லுவீங்க.எப்பிடி நல்லாப் பாடுது என்று."அவவும் என்ன செய்றது என்றபடி ஊஞ்சலை வாங்கிக்கொண்டு போனவாம்.
அடுத்த நாளும் அதே கோவத்தோட "என்ன நீங்க என்னை ஏமாத்திக்கொண்டே இருக்கிறீங்களா.இப்பவும் அது பாடமாட்டேங்குதே" என்றாவாம்.அப்பவும் சலிக்காத கடைக்காரர் "என்ன தங்கச்சி சொல்றீங்க.மணியைக் கொத்துது.ஊஞ்சல் ஆடுது.ஆனா பாட்டு மட்டும் பாடாதாம்.ஏன் ?ஆச்சரியம்தான்."
"கூட்டுக்குள்ள கண்ணாடி வச்சிருக்கீங்களா.அது தன்னைத் தானே பாத்துக்கொள்ளுதுதானே" என்று கேட்டாராம்.குழப்பமும் வியப்புமா அவ "பறவையா...கண்ணாடியா பாத்துக்குமா!" என்றாவாம்."அதானே பாத்தேன் பறவை ஏன் பாடாம இருக்கு என்று இப்பதானே தெரிஞ்சுது.பாத்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க.பறவைகளுக்கும் மனசுன்னு இருக்குதானே.நாங்கதான் புரிஞ்சுக்கோணும்.அது தனியா இருந்தா எப்பிடிப் பாடும்.தான் தனிய இல்ல என்று அது உணரவேணும்.அதுக்குத்தான் இந்தக் கண்ணாடி வைத்தியம்.அது தன்னையே கண்ணடிக்குள்ள பாத்து தன்னைப்போல இருக்கிற விம்பத்தோட பேச ஆரம்பிக்கும்.அப்புறம் பாருங்க.
பாடத்தொடங்கிடும்.இந்தாங்க 200 ரூபாதான்" என்று அதையும் அவவிடம் விற்றுவிட்டாராம்.
அடுத்த நாளும் அவ கடைக்கு வந்தாவாம்.என்ன என்று கடைக்காரார் கேக்க சரியான கவலையோட "பறவை செத்துப்போச்சு" என்றாவாம்.ஐயோ "கடைசி வரைக்கும் பாடாமலேயே செத்துப்போச்சா?"என்றாராம் கவலையோட.ம்ம்ம்....பாடமத்தான் செத்துப்போச்சு.ஆனா சாகிறதுக்குக் கொஞ்சம் முதல்பேசிச்சு."மணி ,ஊஞ்சல் ,கண்ணாடி என்று உன் தலைல எல்லாத்தையும் கட்டி யோசனை சொன்ன அந்தக் கடைககாரர் ஏன் எனக்குச் சாப்பாடு போடச் சொல்லித் தராமப் போனார்.நீதான் ஒரு பைத்தியம்.அந்த ஆளிடம் ஏமாந்ததுபோல இனி எங்கயும் யாரிடமும் ஏமாறாதே" என்று சொல்லிட்டுத்தான் செத்துப்போச்சு என்று சொல்லியபடியே கோவத்தோட போய்ட்டாவாம்.
இதிலயிருந்து என்ன தெரியுது.யாராவது எங்களை ஏமாத்தினால் ஏமாத்துறவர்தான் குற்றவாளி.ஆனால் ஒரே ஆளிடம் திரும்பத் திரும்ப ஒருவர் ஏமாந்தால் குற்றவாளி ஏமாத்துற அந்தப் பெருச்சாளி இல்லை.ஏமாறுற அந்த வெங்காயம்தான்.
ஹேமா(சுவிஸ்)





