Wednesday, 4 November 2009

ஆரம்பிக்கப்படாத வாழ்வு.

சூரியன் தன் உடல் கிழித்து வெப்பத்தைச் சிந்திக்கொண்டிருந்தான்.அவள் கூரையின் ஓட்டை வழி வந்த வெளிச்சத்தை தன் முகத்தில் ஏந்திக்கொண்டிருந்தாள்.துர்நாற்றமும் புழுக்களும் ஈக்களுமாய் தன்னைச் சுற்றுவதைத் தவிர்க்க ஏதோ ஒரு வாசனைத் திரவியத்தைத் தெளித்துவிட்டு மீண்டும் யன்னல் வழி தன் பார்வையைச் சுழலவிட்டாள்.வியர்வையில்கூட துர்நாற்றம் உரசிப்போகிறது.

குழந்தைகளின் சிரிப்பொலி பூக்களைச் சுற்றும் வண்டுகள் பக்கத்து வீட்டை அலசும் பெண்கள் பழைய கனவுகளை மீட்டெடுக்கும் முதியவர்கள் என்று அன்றாட இயல்போடு அன்றைய நாள்.அறை மூலையில் ஒரு எலி தன் குஞ்சுக்கு இரை தேடிக்கொண்டிருந்தது.முன்று நாட்களாகக் கிழிக்கப்படாத கலண்டர் சுவரில் காற்றில் அடிபட்டுக்கொண்டிருக்க எலி பயந்து ஓடத்தொடங்கியது.தேநீர் குடிக்க மனம் உந்தியது.ஆனாலும் இருப்பு ஒட்டிக்கிடக்கிறது எழும்ப இயலாமல்.

மெல்ல இருளை வரவேற்று மாலை வெயில் மறைந்திகொண்டிருக்க மெல்லிய கீறலாய் நிலவு வெளிப்பட்டது ஆனாலும் வெளிச்சம் தாராளமாய் இல்லை.இன்னும் யன்னலோடு ஒட்டியபடிதான்.எழுதி வைத்த கடிதம் அடிக்கடி தன்னைத் திரும்பிப் பார்க்கவென்று படபடத்துக்கொண்டேயிருக்கிறது.

மெல்ல இருள் விலகத்தொடங்கியிருந்தது.பறவைகள் இரை தேடவும் பசுக்கள் தன் கன்றுகளுக்குப் பால் கொடுக்கவும் தயாராகின்றன.பூக்களின் வாசனை அறையின் துர்நாற்றத்தையும் தாண்டி மனதை இதமாக்குக்கிறது.தூரத்தே ஒரு வீட்டில் ஒரு குழந்தை பள்ளி போக அடம் பிடித்து அழுவதும் கேட்கிறது.

தேநீர் தரவோ கேட்கவோ ஆடகள் இன்றி தாகத்தோடேயே மீண்டும் அதே யன்னல் கம்பிகளூடே ரசிப்பின் நாயகியாய்.இனிமையான காலை நேரப் பாடல்களும் பாடசாலை மாணவர்களுமாய் சாலை கொஞ்சம் நிரம்பியபடி.யாரும் அவள் பக்கம் திரும்பாமலே தங்கள் குறும்புகளோடு சிநேகித முகங்களோடு.இவளுக்குப் பொறாமையாய்கூட.ஏன் இவள் மட்டும் தனிமையில் கவனிப்பாரற்று.

கண்ணீர் யன்னலோரத்துப் புற்களை ஈரமாக்க தன் கைகளை இன்னும் இறுக்கி சூரியனின் வருகையையும் அடுத்த நாளின் ஆரம்பத்தையும் வரவேற்றபடி அவள்.

கதவுகள் எதுவும் திறக்கபடாததால் அறைக்குள் ஒரு இறுக்கம்.சூன்யம்போல அமைதி. ஒருமுறை அறை முழுதும் அலைந்து திரும்பவும் யன்னல் கம்பிகளை இறுக்கிக் கொண்டபடி. வெறுமையான சுவரும் கடைசியாகப் பார்த்த அப்பா அம்மாவின் அல்பமும் இன்னும் விரித்தபடி கிடக்கிறது.அவளின் இளமைக்கால நிழலும் எவ்வளவு சந்தோஷமாக அதற்குள். யார் இத்தனை சந்தோஷங்களையும் விழுங்கிக் கொண்டது.

ஏன் எல்லாம் அவள் அறையில் அசைவற்றுக் கிடக்கின்றன.சமையல் பாத்திரங்கள் கழுவப்படவில்லை.தொலைபேசி அலறவில்லை.தண்ணீரின் சலசலப்போ வானொலிச் சத்தமோ இல்லை.குளியல் அறையில் மாத்திரம் ஒரு துளி நீர் சொட்டும் சத்தம்.ஓ...அது இறுக்கப் பூட்டப்படாத குழாயின் கூப்பிடு குரல்.

ம்....மெல்லக் கதவு திறந்து மூடுகிறது.யாரோ அறை உடைத்து முன்னேறப் பார்க்கிறார்கள். உறவின் இரைச்சல்கள் அழுகையாய் ஆர்ப்பாட்டமாய் இரக்கமாய் அருகே கேட்கிறது.

இவர்கள் அவள் அறை துழாவத் தொடங்கிவிட்டார்கள்.அவள் இருப்பின் அடையாளங்கள் ஒவ்வொரு துகளிலும் இங்கு கிடக்கப் புறப்படுகிறது காற்றாய் அவள் கைகளும் கால்களும்.
உடல் அது உடல் அல்ல.வெறும் காற்றாய் அந்தர ஊஞ்சலாய்.கதவுகள் திறக்கப்பட்டதால் சுலபமாய் வெளியேற யன்னல் கமபிகளின் வியர்வைப் பிடியிலிருந்து மெதுவாய் வெளியே மெல்ல.சுலபமாய் இருக்கிறதே இப்போ உள்நுழையவும் வெளியேறவும்.

இப்போ அந்த யன்னலின் பின்பக்கமாய் அவள்.இன்னும் யார் யாரோ உள்நுழைய விம்மல் சத்தங்களினூடே அதட்டல் குரல்களும்.

இரன்டு நாட்களுக்கு முதல் தனிமையின் விரட்டல் அதிகரிக்க தலை தடவவோ கைகளை இறுக்கிப் பற்றவோ எவருமின்றி, உதிர உறவுகளை செய்திகள் வெளியேற்ற உச்சி வெயில் வெப்பியெழ இவளும் பைத்தியமானாள்.

கச்சிதமாகத் தனக்குப் பிடித்த உடையணிந்து அலங்கரித்தபடியே படுத்திருந்தாள்.
அவஸ்தையான வாழ்வு,தனிமை,சிறுவர்களின் பசிக் குரல்கள்,பிடிக்காத செய்திகள்.தன்னைத் தானே சூறையாடிய அந்த மயக்க மருந்துகள்.சொக்கிப் போகும் நிமிஷத்திலும் தான் விளையாடிய அந்த முற்றம்,மண்திண்ணை,ஒற்றைப்பனை.மயங்கிவிட்டாள்.மிஞ்சிக் கிடக்கும் உடலைத்தான் பார்த்து அழுகிறார்கள்.எங்கே போனார்கள் இத்தனை நாளும் இவர்கள்!

உடல் புரட்டி உடை தளர்த்தினாலும் கேள்விகளும் பதில்களும் நிரம்பி வழ்ந்தன.

ஏன் என்ன நடந்தது ? !!!

பரீட்சையில் தோல்வியோ...இல்லையே இப்போ பரீட்சைக் காலமில்லையே இரண்டு நாளைக்கும் முன்னமும் பார்த்தேனே தொலைபேசியோடு.நானும் கண்டேனே அடுத்த தெருப் பையனோடு யாரோ ஒருத்தியும் இங்க அடிக்கடி வருவாளே.அவளை இப்போதைக்குக் காணாவில்லை நான்.என்னதான் எழுதியிருக்காம் அதில.காட்டவே மாட்டார்களாம்.படிக்கவோ வேலைக்கோதானே இங்க தங்கியிருக்கிறாள்.

அதில்கூட அவர்களுக்கு முழுமையான விபரம் இல்லை.ஏன் எதற்கு யார் எங்கே எதுவுமே தெரியாது.ஆனாலும் வாய் அவிழ்ந்து புழுவாய்ப் பொய்த்துக் கொட்டுகிறது.அந்த நாற்றத்தைத் தாண்டி அவர்களின் பேச்சு காற்றோடு கலக்கிறது.தனிமையும் உறவுகளின் பிரிவும்தான் அவள் மனதை இறுக்கியது என்று.எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத வெறுமை. தொலைபேசியோடான சிநேகம்,கணணியோடான அளவலாவல், அத்தனைக்கும் தூரமான அவள் தேசம்.

அகற்றப்பட்ட அல்பமும் கடிதமும் கலண்டரும்.இப்போ நாற்றம் இல்லை.அத்தனை கதவுகளும் யன்னலும் திறக்கப்பட்டு மாலையும் காலையும் வெளிச்சம் உள்நுழைந்து வெளியேறிக்கொண்டிருந்தது.இயல்பு வாழ்வு இயல்பாபகவே நகர்கிறது.குழந்தைகளும் பூக்களும் அப்படியேதான்.சில சமயங்களில் மாத்திரம் சூன்யமாய் வெறித்த பார்வையோடு சிலர் அந்த அறையையைப் பார்க்கிறார்கள்.வாழ்வேண்டிய வாழ்வைச் சூறையாடிய சந்தோஷத்தில் அந்தத் தினம்.நகர்வுகள் இயல்பானானாலும் பாரம் சுமந்த சில மனங்கள். அவளின் உடல் இல்லாமல் போய் ஒரு வாரமாகியிருந்தது.அந்தச் சுற்றாடலில் எல்லோரும் அவளை - அந்தச் சம்பவத்தை மெல்ல மெல்ல மறக்கத் தொடங்கியிருந்தார்கள்.

யூத்புல் விகடனில் இணைக்கப்பட்டுள்ளது.

ஹேமா(சுவிஸ்)

Wednesday, 28 October 2009

இப்படியாவது பிறந்திருக்கலாம்.

கொடுத்துவைத்த பிறவிகள்.

போட்டி பொறாமை போன்ற குணங்களால் மனிதனே மனிதன் மீது அன்பு காட்ட சிரமப்படுகிறான்.ஒரு பிராணி மீது அன்பு காட்ட கற்றுக்கொண்டால் மனித நேயம் தானாக வந்துவிடும்.

சிறு வயதில் பிராணிகள் மீது அன்பு கொள்ளும் குழந்தைகள் பிற்காலத்தில் தங்கள் பெற்றோர் மீதும் பாசம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

பிராணிகள் செய்யும் தவறுகளை சகித்துக் கொள்ள கற்றுக்கொண்டால் எந்த சூழ்நிலையிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியும்.

பிராணிகள் செய்யும் குறும்புகளை இரசிக்க கற்றுக்கொள்ளுங்கள் உங்கள் மன அழுத்தம் தானாக குறைந்து விடும்.



வளர்ப்பு பிராணிகள் மீது அன்பு காட்ட தெரியாத சமுதாயம் பண்பட்ட சமுதாயமாக இருக்க முடியாது.அதனால் தான் இன்றய சமுதாயத்தில் மனித நேயம் குறைந்து வன்முறை பெருகி வருகிறது. இதை பன்னாட்டு சமுதாயம் உணரவேண்டும்.

இன்றிலிருந்து இனி யாரையும் நாயே என்று திட்டுவதை நிப்பாட்டுங்கள்.


ஹேமா(சுவிஸ்)

Sunday, 25 October 2009

பகலொளி சேமிப்பு நேரம்.


██
பகலொளி சேமிப்பு நேரம் கடைப்பிடிக்கப்படும் பகுதிகள்.

██ பகலொளி சேமிப்பு நேரம் முன்னர் கடைப்பிடிக்கப் பட்ட நிலப்பகுதிகள்.

██ பகலொளி சேமிப்பு நேரம் கடைப்பிடிக்கப்படாத நிலப்பகுதிகள்.

கலொளி சேமிப்பு நேரம் அல்லது கோடை நேரம் என்பது பரவலாக பயன்பாட்டில் இருக்கும் சீர் நேரத்தை கோடை மாதங்களில் முன்னோக்கி நகர்த்தும் முறையாகும்.இது பொதுவாக ஒரு மணி நேரமாகும்.இது கோடை மாதங்களின் பகல் நேரத்தையும் வேலை மற்றும் பாடசாலை நேரங்களையும் ஒருமுகப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்படுகிறது."சேமிக்கப்பட்ட" பகலொளி மாலையில் உல்லாச நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இம்முறை பின்பற்றப்படாவிட்டால் காலையில் சூரிய ஒளி தூக்கத்தில் வீணடிக்கப்படும்.

பகலொளி சேமிப்பு நேரம் பொதுவில் குளிர்வலய நாடுகளில் பருவ மாற்றங்களோடு காணப்படும் பெரும் பகல்-இரவு நேர வேறுபாடுகள் காரணமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

பகலொளி சேமிப்பு நேரம் துவங்கும் பொழுது கடிகாரம் ஒரு மணிநேரம் முன்னோக்கி நகர்த்தப்படும்.

அரசுகள் சூரிய ஒளியின் பயன்பாடு அதிகரிப்பதால் இதனை பொதுவில் ஆற்றல் சேமிப்பு நடவடிக்கையாக விளக்குகின்றன.ஆனாலும் இம்முறை மூலம் மின்னாற்றல் சேமிக்கப்படுகிறதா என்பதைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ஐரோப்பாவில் இது கோடை நேரம் என்றே அழைக்கப்படுகிறது.இங்கு "கோடை" எனும் போது இளவேனில் இலையுதிர் என்ற பருவங்களின் சில வாரங்களையும் உள்ளடக்குகிறது (ஏப்ரல் முதல் அக்டோபர் வரை).மிகுதி மழைக் காலமாக கணிக்கப்படுகிறது (நவம்பர் முதல் மார்ச் வரை).இந்நடைமுறை நேர வலயங்களுக்கு ஏற்பவும் மாறுபடக்கூடியது.

வரலாறு

பாரிஸ் இதழ் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் பகலொளி சேமிப்பு நேரம் பற்றி பெஞ்சமின் பிராங்க்லின் தெரிவித்துள்ளார்.இருப்பினும் இக்கட்டுரையில் காணப்படும் நகைச்சுவைத் தொனி காரணமாக இதை அவர் உண்மையாகவே பிரெஞ்சு அரசுக்கு முன்மொழிந்தாரா அல்லது மக்கள் முன்னெழுந்து முன் உறங்கச் செல்ல வேண்டும் என கருதினாரா என்பது தெரியவில்லை.

பகலொளி சேமிப்பு நேரம் முதலாவதாக ஒரு திட்டமாக வில்லியம் வில்லெட் என்பவரால் 1907 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது.
பெருமளவிலான கையூட்டுகளைக் கொடுத்த போதிலும் பிரித்தானிய அரசு இதனை ஏற்கவில்லை.

பகலொளி சேமிப்பு நேரம் முதலாவதாக ஜெர்மன் அரசால் முதலாவது உலக போரின் போது 1916 இன் ஏப்ரல் 30 க்கும் அக்டோபர் 1க்கும் இடையில் பயன்படுத்தப்பட்டது.உடனே ஐக்கிய இராச்சியமும் 1916 மே 21க்கும் அக்டோபர் 1 க்கும் இடையில் பயன்படுத்தியது.

[இன்று நேரம் மாற்றப்படுகிறது.அக்டோபர் மாதக் கடைசி வாரத்திலும் ஏப்ரம் மாதக் கடைசி வாரத்திலும் மாற்றப்படும்.]

நன்றி இணையம்.

Wednesday, 21 October 2009

மிருகங்களுக்கும் சர்க்கரை நோய்.

மிருகங்களுக்கும் சர்க்கரை வியாதி வரலாம்.நாய்களுக்கு வரும் சர்க்கரை வியாதி மனிதார்களிடமிருந்து வேறுபட்டது.மனிதர்களில் இன்சுலின் சுரக்கும் கலங்கள் படிப்படியாகத்தான் குறையும்.மனிதர்கள் அதற்காக மாத்திரைகளை எடுத்தால் இன்சுலின் சுரக்கும் கலங்களின் தொழிற்பாட்டை அதிகரிக்கச் செய்யலாம்.

ஆனால் நாய்களைப் பொறுத்தமட்டில் இன்சுலின் சுரக்கும் கலங்கள் மொத்தமாகவே அழிந்தபின்புதான் இந்த நோய் தோன்றுகிறது.இதனால் இன்சுலின் ஊசிமூலம் கொடுப்பதே சிறந்த பரிகாரம்.தினமும் இந்த ஊசி ஏற்றவேண்டும்.சிலசமயங்களில் இரண்டுவேளைகளில் செலுத்தவும் நேரலாம்.ஆரம்பத்தில் இரத்தத்தில் குளுக்கோசின் அளவை சரியான நிலைக்கு கொண்டுவர சிலநாட்கள் செல்லலாம்.சிலநாட்களுக்கு கிளினிக்கில் வைத்திருக்க வேக்ண்டும்.விசேட உணவு வழங்க வேண்டும்.

நாய் பூனைகளுக்கு சர்க்கரை நோய் இருப்பதைக் கண்டு பிடித்தவுடன் சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு அவற்றின் எஜமானர்களின் குடும்பவிபரத்தைக் கேட்டறிவது நல்லது.நோயினால் பாதிப்புற்ற பிராணிகளை நேரம் எடுத்துப் பராமரிக்க வேண்டும். 'பிஸி 'யாக இருப்பவர்களினால் இது முடியாத காரியம்.

இன்சுலினை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த தாமதித்தால் பிராணிகள் மயங்கும்.உணவு பிந்தினால் சோர்வுடன் முடங்கும்.இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நாய்களைப் பராமரிப்பதில் பெண்கள் மிகுந்த சிரத்தை அடைவர்கள் என்பது உண்மை.

தெரிந்த பெண் ஒருவர் இந்த நோயினால் பீடிக்கப்பட்ட நாயொன்றைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக நன்கு பராமரிக்கிறார்.இது மானுட வயதில் ஐம்பத்தைந்து வருடத்துக்கு சமனாகும்.அடிக்கடி ஊசிபோடுவதற்கு நாய்க்கும் பொறுமை வேண்டும்.நோய் வந்த நாய்கள்-கருணைக்கொலை மூலம் பரலோகம் அனுப்பப்படுவதுமுண்டு.இது சோகம்தான்.ஆனால் தவிர்க்க முடியாதது.

நீரிழிவு என இலங்கையிலும் சர்க்கரை வியாதி என தமிழகத்திலும் சொல்லப்படும் இந்த நோய் நாய் பூனைகளை மட்டும் அல்ல மனிதர்களைப் படுத்தும் பாடு.

ஒரு சுவாரஸ்யமான கதையும் ஒன்று இதனோடு.

ஒரு அம்மா இந்த உபாதையால் பலஆண்டுகள் வருந்தினார்.நாற்பது வயதில் வந்த இந்தநோய் - சுமார் 15வருடங்கள் அவர்கள் மறையும் வரையில் உடலோடு ஒட்டி உறவாடியது.அவரது மகன் இன்சுலின் ஏற்றும் பழக்கத்தைத் தொடக்கிவிட்டிருந்தார்.

இலங்கையின் இனப்பிரச்சினையால் அம்மாவின் பிள்ளைகள் அம்மாவை விட்டுப் பிரிந்து பூமிப்பந்தில் சிதறி புலம்பெயர்ந்த போதும் - அம்மாவைப் பிரியாதிருந்தது இந்த நோய்.அம்மாவின் உடலைத் தீண்டிய இன்சுலின் ஊசியின் தடயங்கள்-கரும்புள்ளிகளாக அந்த வெள்ளைத்தோலை அலங்கரித்தது.கணவரது குத்தல் நக்கல் மொழிகளையும் அவர் பொறுத்துக் கொண்டதற்கு இந்த ஊசிகுத்தலினால் கிடைத்த சகிப்புத்தன்மையும் காரணமாக இருக்கலாம்.

அவர் வாழ்ந்த காலம் சுவாரஸ்யமானது.

வீட்டுக்கு வருபவர்களெல்லாம் வைத்தியர்களாகிவிடுவார்கள்.ஆயுர்வேதம் சித்தவைத்தியம் யுனானி எனக் கூறிக்கொண்டு இலை குழை தண்டு வேர் பூ - என தாவரவியலையும் அம்மா கரைத்துக் குடித்ததுக் கொள்வார்.அரைத்துக் குடித்த பாகற்காய்களுக்குக் கணக்கேயில்லை.

உலகத்தில் தோன்றிய பெரிய தெய்வங்கள் சிறிய தெய்வங்கள் பிறசமயத் தெய்வங்கள் என மத நல்லிணக்கணத்துடன் அம்மா விரதம் இருந்தும் இந்த உபாதையை போக்க முயன்றார்.நாற்பது நாட்கள் தொடர்ச்சியாக விரதம் இருந்து அதிகாலையில் குளித்துவிட்டு தெய்வதரிசனத்துக்குச் சென்றதால் கிணற்றில்தான் நீர் வற்றியதே தவிர நீரிழிவு வற்றவில்லை.

பூசாரிகள் மந்திரவாதிகள் சூனியம் எடுப்பவர்கள் எனச் சொல்லிக்கொண்டும் சிலர் வந்து போனார்கள்.கேரளாப் பக்கமிருந்து வந்த மலையாள மாந்திரீகார் ஒருவர் வந்து அம்மாவிடம் 'உங்களுக்கு நெருங்கிய உறவினர் ஒருவர் சூனியம் செய்திருப்பதாகச் சொல்லி உறவுக்குள் பகை நெருப்பை மூட்டிச் சென்றார்.இவர்கள் எல்லோரையும் விட அம்மாவின் உயிரை பிடித்து வைத்திருந்தது இன்சுலின் ஊசி மருந்துதான்.

முன்பு மாட்டிலிருந்தும் பன்றியிலிருந்தும் தயாரிக்கப்பட்ட இன்சுலின் இப்பொழுது சைவமுறைப்படி பக்டாரியாவுக்குள் இன்சுலின் ஜீனைச் செலுத்தி பிராமணர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஏற்றவாறு தயாரிக்கப்படுகிறதாம்.

[ஒரு அனுபவஸ்தர் சொல்ல நான் கேட்டுக்கொண்டது.]
ஹேமா(சுவிஸ்)

Thursday, 15 October 2009

சுவிஸ் ன் அழகு.


என் இனிய நண்பர்கள் அனைவருக்கும்
மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
இனியாவது ஈழத்தமிழன் வாழ்வில்
ஒளி பிறக்கப் பிரார்த்திக்கொள்வோம்.

சுவிஸ்(ஹேமா)

Thursday, 8 October 2009

"மேவீ" க்கு அனுப்பின ரொட்டி

என் இணைய நண்பர் மேவீ தனிச்சமையல் பண்றார் இப்போ.பாவம் சமைக்கவே தெரில.சுடுதண்ணி வைப்பேன் என்றார்.என்ன செய்யலாம்.
என்னால முடிஞ்சது சொல்லிக் குடுத்தேன்.இனி அவர் சமைச்சாரா சாப்பிட்டாரா ,ஏன் தனிய சமைக்கிறார்ன்னு அவர்கிட்டயே கேட்டுக்கோங்க.ரொட்டி நல்லாயிருந்தா மட்டும் என்கிட்ட சொல்லுங்க.

காய்கறி ரொட்டி
*******************

கோதுமை மா(மைதாமா) - 500 கிராம்

உப்பு - தேவையானளவு

பால் - 2 மேசைக்கரண்டி

பட்டர் - 2 மேசைக்கரண்டி

சூடான நீர் - (1- 2)கப்[கைக்கு இதமான சூடு போதும்]

எண்ணைய் - தேவையானளவு

பெரியவெங்காயம் [சிறிது சிறிதாக வெட்டினது] - 1

பச்சைமிளகாய்[சிறிய வட்டமாக வெட்டினது] - 3 - 6[உறைப்புக்கு மாதிரி]

கருவப்பிலை [சிறிது சிறிதாக வெட்டினது]- சிறிதளவு

லீக்ஸ் [சிறிய மெல்லிய வட்டமாக வெட்டினது]- ஒரு லீக்ஸ் ல் பாதி(25கிராம்)

கரட் (துருவியது) - 1(25கிராம்)

பீன்ஸ் [மெல்லிய வட்டமாக வெட்டினது]- 10 (25 கிராம் )

முட்டைகோஸ்[சிறிது சிறிதாக]- சிறிய துண்டு (15கிராம்)

உருளைகிழங்கு [துருவியது] - 1

[நீர்த்தன்மை இல்லாத காய்கறிகள் எதுவுமே போடலாம்.விரும்பினா காய்கறிகளை ஒரு நொடி மட்டும் வதக்கியும் போடலாம்.]

எப்பிடிச் செய்யிறது
***********************

1)கோதுமை மா [மைதாமா],உப்பு,பால்,பட்டர்,வெங்காயம்,பச்சைமிளகாய்,
கருவப்பிலை, லீக்ஸ்,கரட்,பீன்ஸ்,முட்டைகோஸ்,உருளைகிழங்கு
எல்லாத்தையும் போட்டு கலந்து எடுங்க. விரும்பினா தேங்காப்பூவும் கொஞ்சம் சேர்த்துக்கலாம்.[ஒரு பிடியளவு]

2)அதுக்குப் பிறகு மெல்லிய சூடான தண்ணீர் விட்டு நல்லா பிசைஞ்சு எடுங்க.நல்லா இறுக்கமாவோ இல்லாட்டித் தளர்வாகவோ பிசைய வேணாம்.தண்ணியை கொஞ்சம் கொஞ்சமா விட்டுப் பிசைஞ்சு எடுங்க.அப்ப சரியா வரும்.

(3)அதுக்குப் பிறகு குழைத்த மாவை சிறு உருண்டைகளா உருட்டி எடுத்து வட்டமாக தட்டி எடுங்க.

(4)அதுக்குப் பிறகு அடுப்பில் தோசைக்கல் வைத்து அது சூடானதும் அதில் கொஞ்சமாக எண்ணைய் தடவி ரொட்டியைப் போட்டு வேகவிடுங்க.அடுப்பை மெல்லிய சூட்டில வச்சிருங்க.அப்பதான் இரண்டு பக்கமும் உள்ளுக்கும் சரியா வெந்து வரும்.

காய்கறி ரொட்டி ரெடி.கண்டிப்பா செய்து பாருங்க.நல்லாயிருக்கும்.
சீக்கிரமாய்ச் செய்யக்கூடியதும் ஆரோகியமானதுமான சாப்பாடு.

பி.கு - கடைசில தோசைக்கல் இல்லன்னு சொல்லிட்டார்.அப்புறம் வாங்கிச் சுட்டேன்னும் சொன்னார்.

ஹேமா(சுவிஸ்)

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP