அதன்பிறகு அவள் பெரியம்மா இன்னும் தொடர்கிறாள்."அவன் ஒரு உதவாக்கரை.கோயில் மேளமும் தட்டிக்கொண்டு தொழில் துறையிலயும் உருப்படியில்ல.உங்க பெடியளோட சுத்திக்கொண்டு நல்ல தண்ணியும் அடிச்சுக்கோண்டு உருப்படாம சுத்திக்கொண்டு திரியுது காவாலியா"இன்னும் என்னென்னவோ அம்மாவுக்கு மோகனைப் பற்றி அலசிவிட்டு புதிதாய் ஒன்றை அம்மாவின் மனதில் விதைக்கத் தொடங்கினாள்.
தன் மூத மகள் திருமணம்செய்த இடத்தில்,அந்தக் குடும்பத்தில் அதாவது கொழும்பில் அழகான பெடியன் ஒருவன் இருப்பதாகவும் தாய் சிங்களப் பெண் என்றும் தப்பனார் எங்கள் சொந்தக்காரர் என்றும் பெடியன் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் பணி புரிந்து கொண்டிருப்பதாகவும் அம்மாவிடம் சொல்லி"நீ உன்ர அவரோடயும் பேசிக்கதைச்சு யோசிச்சு வை.எனக்கெண்டா நல்லது எண்டு படுது.அப்பிடி உங்களுக்குப் பிடிச்சுது எண்டா நான் அவையளை ஒருக்கா யாழ்ப்பாணம் வரச்சொல்றன்.பெடியனையும் கூட்டிவரச்சொல்றன்.எல்லாருமா சேர்ந்து பேசி முடிவெடுக்கலாம்தானே"என்று புயல் ஒன்றைக் கிளப்பிவிட்டுப் போய்விட்டா.
ரதி எந்தவிதமான தவறுமே செய்யவில்லை.ஆனால் தண்டிக்கப்படுகிறாள்.
"நீ படிச்சுக் கிழிச்சது போதும்"என்று அடுத்தநாளே படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.அவளும் எவ்வளவோ அழுது கெஞ்சிப் பார்த்துவிட்டாள்.
முடிவு இல்லவே இல்லை என்றாகிவிட்டது.ரதியின் அப்பாவைப் பொறுத்தமட்டில் குடும்பம்தான் அவர் உலகம்.அம்மா என்ன முடிவு எடுத்தாலும் குடும்பத்தில் நன்மைக்கே என்றிருப்பவர்.எனவே இங்கு அம்மாவின் முடிவே முடிவாய் இருக்கும்.ரதியின் மனதில் நிறையத் தத்தளிப்புக்கள்.மோகன் மீது அளவில்லாக் கோபம்.யாரிடமும் மனம்விட்டுக்கூட அழமுடியா அவள் அவலம்.
மாதங்கள் 3-4 வெறுமையாகக் கழிந்திருக்கும்.பெண் பார்க்க என்று கொழும்பில் இருந்து ரதிக்குப் பேசவிருக்கும் அவரும் அவர் தாயாரும் அவர் தம்பியாரும் வந்து இறங்கினார்கள்.எண்ணி ஒரு கிழமைதான்.ரதிக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.யாரிடமும் கேட்டு அறியவும் முடியவில்லை.வீட்டிலோ தம்பியும் தங்கைகளும் சிறியவர்கள்.அம்மா மட்டும் அடிக்கடி வெளியில் போய் வந்து கொண்டிருந்தா.ரதிக்கு ஓரளவு ஊகிக்க முடிந்தாலும் என்னதான் நடக்கிறது என்பது கேள்விக்குறியாகவே இருந்து கொண்டிருந்தது.நரகமாய் நொடிகள்கூட நகர்ந்துகொண்டு இருக்க அப்பாவும் வீடு வந்து சேர்ந்துவிட்டார்.அவளுக்கு ஏதோ நடக்கப் போகிறது என்று நிறைவாகப் புரியத் தொடங்கியது.
கொழும்பில் இருந்து வந்தவர் மாப்பிள்ளை என்றாகிவிட்டார்.வீட்டில் தம்பியும் தங்கைகளும் அத்தான் என்று கதைபேசத் தொடங்கிவிட்டார்கள்.
"மாப்பிள்ளைக்கு ஒரு கிழமைதானாம் விடுமுறை.அத்ற்கிடையில் திமணம் முடித்துக்கொண்டு வேலைக்குப் போய்விட வேண்டுமாம்."பெரியவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து முடிவெடுத்துவிட்டார்கள்.
ரதியை யாரும் சம்பிரதாயத்துக்குக்கூட சீண்டி அவள் மனவிருப்பத்தைக் கேட்பாரேயில்லை.மாப்பிள்ளை அத்தான் என்கிறார்கள்.ரதிக்கோ அவர் எப்படி இருப்பார் என்றுகூடத் தெரியாமல் மனதில் முட்டிய வேதனையோடு களை இழந்து நடமாடிக்கொண்டிருந்தாள்.
அவள் கவலையெல்லாம் திருமணம் வேண்டாம் படிக்க வேணும் என்பதாகவே இருந்தது.யார் அவள் மனதைப் படிக்க நினைத்திருந்தார்கள்.அவர்களுக்கு அவகாசமும் இல்லை.நேரமுமில்லை.
கல்யாணப் பரபரப்புத் தொடங்கிவிட்டது.
வீட்டில்.பலகாரச் சூடு.புடவை,நகை வாங்கல்.இதற்கிடையில் மாப்பிள்ளையும் தாயாரும் வந்தும் போனார்கள்.அக்கறையில்லாத் தேவையில்லா தேவையாய் இருந்த நாட்கள் ரதிக்கு அது.வந்து போனார்களே தவிர ரதிக்கு அவர் பெயர்கூடத் தெரியவில்லை.இன்னும் ஒரு விஷயமும் கூட.அவர்களுக்குத் தமிழ் பேசத் தெரியாது.ஊமைக்கும் ஊமைக்கும் திருமணமாகத் திகதியும் குறித்தாயிற்று.ரதிக்கு அக்டோபரில் அதாவது வருகின்ற அக்டோபரில்தான் வயது பதினெட்டு ஆகிறது.ஆனால் அதற்கு முன் டிசம்பரிலேயே பதினேழு வயதிலேயே அவள் பெரியம்மா ஏற்பாடு செய்து எல்லோராலும் தீர்மானிக்கப்பட்ட,ரதிக்கு யார்...எவர்...என்ன பெயர்...எப்படியிருப்பார் என்று தெரியாத அந்தக் கொழும்புப் பெடியனோடு அமைதியாகக் கோவிலில் திருமணம் நடந்தேறியது.(இன்னும் வருவாள்)
ஹேமா(சுவிஸ்)