Thursday, March 31, 2011

வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் திருமணம்.


திருமணம் என்பது இன்று அனைத்து மனித சமூகத்தினரின் வாழ்விலும் மகத்துவம் மிக்க புனிதமானதோர் சடங்காகத் திகழ்கிறது.ஆனால் திருமணச் சடங்கை நிறைவேறும் முறைதான் சமூகத்திற்குச் சமூகம் வேறுபடுகிறது. சமூகங்களில் நாகரீக வளர்ச்சி தோன்றுவதற்கு முற்பட்ட காலத்தை எடுத்துக்கொண்டால் " திருமணம் " என்பது தொடர்பான எண்ணக்கருவோ சம்பிரதாயங்களோ காணப்படவில்லை.

வேடுவனாக நாடோடி வாழ்க்கை வாழ்ந்த மனிதன் நாகரீக வளர்ச்சியின் பிற்பாடு ஓரிடத்தில் நிலையாக தன் வாழ்க்கையை ஸ்திரப்படுத்திக்கொண்ட காலகட்டத்தில்தான் திருமணம் பற்றிய சிந்தனை மனித சமுதாயத்தில் தோற்றமெடுத்தது. அந்த வகையில் தொன்மையான காலத் தமிழர்களின் வாழ்க்கையில் திருமணம் என்ற சடங்கே இருந்திருக்கவில்லை."களவு" வாழ்க்கையே நடைமுறையில் இருந்தது.

களவு வாழ்க்கை என்பது அன்பு அறிவு அழகு முதலியவற்றில் ஒத்திருக்கும். ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு காதல் கொண்டு உலகத்தார் அறியாத வண்ணம் மனமொப்பி வாழும் வாழ்க்கையாகும். காலப்போக்கில் இக்களவு வாழ்க்கையில் ஆண் மகன் தன்னை நம்பி வந்த பெண்ணை ஏமாற்றிவிட்டு மற்றாள் ஒருத்தியுடன் வாழ்க்கை நடத்தும் நிலை தோன்றியது.இவ்வாறு களவு வாழ்க்கையில் பொய்யும் பித்தலாட்டமும் தோன்றிவிட்டமையால் அறிவில் சிறந்த பெரியவர்கள் ஒன்றுகூடி திருமணம் என்கிற சடங்கை உருவாக்கினார்கள்.

 பெண்கள் தொடர்பான சமூகப் பாதுகாப்பு உடைமைகள் சொத்துக்கள் சம்பந்தமான பேணுகையை உறுதிப்படுத்தல் குடும்பக் கட்டுக்கோப்பை சீர்குலையாமல் கட்டிக்காத்தல் போன்ற தேவைப்பாடுகள் திருமணம் பற்றிய எண்ணக்கரு தோற்றமிட்டன எனலாம். ஒரு ஆண் பல பெண்களைத் திருமணம் செய்தல் ஒரு பெண் பல ஆண்களைத் திருமணம் செய்தல் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையேயான திருமணம் வெவ்வேறு பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கிடையேயான திருமணம் சட்டப்படியான திருமணம் ஒரு ஆண் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளல் எனப் பல்வேறு வகையான திருமணங்கள் வெவ்வேறு சமூகங்களில் தோற்றமெடுத்தன.இன்றைக்கு சுமார் 2 ,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர் தான் இயற்றிய தொல்காப்பியத்தில் எட்டு வகையான திருமணம் பற்றிக் குறிப்பிடுகிறார்.

* பிரம்மவிவாகம் :> நாற்பத்தெட்டாண்டு பிரமச்சரியம் காத்த ஆண்மகனுக்கு பன்னிரண்டு வயதுடைய கன்னியை ஆடை அணிகலன்களால் நன்கு அலங்கரித்துக்கொடுப்பது.

 * பிரசாபத்திய விவாகம் :> மைத்துனன் உறவுடையவனுக்கு பெண்ணின் விருப்பத்திற்கமைய புனிதச் சடங்குகள் மூலம் கொடுப்பது.

 * ஆரிட விவாகம் :> தகுதியுடைய ஒருவனுக்கு பொன்னால் பசுவும் காளையும் செய்து அவற்றின் நடுவே பெண்ணையும் நிறுத்தி அணிகலன்கள் அணிவித்து நீங்களும் இவைபோல வளமுடன் ஒற்றுமையாக வாழ்வீர்களாக என்று வாழ்த்தி நீர் வார்த்துக் கொடுப்பது.

 * தெய்வ விவாகம் :> வேள்வி நிகழ்த்தும் குருவுக்கு வேள்வித் தீயின் முன்வைத்து கன்னிப் பெண்ணைக் குருதட்சணையாகக் கொடுத்தல்.

 * கந்தர்வ விவாகம் :> ஆண்மகனும் கன்னிப்பெண்ணும் யாரும் அறியா வண்ணம் சந்தித்து கணவன் மனைவியாகக் உறவு கொண்டாடுதல்.

 * அசுரா விவாகம் :> மணமகனிடம் ஏராளமான செல்வத்தைப் பெற்றுக்கொண்டு பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பது.

 * இராட்சஸா விவாகம் :> தான் விரும்பிய பெண்ணை அவள் விருப்பத்திற்கும் சுற்றத்தார் விருப்பத்திற்கும் மாறாக பலவந்தமாகக் கடத்திச் சென்று அடைவது.

 * பைசாக விவாகம் :> தன்னை விடவும் வயதில் மூத்தவளிடமும் உறங்குகிற வளிடமும் கள்ளுண்டு மயங்கிக் கிடப்பவளிடமும் கூடி மகிழ்வது.

 தமிழர் வரலாற்றில் திருமணச்சடங்கு உருவாக்கப்பட்ட காலத்தில் அது மூவேந்தர்களுக்கு மட்டுமே உரியதாய் இருந்தது.பின்னர் அனைவருக்கும் இச்சடங்கு பொருத்தமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கும் உரிய சடங்காக மாறியது. பண்டைய காலம்தொட்டு இன்று வரையிலான காலப் பகுதியை எடுத்து நோக்கினால் மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தினரால் கலந்து பேசி ஒழுங்கு செய்யப்படும் திருமணங்களே செல்வாக்குச் செலுத்தி வகின்றமையை அவதானிக்க முடியும்.பெரும்பாலான திருமணங்கள் காதல் அடிப்படையிலன்றி பொருளாதாரம் குடும்ப கெளரவம் போன்ற இதர புறக்காரணிகள் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது.
மேலைத்தேய பாரம்பரிய திருமணங்களிலே திருமண மோதிரம் அணிவது கட்டாயமானதாக உள்ளது.மோதிரத்தின் வட்ட அமைப்பானது திருமணத்தால் ஏற்பட்ட பந்தம் என்றென்றும் முடிவுறாமல் நீடித்து நிலைக்கவேண்டும் என்பதை அடையாளப்படுத்துகிறது என்றும் மோதிர விரலிலுள்ள நரம்பு ஒன்று இதயத்துடன் நேரடியாக தொடர்புறுவதால் திருமணமானது இரு இதயங்கள் சம்பந்தப்பட்டது என்பதை எடுத்துக் காட்டுகிறது என்றும் நம்பிக்கை நிலவுகிறது.


 1500 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெரும்பாலான திருமணங்கள் வைபவரீதியாகவோ சாட்சியாளர்களை சாட்சி வைத்தோ நடாத்தப்படவில்லை.1563 ம் ஆண்டுப் பகுதியில் குறைந்தது இரண்டு சாட்சிகளுடன் வைபவரீதியாக திருமணம் நடத்தப்பட வேண்டுமென்பது நடைமுறைக்கு வந்தது. "தம்மி ஸ்பிறோட் என்ற மதபோதகர் திருமணமானது ஆண்களையும் பெண்களையும் பாவங்களிலிருந்து தடுக்கிறது எனக் கூறியுள்ளார்.


 லௌரா ரெனோல்ட்ஸ் என்பவர் 8 - 14 நூற்றாண்டு காலப்பகுதியிலான திருமணம் பற்றி பின்வருமாறு சொல்கிறார். திருமணம் என்பது ஆண் பெண் ஆகிய இருவரையும் இணைத்து வைக்கின்ற புனிதச் சடங்காகும்.ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காதலாலோ அன்றி வேறேதும் காரணங்காலாலோ ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணத்தில் இணையும்போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.இருவரும் தனித்தனியாக பாரியளவிலான திருமணப் பொறுப்புகளைச் சுமக்க வேண்டிய கடப்பாடு உடையவர்களாகிறார்கள்.


பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ள நிலைமையிலும் இடையிடையே மகிழ்ச்சிகரமான பொழுதுகள் அத்தம்பதிகளுக்கு கிடைக்கவே செய்கின்றன.அவ்வினிய பொழுதுகள் திருமண வாழ்வின் உறுதிப்பாட்டைக் கட்டியெழுப்ப உதவுவனவாக உள்ளன. திருமணம் என்பது காலங்காலமாக பல்வேறு பரிணாம நிலைகளைத் தொட்டு வளர்ச்சி கண்டபோதும் அதன் உள்ளார்ந்த தத்துவங்கள் பாரம்பரியமனவை.ஒவ்வொரு சமூகத்தினது திருமண முறையும் வேறுபட்ட நிலைமையிலும் அத்திருமணச் சடங்குகளில் பொதிந்திருக்கும் உட்கருத்துக்கள் அர்த்தம் நிறைந்தவை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.




எந்தச் சஞ்சிகையில் வந்தது.எப்போ வந்தது என்றும் தெரியவில்லை.பார்த்தி என்று எழுதியவர் பெயர் மட்டும் இருக்கிறது.இந்தப் பக்கம் மாத்திரம் என்னிடம் எப்போதோ பக்குவப்படுத்தப்பட்டிருக்கிறது.பகிர்ந்துகொள்கிறேன்.

Friday, March 18, 2011

கணவன்/கணணி/வீடு.

வீட்டில் கணணியே கதியாய்க் கிடக்கும் ஒரு கணவனுக்கும் மனைவிக்குமான உரையாடல் அல்லது சண்டையெண்டே வச்சுக்கொள்ளுவம்.

ஸ்டார்ட்...மியூசிக்...

மனைவி....
கோதாரில போன(கோதாரி....எனக்கும் தெரியேல்ல) மனுஷனுக்கு விடிஞ்சிட்டுது.வேலைக்கும் போய்த் துலையாது....அயந்து (தன்னை மறந்து) நித்திரை கொள்ளவும் மாட்டுதாம் இப்பல்லாம்.......உந்தாளை(இந்த+ஆளை) ....!

இஞ்சாருங்கோப்பா பல்லு விளக்கியட்டியளே.குளிச்சுக் கிளிச்சு கொட்டிக்கொண்டீங்களே. ஒண்டுமில்லையேப்பா.உண்ணாணை(சத்தியம்)கடவுளே இந்த மனுஷனைக் காப்பாத்து.அயந்து நித்திரை கொள்ளுதுமில்ல.சாப்பிடுதுமில்ல.குளிக்குதுமில்ல.விடிஞ்சாப் பொழுதுபட்டா இதுக்குள்ளயே கவுண்டு கிடக்கு.....!

அப்பா.... (கணவனை) இதே பொழுதாப்போச்சு உங்களுக்கு.வீட்டில இருக்கிறமோ செத்தமோ உங்கட குரங்குக் குட்டியள் என்ன செய்து துலைக்குதுகள் அதுகளோட நான் படுற பாடு...பாட்டு எல்லிப்போல(மிக மிகச் சிறிது)ஏதும் ஒண்டெண்டாலும் தெரியுமோ.....!

உங்களுக்கு இந்தக் குடும்பம் குட்டி மட்டும் அண்டாதோ(போதாதோ).அதோட உங்கட கண்ணுக்கும் கையுக்குமெல்லோ நாசம் வரப்போகுது.பேந்து (பிறகு)இரவைக்கு வந்து கையப் பிடி காலைப் பிடியெண்டு சொல்லுங்கோ குண்டு வைக்கிறன் உந்தப் பெட்டிக்கு.சொல்லிப்போட்டன் குண்டு கிடைக்காட்டிலும் உலக்கையால உடைப்பன் ஓம்....!

கணவன்...
ஏனப்பா....விடியக்காத்தால அரியண்டம்(கரைச்சல்)தாற.அண்டக்காக்கா மாதிரி கத்தித் துலைக்கிற.கெதியில(சீக்கிரமா)உனக்கு விசர்(பைத்தியம்)பிடிக்கபோகுது பார்.சின்னதுகளை அடிச்சாவது இருத்தி வைக்கலாம்.எதுக்கும் அடங்கவும் மாட்டாத சென்மம் ஒண்டு நீ.....!

எடியே...ஏனடி..இப்ப எல்லாம் நல்லாத்தானே இருக்கு.ஏதும் சொல்லி நான் செய்யாம இருக்கிறனே.நொய் நொய் எண்டபடி.....உன்னைச் சொல்லிக் குற்றமில்ல.எனக்குச் செருப்பால குடுக்கவேணும்.உன்ர கொப்பரைக்(அப்பா)கூப்பிடு முதல்ல.வந்திட்டாள் சும்மா குளறிக்கொண்டு...அவளுக்கு எப்பவும் ஏதோ ஒரு விண்ணாணம் (புதுமை/மாசாலம்) இருக்கும் என்னோட கொழுவ(சண்டை) ......!

மனைவி...
ஏன் அந்த ஆளை இங்க இப்ப.கருப்பு (சாராயம்) அடிச்சுப்போட்டு ஊரெல்லாம் பம்பலா விடுப்புக் (வம்பு அளத்தல்/கிசுகிசு) கொண்டு திரியும்.அந்தாளை இழுக்காமச் சரிவராது உங்களுக்கு....!

என்னப்பா நீங்கள் வேலையெண்டு எங்கயோ போறியள்.அங்கயும் என்ன செய்யிறியள் எண்டும் தெரியேல்ல.அதுவும் ஒழுங்காப் போறேல்ல.சரி போறியள் எண்டு நான் கண்மூடி முளிக்க திருப்பி வந்து நிக்கிறியள்.சரி எல்லாத்துக்கும் கத்தக்கூடாதெண்டு நான் ஒண்டும் கதைக்காம இருந்தா குந்திவிடுவியள் இந்தக் கொள்ளைல போறதுக்கு முன்னால......!

உதை (அதை)அடுப்பில வச்சு எரிக்கிறன் ஒரு நாளைக்கு.இருங்கோ.கத்திக் கத்தி எனக்கு மூலம்தான் வந்ததுதான் மிச்சம்.வீட்டில காஸ் இல்ல.அடி வளவுக்கு அந்தத் தென்னை மரம் பாறிக்கிடக்கு.பின்பக்கச் சிவரெல்லாம் பாசி பிடிக்குது எத்தினை வேலை கிடக்கு வீட்ல.இதுக்கு நான் ஆரைப் பிடிக்கிறது.எனக்கு வாற ஆத்திரத்துக்கு(கோவம்)கோடாலி எடுத்துக்கொண்டு வரவே இப்ப...!

உங்க பாருங்கோவன்......உது பெரிய பகிடியாவெல்லோ(நகைச்சுவை)கிடக்கு.என்னவோ இதில இவர் கருத்துச் சொல்லேல்ல எண்டா உலகமே பிரண்டுபோமாம் (புரண்டு).என்னமோ இதுக்குள்ளாலதான் வருமானம் வாறமாதிரியெல்லோ.இருங்கோ உந்தக் கதிரையைக் கொத்தி மூலைக்க போடுறன் முதல்ல....!

கணவன்....
கவனமாக் (நிதானமா)கேள்.விசர்க்கதை கதையாதை.உனக்குத் தெரியுமோ நாங்கள் உதுக்குள்ளால அதான் இணையத் தளத்துக்குள்ளால தமிழ் வளக்கிறம்.ஏன் அதுவும் வயித்தெரிச்சலே உனக்கு.உதுக்கு முதல் கத்திக்கொண்டிருந்த...உதில வாற இழவுப் படங்கள் நல்லதோ கெட்டதோ அதை டவுண்லோட் பண்ணிப்போட்டு அதைப் பாத்துக்கொண்டிருக்கிறன்.
அதே உலகமாக் கிடக்கிறியள்....எங்களை பற்றிக் கவலைப்படமாட்டியள் எண்டு.அது உனக்குப் பிடிக்கேல்ல எண்டுதானே புளொக்கர் எழுதி அப்பிடியே தமிழையும் வளப்பமெண்டு வெளிக்கிட்டன்.இதுக்கும் ஆக்கினை (கரைச்சல்)தாற.நீ ஒரு நச்சுப்பலியடி.....!

மனைவி...
ஏனப்பா உந்தத் தமிழ் இவ்ளோ நாளும் வளந்துதானே இருந்தது.ஏன் தேய்ஞ்சுபோச்சே...நீங்கள் வளக்கிறன் வளக்கிறன் எண்றியள் புளுடா விடாதேங்கோ.படம் பாக்கிறயளோ...தமிழ் வளக்கிறியளோ....வளவளத்த ஆக்களோட எல்லாம் வம்பளக்கிறியளோ என்னண்டாலும் உதுக்குள்ளதானே கிடக்கிறியள்.எல்லாம் ஒண்டுதான்.....!

என்ன.....எப்பிடி....எப்பிடி....ஓம்...ஓம்...நான் நச்சுப்பல்லிதான்.அதுதான் கட்டிக்கொன்டு அழறன்.உங்கட சாப்ப்பாடுக்குள்ளதான் ஒரு நாளைக்கு விழுவன் பாருங்கோ.அது கிடக்கட்டும்.

ஏனப்பா தெரியாமத்தான் கேக்கிறன்.வீட்ட வந்தால் எங்களோட எல்லாம் கதைச்சுச் சிரிக்கவேணும் எண்ட எண்ணம் வராதோ உங்களுக்கு.
இண்டைக்கு என்னென்ன வேலைகள் செய்தனீ.ஆரெல்லம் வந்தவையள்.உங்கட குரங்குக்குட்டி என்ன செய்து வைக்குது....ஏதாவது உங்கட மண்டைக்குள்ள கவலை கிவலை கிடக்கோ இல்லாட்டிக் களிமண்ணோ.

வடிவாச் சாப்பிடக்கூட (நிறைவாக சாப்பிட) மாட்டியளாம்.வண்டிகூட(வயிறு) வத்திப்போச்சு பாருங்கோ.ஏதாவது காதில எப்பன்(கொஞ்சம்)எண்டாலும் விழுதேப்பா உங்களுக்கு.நான் ஒரு விசரியாக் கத்துறனெல்லே....!

கணவன்.....
ஹும் ...என்னப்பா சொன்னனீ இவ்வளவு நேரமும்.இவன் நசர் ஏதோ கேட்டவன் அதையே யோசிச்சுக்கொண்டிருந்திட்டன்.திருப்பி ஒருக்காச் சொல்லு.இனிக் கவனமாக் (அவதானமா) கேப்பன்...!

மனைவி...
ஹும்...தூரம் துலைல(காது கேக்கேல்ல).நான் மாரித் தவளைமாதிரிக் கத்திக்கொண்டிருக்கிறன்.சோத்தில உப்பு இல்லையெண்டு சொன்னனான்.நிப்பாட்டுங்கோ கொம்யூட்டர.இப்ப நீங்கள் எழும்பி வாறியளோ இல்லையோ இப்ப உடைப்பன் இப்ப உடைப்பன் சொல்லிட்டன்.மூண்டு தரம் சொல்றதுக்கிடையில எழும்பிடுங்கோ....ஓம்.....!

கணவன்...
இஞ்சாரப்பா எப்பவாலும் சொல்லியிருக்கிறனே நான் உன்னை மண்டூகம் மாரித்தவளையெண்டு.நீயாச் சொல்ற ஆனாச் சரியாச் சொல்ற.....!
சரி.....சரி ஆறுதலாச் (சாவகாசம்) சொல்லு ஏன் கத்துற.என்னெண்டு ஒருக்கா கேக்கிறன்...!

மனைவி.....
சும்மா சாட்டுக்குக் (சாக்குப் போக்கு)
கொஞ்சாதேங்கோ.இஞ்சருங்கோப்பா...நீங்கள் குடும்பம் நடத்திற லட்சணம் இப்பிடியோ.இனி என்ன புத்திமதி கல்லில உரச்சுத் தீத்தியே (ஊட்டு) விடுறது நான்.உங்கட கொப்பரும் கொம்மாவும் எங்களை ஏமாத்திப்போட்டினம்.

உங்களைப் பற்றிப் புளுகோ(பொய்) புளுகெண்டு புளுகிச்சினம் கல்யாணம் செய்து தரேக்க.இப்ப என்னட்ட தள்ளிவிட்டிட்டு....
வரட்டும் அவையள் இரண்டு பேரும்...!

வீடல் சீனி தொடக்கம் துணி தோய்க்கிற பவுடர் வரைக்கும் எப்பனும்(கொஞ்சமும்) இல்ல..பாத்ரூம் நாறுது.இதெல்லாம் ஆரப்பா செய்ற வேலை....!

கணவன்....
ஏனப்பா எல்லாம் முடிச்சிட்டியே.உன்ர ஆக்கள்தானே வந்து வந்து போய்க்கொண்டிருக்கினம்.அதுக்கு நானே பொறுப்பு.....!

மனைவி....
உடன.....உடன் பார் எங்கட ஆக்களை வம்புக்கு இழுக்கிறதை.
என்ர வாயைக் கிளறாதேங்கோ.நாங்கள் கடையளுக்குப் போய் சாமான்கள் வாங்கி இரண்டு மாசமாகுது.நீங்கள் கொம்யூட்டருக்கேப்பா தாலி கட்டினீங்கள்.இவன் சின்னவனையும் வச்சுக்கொண்டு என்னால என்ன செய்ய ஏலும்......!

வர வர உங்களுக்கு ஏத்தம்(திமிர்).ஏனப்பா...கொம்யூட்டர் வீட்ல இருக்கிறது பொழுது போகாத நேரத்தில ஏதாச்சும் பாக்கப் பயன்படத்தானே.சமையல் சாப்பாடு இல்லாம வெளில எங்கயும் போகாம யாரையும் பாக்காம அதுக்குள்ளயே கிடந்தா என்னப்பா ஞாயம் இது ....!

இண்டைக்கு எனக்கொரு முடிவு தெரிஞ்சாகவேணும்.சொல்லிப்போட்டன் ஓம்.இந்த வீடல் நான் இருக்கோணும்.இல்லாட்டி கொம்யூட்டர் இருக்கவேணும்.நானோ இல்ல அதோ எண்டு பாத்துக்கொள்றன் இண்டைக்கு....!
கணவன்....
எடியே ஏனடி...லூசுத்தனமா கொலை வெறியா மல்லுக்கட்டிக்கொண்டு(வீண் வாதம்)அரிகண்டம்(கறகறவெண்டு அரிக்கிறது)தாற.இப்ப நான் என்ன செய்துபோட்டன்.வெளுவை (அடி) வாங்கப்போற....ஓம் சொல்லிப்போட்டன்.விசர் (இதில் விசர் எரிச்சல்/கோபம்) வருது எனக்கு.ஏதெண்டாலும் சொல்லு பாப்பம்.கொலைக் குற்றம் செய்தனான் மாதிரி இருத்தி வச்சுக் கேள்வி கேக்கிற......!

மனைவி....
எனக்கு வாற வரத்துக்கு உங்களை...உங்க தமிழ் வளத்தவை வளத்துக் கொண்டிருக்கிறவை எல்லாரும் இப்பிடியே குடும்பம் நடத்தினவையள்.ஒருக்காச் சொல்லுங்கோ கொஞ்சம்....!

கணவன்.....
உந்த இடக்குமுடக்கா கேள்வி கேட்டு என்னோட கொழுவிக்கொண்டிருக்காத(சண்டை போடாத).என்னட்ட பதில் இல்ல.இப்ப உனக்கு என்ன வேணும் சொல்லித் துலை(கோவமா....சொல்லி முடி) ......!

மனைவி.....
ஓஓ....அதுசரி.நான் கேட்டதுக்கெல்லாம் அப்பிடியே டக் டக் எண்டு பதில் சொல்லிக் கிளிச்சுப்போட்டார்.உங்க சனங்களெல்லாம் (ஆட்கள்) நாக்கு வளைக்குதுகள் (கிண்டல்/எள்ளி நகைத்தல்) பிறகு கதைக்கிறியள்......!

கணவன்.....
ஆரப்பா கதைச்சவை.அவையள் எரிச்சல்ல கதைச்சிருப்பினம்.
ஏனெண்டா அவையளின்ர மனிசன்மாருக்கு (கணவன்) கொம்பியூட்டர் தெரியாதெல்லோ.சனங்களை விடு.

பாவம் அப்பா நீ.சரியா வயக்கெட்டுத்தான் (மெலிஞ்சு) போன.சரி நான் இனி ஒழுங்காச் சாமானெல்லாம் வாங்கித்தாறன்.செல்லமெல்லே அலட்டாதையப்பா....தேத்தண்ணி ஒண்டு தா....நல்லபிள்ளைபோல.
இண்டைக்கு முழுக்க கதைச்சுக்கொண்டேயிருக்கலாம் சரியோ......!

மனைவி....
தேத்தண்ணியும் இல்ல ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல.எல்லாச் சாமான்களும் முடிஞ்சுபோச்சு.முதல்ல சொல்லுங்கோ.உங்க சபை சந்தில தான் என்ர மனுஷன் நல்லவர் பெரி....ய இவரெண்டு நான் விட்டுக்குடுக்காம சொல்லிகொண்டு திரியிறன்.வீட்டுக்கு உதவாத மனுசனை என்ர தலைல கட்டி விட்டுப்போட்டு அவையள் நிம்மதியா இருக்கினம்.....!

கனக்கக் கதைக்கவேண்டாம்.எனக்குத் தெரிஞ்சாகவேணும் இண்டைக்கு நானோ கொம்பியூட்டரோ எண்டு.....ஓம்......!

கணவன்....
அடி...குரங்கு வர வர உனக்கு எள்ளளவும் (கொஞ்சம்கூட) அறிவில்லாமப் போச்சு.ஆரோட ஆர் போட்டி போடுறது.அது வாயில்லா சென்மமெல்லே....!

மனைவி....
என்னை விசராக்காதேங்கோ.உந்தச் சனியனால நான்தான் வாயில்லாப் பூச்சியா அடைபட்டுப்போனன்.

இஞ்சப்பா....இஞ்சப்பா நான் இஙக புலம்பிக்கொன்டிருக்கிறன்.திரும்பவும் அங்க என்ன பார்வை வேண்டிக்கிடக்கு உங்களுக்கு.உங்களை...உங்களை....!

அப்பா....அப்பா எங்க போறியள்.....!

கணவன்....
கொஞ்சம் பொறடி வாறன்.பிறத்தால கூப்பிடாத (பின்னுக்குக் கூப்பிடாத) ....தீர அயத்துப்போனன் (முழுசா மறந்து). புதுமொடல் கொம்யூட்டர் ஒண்டுக்கு ஓடர் பண்ணினனான் வரச்சொன்னவங்கள்.நசர் பாத்துக்கொண்டு நிப்பான்.சரி வரேக்க ஏதும் வாங்கிக்கொண்டு வரவோ.கெதியா வந்திடுவன்.....!

( தன்பாட்டுக்கு மனைவி புலம்புறா....)

அய்யோ....அய்யோ...இப்பிடிக்கொத்த (இப்பிடியான) மனுசனை வச்சுக்கொண்டு நான் கட்டியழுறன்.உங்கட வீடுகளிலயும் இப்பிடித்தானோ.
ஒருக்காச் சொல்லுங்கோ.புளுகத்தைப் (புளகம்/சந்தோஷம்) பாருங்கோவன்
புதுசொண்டு வரப்போகுதெண்டு.கரந்தை (மாட்டு வண்டில்) இழுக்க விடாம உந்தாளை ஏன் படிப்பிச்சவையோ தெரியேல்ல.

புதுக் கோதாரியோ.கொண்டு வரட்டும்.உந்தப்பெடி (அந்தப் பெடியன்) நசர்
கும்மியடிச்சுக்கொண்டு இந்தப் பக்கம் வரட்டும்......இருக்கு அவருக்கும்.....!

நசரேயனின் ஒரு பதிவின் சாரத்தோடு.....என்னுடைய மொழிக்கலவையும்.

முக்கிய குறிப்பு.....>நசர் இரண்டாவது குழந்தைக்கு அப்பாவாகியிருக்கிறார்.அதனால் தற்சமயம் கும்மியைக் குறைச்சு வீட்ல பொறுப்பான அப்பாவா அம்மாவுக்கு உதவியா இருக்கிறாராம் !
ஹேமா(சுவிஸ்)

Friday, March 11, 2011

சுற்றிக் கிடக்கும் சந்தோஷம்.

"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா"என்று பாடினான் பாரதி.எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று வியந்து மகிழ்கிறானே எப்படி? அவன் கண்ட ஆனந்தம் அவன் கண்ட இன்பம் எங்கிருந்தது? எப்படி வந்தது?

நித்தமும் எத்தனை பேரை வேலை இடங்களில் தெருவில் என்று நிறையப்பேரைச் சந்திக்கிறோம்.எதிர்ப்படும் முகங்களில் குறைந்த அளவு சந்தோஷப் பூக்களே சிரிக்கிறது.மிகுதிப்பேர் எல்லாமே மிகுந்த சிந்தனையும் கேள்விகளும் கவலைகளும் நிரம்பிய முகமாய் அல்லவா தெ(தி)ரிகிறார்கள்.இதில் எல்லோருமே சந்தோஷத்தைத் தேடுபவர்களாக இருக்கிறார்களே தவிர பெரியவன் சின்னவன் பணக்காரன் ஏழை என்கிற பாகுபாடே தெரியவில்லை.எங்கே வாங்கலாம்.என்ன விலை.எங்கு தெரிகிறது.கிடைக்குமா சந்தோஷம்.

இந்த நேரத்தில் முல்லா கதை ஒன்று.முல்லா வெளிச்சமான இடத்தில் எதையோ தேடிக் கொண்டு இருந்தார்.அதைக் கண்ட அவர் நண்பர் ஒருவர் "என்ன தேடுகிறீர்கள்?" என்று கேட்டு உதவ முன் வந்தார்."ஒரு தங்க நாணயம் தொலைந்துவிட்டது" என்றார் முல்லா.அவரும் சிறிது நேரம் முல்லாவுடன் சேர்ந்து தேடினார்.தங்க நாணயம் கிடைக்கவில்லை.நண்பர் முல்லாவைக் கேட்டார்."சரியாகச் சொல்லுங்கள்.இங்கே தான் நாணயத்தைத் தொலைத்தீர்களா?"முல்லா சற்றுத் தொலைவில் உள்ள இருட்டான இடத்தைக் காண்பித்து விட்டு "அங்கே தான்" என்றார்.நண்பருக்குக் கோபம் வந்து விட்டது."அட முட்டாளே.அங்கே தொலைத்து விட்டு இங்கே வந்து தேடினால் அது எப்படிக் கிடைக்கும்!" என்று முல்லாவைத் திட்டினார்.பதிலுக்கு முல்லாவும் நண்பரைக் கோபித்துக் கொண்டார்."நீ தான் முட்டாள்.இருட்டான இடத்தில் தேடினால் எதாவது கிடைக்குமா...எதையும் வெளிச்சத்தில் தேடினால் தானே கிடைக்கும்.அதனால் தான் வெளிச்சத்தில் தேடுகிறேன் "சிறிது நேரம் முல்லாவுடன் சேர்ந்து நாணயத்தைத் தேடியதை நினைத்து அந்த நண்பர் தலையில் அடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

முட்டாள்த்தனமாக நமக்கு சிரிப்பைத் தந்திருந்தாலும் சந்தோஷத்தைத் தேடும் நாமும் அப்படித்தானே.மனதில் தொலைத்துவிட்டு மற்ற இடங்களில் தேடினால் எப்படி.நாட்டில் போர் என்று ஓடி வந்தோம் உங்களுக்குள் சிலர் பொருள்தேடி ஓடி வெளிநாடுகள் வந்திருப்பீர்கள்.கிடைத்ததா?என்னைக் கேட்டால் இல்லையென்பேன்.எல்லாம் இருந்தும் சந்தோஷம் என் தேசத்தில்தான்.அங்குதான் தொலைத்ததாய் மனம் சொல்கிறது.

சிலசமயங்களில் மனதோடு கதைத்தும் பார்த்திருக்கிறேன்.என்ன வேண்டும் உனக்கு ஏன் அலறுகிறாய்.என்ன கிடைத்தால் சந்தோஷப் பாடல் பாடுவாய்.கஸ்டப்பட்டு கொடுக்க முயற்சியும் செய்திருக்கிறேன்.கொடுத்தால் சிரிக்கிறது.சிரிப்பு சில நாட்களுக்கு மட்டுமே.ஒன்றை நிறைக்க மனம் மற்றொன்று கேட்கும்.அது மட்டும் கிடைத்து விட்டால்....என்று திரும்பவும் புலம்பும்.

அது வேண்டும் இது வேண்டும் என்று இந்த மனக்குரங்கு பாடாய் படுத்த ஒவ்வொரு தேவையாகப் பூர்த்தி செய்யக் கிளம்பும் மனிதன் தொடுவானத்தைத் தொட்டு விட முடியும் என்கிற நினைப்பில் ஓடும் வேலையைத் தான் செய்கிறான்.எத்தனை வேகத்தில் ஓடினாலும் தொடுவானம் தொலைவிலேயே நிற்பது போல அடைய முடியாத இலக்காகவே இருக்கிறது சந்தோஷம்."மனம் இருந்த இடத்தில் இருந்து கொண்டே சொர்க்கத்தை நரகமாகவும் நரகத்தை சொர்க்கமாகவும் மாற்றும் வல்லமை பெற்றது".

மனதிற்கு ரசாயன வித்தை தெரிகிறது.மகிழ்ச்சியாய் இருக்கவும் தெரியும்.அழுது குளறவும் தெரியும்.ஒரே விதமான சூழ்நிலையிலும் இந்த இரண்டில் எதையும் தேர்ந்தெடுக்கும் விஞ்ஞான வித்தை தெரியும்.பிறகு ஏன் இந்த மனம் சோகமாகவே இருக்கிறது?ம்...காரணம் அந்த மனதை சரியான படி வழிநடத்த நாம் மறக்கிறோம்.தவறான செய்திகளை மனதிற்குக் கொடுத்து தவறான நம்பிக்கைகளை மனதில் ஏற்படுத்தி மனம் சோகப்படும் போது அது நியாயம் தான் என்று நாம் நியாயப்படுத்தி மனதைத் தவறாகவே வழி நடத்துக்றோம்.

அலமாரி நிறையச் சேலையும் நகையும் இருந்தால்,விடுமுறை என்றால் ஊர் சுற்றினால்,மூக்கு முட்டத் தண்ணியடித்தால்,உன்னால் முடியாவிட்டாலும் கடன் வாங்கியாவது வாழ்வை உயர்த்தினால்,உன்னை மிஞ்ச ஆளில்லை என்று பலர் புகழும் உச்சியில் இருந்தால்...இவையெல்லாம் முடியாவிட்டாலும் சந்தோஷமென்று தவறான கருத்துகளை மனதில் பதிய வைத்து விட்டால்....!

பொய்யை அஸ்திவாரமாகக் கொண்டு எதை அடைந்தாலும் அது நிலைத்து நிற்காது. மேலே சொன்ன தவறான பொய்யான அனுமானங்களைக் கொண்டு அடையும் மகிழ்ச்சிகளும் அதனாலேயே வந்த வேகத்தில் காணாமல் போகிறது.

100% சந்தோஷம் தாங்கியபடி பிரச்னையே இல்லாத வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை.பிரச்சனையைத் தீர்க்க முடிவதுதான் முடிவில் சந்தோஷம்.தடங்கலே இல்லாமல் கடந்திருக்கிறோமா வாழ்வை.தடங்கலைத் தாண்டி முன்னேறுவது முயற்சியின் சந்தோஷம்.எதிலும் ஒரு நன்மையைப் பார்ப்பதும் எதிலும் ஒரு பாடத்தைப் படிப்பதும்தான் திருப்தியான சந்தோஷமாகும்.

எம் பார்வையிலும் வித்தியாசம் வேண்டும்.ஒரு விஷயத்தை எப்படியும் பார்க்கலாம்.மனமே காரணம்.ரோஜாவில் முள் என்றும்,முள்ளில் ரோஜா என்றும் பார்க்கலாம்.பாதிக்குவளை காலியாக இருக்கிறது என்றும்,பாதிக்குவளை நிறைந்திருக்கிறது என்று திருப்திப்பட்டும் கொள்ளலாம்.இந்த இரண்டு விதங்களில் எப்படிப் பார்த்தாலும் எப்படிச் சொன்னாலும் அது உண்மையே என்றாலும் நல்ல தன்மையை கோடிட்டுக் காணும் கலையை எங்கள் மனதிற்குக் கற்றுத் தந்தால் என்றும் எதிலும் சந்தோஷமே மகிழ்ச்சியே !

நெஞ்சே நெடுநாளாய்
ஒரு நெருடல் எனக்குள்.
என்னதான் நடந்தது உனக்கு
தனித்துவிடப்பட்ட
கடலின் இரைச்சலாய் ஒரே கூச்சல்.

எனக்கு மட்டுமே கேட்கிறது.
என்னதான் நேர்ந்தது
தனிமையின் வேதனையா
முதுமையின் அவதியா
எதுவானால்தான் என்ன
உனக்கு நீயேதான் துணை
பிறகென்ன தனிமை
நேற்றைய நினைவுகளே
இன்றைய எண்ணங்களின் பலம்.

தனிமைக்கு அது இனிமையே
தனிமை என்ன புதிதா உனக்கு
உறவாய்ப்போன ஒன்றுதானே
உறவென்று உன்னோடு
உள்ளிருந்து உறவாட
உனக்கென்று உயிர்வாழ
பிறந்தவர் யாருமில்லையே
தெரிந்திருந்தும் பிறகேன் அலறல்.

சல்லிக் கற்களைப்போல
தனித்துவிடப்பட்ட குயிலின் சோகம்போல
நாளெல்லாம் பொழுதெல்லாம்
பெரும்குரலெடுத்து ஒப்பாரியாய்
உன் ஓலம் ஓயாமல் ஒலிக்கிறது.

எதைக் கொண்டு வந்தாய்
எதை இழந்தாய்
எதை உனதென்பாய்
எல்லாம் இரவல்தானே
உறவுகளும் இதன்வழியே
யாரோடு இணைந்திருந்தாய்
யாரைவிட்டுப் பிரித்தெடுக்கப்பட்டாய்
பயப்படுகிறாய் வாழ்க்கையைப் பார்த்து
அதனாலேயே அழுகிறாய்.

வேதனைப்படுகிறாய் விரக்தியடைகிறாய்
இரத்தம் சொட்டச் சொட்ட
உன்னைப் பிய்த்து
பதனிட்டுப் பார்த்தனரோ
மௌனத்தின் அம்புகளால்
துளைத்தெடுத்தனரோ
இல்லையென்றால்
சொற்களால் கொன்றனரோ.

சொல்லியழு நெஞ்சே
பாரம் கொஞ்சம் குறையுமே
அப்பா அம்மா அண்ணா அக்கா
பின்பு கணவன் குழந்தைகள் யார்
இவர்கள் தங்கிப் போன வழிப்போக்கரே
உனக்கென்று உன் ஊணோடு உயிரோடு
உள்ளுருகி இன்பத்திலும் துன்பத்திலும்
அன்பு தர யார் என்று அரற்றுகிறாயா
அழு நன்றாய் அழு...
அழ உனக்கு நிறையச் சுதந்திரம் உண்டு
ஆனால் சொல்லியழு.
உன் இதயத்து நரம்பை அறுத்து
வீணைக்குத் தந்தியாக்கிப்
பின் வாசிக்காமல் போனது யார் சொல்லியழு.

நன்மையோ தீமையோ விதி என்ற பெயராலே
எமக்கு வேட்டு வைக்கும் காலமே
கொஞ்சம் நின்று போ.
இதயத்து நரம்புகளை அறுத்த பின்னும்
தன் உறவு தேடியலையும்
நெஞ்சின் சோகம் கேள்.
அகிலத்தின் அத்தனை அவலங்களின்
ஓலங்களை கேட்டலையும் உனக்கு
இந்த நெஞ்சின் நீள் அழுகையும் கேட்கட்டுமே!!!
(2000/01/07)

எட்டிப் பறந்த சந்தோஷத்தை எட்டிப்பிடிக்க ஒற்றை வழி !

Tuesday, March 01, 2011

ததரினன தாத்தா.

ஐந்து நாட்கள் தொடர் லீவு.வெளில குளிர்ப்பூக்களின் சிதறல்.கணணியும் இந்த நேரம் பாத்து பிச்சுக்கொண்டு போய்ட்டுது.புதுசு புதுசாக் கிடக்கு.இன்னும் சரியாக் கையாளவோ அதுக்கு என்னென்ன செய்யவேணுமோ அரைகுறையா...எதுவும் விளங்கேல்ல.வெளில பார்த்தா அமைதியான இலையில்லா மரங்கள்.பூனையொன்று குறுகி நடந்தபடி.வேற என்ன செய்ய நான்.வானொலியில் "பொட்டு வைத்த முகமோ...".கூரையில்லா வீட்ல முகடு பாத்துப் படுத்துக்கிடக்கிறன்.அப்போ என்ன ஆகும்.ஒரே ஊர் ஞாபகம்தான்.

அதோட போன கிழமை தமிழ்நதி அக்கான்ர ஒரு பதிவும் வாசிச்சன்.அதுதான் இந்த ஞாபகச் சிதறல்கள்.சுற்றம் சூழல் எத்தனை மனிதர்கள்.பார்ப்போம் பழகியிருக்கமாட்டோம். சிரித்திருப்போம் பேசியிருக்கமாட்டோம்.
சொந்தமாயிருக்கும் சண்டைபோட்டதால் போயிருக்கமாட்டோம்.ஆனால் அத்தனைபேரும் ஞாபகத்தில் அடிக்கடி வந்துபோகும் உறவுகள்.நம்மவர்கள்.சொந்தங்கள்.யார் எங்கு.இப்போ இருப்பார்களா இல்லையா என்றும் தெரியவில்லை.பெருமூச்சில் கரையும் அவர்கள் முகங்கள்.சிலசமயங்களில் ஒருவேளை செத்திருந்தால்.....இனிக் காணவே முடியாதே.எத்தனை வருடங்களின் வேகப் பாய்ச்சல்.

அந்தக் கதை வாசிச்ச பிறகு வந்துபோகும் ஒருமுகம் எங்கள் கிருஷ்ணமூர்த்தித் தாத்தா.நாங்கள் அவருக்கு வச்சிருக்கும் பெயர் என்ன தெரியுமோ..."ததரினன தாத்தா".ஏனென்றால் ஏதோ ஒரு இராகம் சத்தமாய் முணுமுணுத்தபடிதான் எந்த நேரமும்.நாய்க்கு பூனைக்கும் அதே ராகம்தான்.அந்த வயதில சந்தோஷ ராகமா துக்கமா தெரியாது.நாயை அடிச்சுக் கலைக்கவும் ராகம்தான்.

அவரை எல்லாருக்கும் தெரியும்.அவர் பெரிய பேர் புகழான மனுஷன்மாதிரித்தான் எங்கட ஊர்ல.இத்தனைக்கும் அவர் ஒரு சாதரண கோயில் தவில்காரர்தான்.ஆனால் குஞ்சு குருமான்ல இருந்து பெரிய பெரிய மாடிவீட்டுக்கார மகேஸ்வரி அக்கா,தாவடிச்சந்தி தாண்ட வரும் தவறணைச் சின்னத்தம்பியண்ணை,றோசாப்பூக்கடை தயா,கொக்குவில் பள்ளிக்கூட அதிபர், சந்திப்பிள்ளையார் கோயில் ஐயர் வரைக்கும் அத்துப்படி இந்தப்பெடி ததரினானானா.

காக்கா வருது...இந்தாபூனை...பிள்ளைபிடிகாரன் வாறான்...அங்கபார் நிலாவில பாட்டி சம்பல் அரைக்கிறா....எந்தப் பூச்சாண்டிக்கும் மசியாத சாப்பிட மறுக்கும் சின்னனுகள் இந்தா வாறார் ததரினனா தாத்தா என்றால் கண்ணை உருட்டித் தேடியபடியே எப்பிடி என்றே தெரியாமல் சாப்பிட்டுவிடுவார்கள்.அதற்காக குழந்தைகளுக்கு வில்லன் இல்லை அவர்.எப்போதும் வேட்டி மடிப்பில் ஏதோ ஒரு இனிப்பு வகை இருந்துகொண்டேயிருக்கும்.கோயிலால் கொண்டுவரும் பொங்கலோ மோதகமோ வடையோ வழியிலேயே கொடுத்துக் கொண்டாடிவிடுவார் தாத்தா.வீட்டிலே சின்னாச்சிக் கிழவி சமைக்காம இவர் சாப்பிடக் கொண்டு வருவாரென்று பாத்துக்கொண்டு பட்டினியாக் கிடக்கும் பாவம்.

தாத்தா ஒரு தண்ணிக்காக்கா.தண்ணியடிக்காத பகல் நேரங்களில் நிறையக் குழந்தைகள் சுற்றிய றாட்டினம்மாதிரித்தான் அவர்.ஒரு ஆள் தலையிலயும் முதுகிலயுமாய் யானை விளையாட்டெல்லாம் நடக்கும்.இருக்கிற கடைசிச் சில்லறை வரைக்கும் ஏதோ எல்லாம் வாங்கிக் குடுத்திடுவார்.சின்னாச்சி திட்டினா..."சும்மா இரடி உதுதான் எங்களுக்கு ஒரு குஞ்சு இல்லாமல்போச்சு...."என்று முடிக்கும்போது தனக்கொரு குழந்தையில்லாத ஆதங்கம் வெடித்துச் சிரிப்போடும் ஏதோ ஒரு இராகத்தோடும் சின்னாச்சியின் காதிலயும் பட்டுப் பறக்கும்.

பகல் நேரங்களில சின்னாச்சியைத் தூக்கி வச்சுக் கொண்டாடுவார்.அம்மா ஆச்சி எணை எண்டபடி பூனைக்குட்டிபோல பின்னுக்கும் முன்னுக்கும் திரிவார்.சின்னாச்சியும் எல்லாம் மறந்து அவருக்கு என்ன பிடிக்கும் எண்டு தேடித் தேடி வாங்கிச் சமைப்பா.மீன் இறைச்சி எண்டு வாங்கிக் கொண்டு வந்து குடுத்திட்டு தானும் உதவிகள் செய்து குடுப்பார்.

சமையல் முடியிற கட்டத்தில இஞ்சாரப்பா..... எண்டு சைக்கிளோட வெளிக்கிடுவார் தாத்தா."சரியாப்போச்சு துலைவான் வெளிக்கிட்டிட்டான் இண்டைக்குச் சாப்பிட்டமாதிரித்தான்"....எண்டு ஆச்சி தலையில அடிச்சுக்கொள்ளாத குறையா புலம்பத் தொடங்குவா.

"ச்ச....சும்மா கத்தாத...நான் இப்ப வந்திடுவன் நீ சாப்பாட்டைப்போடு"... எண்டபடி போனாரெண்டா பிறகென்ன சைக்கிளையும் ஆளையும் ஆராச்சும் தூக்கிக்கொண்டு வருவினம்.இல்லாட்டி தானே சைக்கிளைத் தூக்கிக்கொண்டு வேட்டி அவிழ்றதும் தெரியாம இடுப்பில பெல்ட்தான் மானத்தைக் காப்பாத்தும்.

இதுக்கிடையில சின்னாச்சி கறி சோறெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து வேற இடத்தில பக்குவப்படுத்திடுவா.அவவுக்குகெல்லோ தெரியும் என்ன சன்னதம் ஆடுவாரெண்டு.

"ஓமடி ஓமடி உன்ர கொம்மா கோழி சமைச்சு ஒளிச்சுவச்சல்லோ மூத்த மருமோனுக்கு குடுத்தவ.எனக்கு வெறும் குழம்பும் ரசமும் ஏனோதானோவெண்டு தட்டில போட்டுத் தள்ளிவிட்டவ.ஆனா கடைசில நான்தான் ஆசுப்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைஞ்சனான்".

இது மட்டும்தான் எப்பவும் பல்லவியாய்த் தொடங்கும்.அப்பத்தான் அவருக்கு எப்பவோ ஆச்சி சொன்னது அவவின்ர அப்பா சொன்னது எல்லாம் ஞாபகத்தில வரும்.

ஆச்சியையும் எப்பிடியெண்டாலும் கோவப்படுத்திடுவார்.உன்ர கொப்பர்...கோச்சி எண்டு அங்கால நல்ல நல்ல செந்தமிழ் எல்லாம் கலந்து கட்டி ஆடத் தொடங்குவார்.

ஆச்சியும் "என்ன சொன்னவர் என்ர அப்பா.அவரும் இல்லையெண்டா ரோட்டிலதான் பாய் போட்டுக்கொண்டு பிச்சை எடுத்திருப்பியள்.வந்திட்டார் பெரிசா பீத்திக்கொண்டு....."எண்டு அவர் ஆரம்பிக்க எடுத்துக் கொடுத்திடுவா.பிறகு கேக்கவும் வேணுமே.

"என்னவோ என்னவோ....ஓமடி நான் ராணிமாதிரியெல்லோ உன்னை வச்சிருக்கிறன்.ஏன் உனக்கெல்லாம் மறந்துபோச்சோ.""நான் மறக்கேல்ல...அப்ப சொல்லுங்கோவன்.தெய்வமா போனதுகளை ஏன் இப்ப இழுக்கிறியள்.நானெல்லோ அதுகளைத் திட்டவேணும்.உங்கட தலையில என்னைக் கட்டிப்போட்டுப் போய்ட்டுதுகள்....." எண்டு ஆச்சி அழத்தொடங்க.எணை எணை...அழாத எண்டு சமாதானப்படுத்தி முடியாமப்போக முடிவில சமைச்சு வச்ச கறி சோறெல்லாம் மண்பானை சட்டியோட உடைபடும்.அதோட கேள்வியும் போச்சு பதிலும் போச்சு.அடுத்த தண்ணியடி வரைக்கும் சத்தமே இருக்காது.இரணடு மாசத்தில ஒருக்காவெண்டாலும் இப்பிடி நடக்கும்.நடுநடுவில சின்னச் சின்ன அலங்காரங்கள் மட்டுமே.

ம்ம்ம்...ஆச்சி எல்லாம் பொறுக்கித் துப்பரவாக்க தாத்தா அப்பிடியே நித்திரையாயிடுவார்.ஆச்சியும் திட்டினாலும் சாப்பிடாமப் பாத்துக்கொண்டிருப்பா.பிறகு சூரியன் சரியத்தொடங்கத்தான் எழும்புவார்.பிறகும் அரைகுறை வெறியில் ஆச்சி தாயே...நீயேதான் தெய்வம்.நீதானடி என்ர கடவுள்.உன்ர அப்பாபோல ஒரு மனுசனை உலகத்தில காணமுடியுமோ.நான்தான் அவையளுக்கு ஒண்டும் சரியாச் செய்யேல்ல எண்டெல்லாம் புலம்பினபடி வாய் கோணக்கோண புகழ்ந்து தள்ளுவார்.

"சரியப்பா....சரியப்பா இப்ப சாப்பிடுங்கோ..." எண்டு ஆச்சியும் வாய் ஓயாமச் சொல்லிக் கேக்கும்.அவவுக்குப் அக்கறையோட அடுத்த நிகழ்வுக்குப் பயம்.சாப்பிட்டாத்தான் மற்றத்தரம் தவறணைக்குப் போகமாட்டார்.இல்லாட்டி ராத்திருவிழாவும் தொடரும்.

தாத்தா நல்லாக் குடிச்சு பெரிய கலாட்டா செய்தாரெண்டா பிறகு ஒரு கிழமைக்கு சாமிதான்.
ஆளைப்பாக்கவேணுமே.ஆச்சிக்கு விறகு கொத்திக்கொடுப்பார்.உதவி செய்றன் எண்டு அவவின்ர தோச்சு வச்ச சீலையெல்லாம் திருப்பி எடுத்துத் தோய்ப்பார்.ஆச்சி குளிக்க தொட்டி நிறைய தண்ணி இறைச்சுவிடுவார் .இப்பிடி வீட்டு வேலையெல்லாம் ஒழுங்கா நடக்கும்.

ஆனா ஆச்சி கடுகடுவெண்டு முறைச்சுக்கொண்டு திரிவா.தேத்தண்ணி சாப்பாடெல்லாம் "டொம்" எண்டுதான் கொண்டு வந்து வைப்பா.அதுக்கும் கிண்டல் விடுவார்."ஏனப்பா இப்பிடிச் சுடச் சுடத் தாற ஆத்தித் தா...."எண்டு வேணுமெண்டு திருப்பிக் குடுப்பார்.அதுவும் நாங்கள் ஆரும் கிட்ட இருந்தால் அவரின்ர கிண்டல் கூடுதலா இருக்கும்.ஆச்சியும் அவருக்குத் தெரியாம கொடுப்புக்க சிரிப்பா.காதலும் கலாட்டாவாவும் இருக்கும்.

இப்பிடித்தான் ஒருக்கா மலைநாட்டுப்பக்கம் 10 நாள் ஒரு கோயில் சேவுகத்துதுக்காக போனவர்தான் ஆளையே காணேல்ல.அது சிங்கள ஆட்கள் இருக்கிற இடம்.ஆச்சி அழுது புரளத் தொடங்கிட்டா.சொந்தக்காரர் தேடிபோச்சினம்.ஆள் 10 நாள்முடிய திருவிழா முடிய அங்கயிருந்து உடன் போனவர்களோட சேராம தான் தனிய வருவன் எண்டு தனிய வெளிக்கிட்டு இருக்கிறார்.எவ்வளவோ சொல்லியும் அவர் கேக்காம தனியாகவே போய்ட்டாராம்.

பிறகென்ன.தேடி ஓய்ஞ்சு போன ஒரு 10-15 நாளுக்குப்பிறகு கையில ஒரு நெசவு சீலையும் ஆளுமா செம்பாட்டுப் புளுதியும் பல்விளக்காத முகமுமாய் வாறார்.கழுத்தில போட்டிருந்த சங்கிலி தவில் எல்லாம் போச்சு.என்னப்பா எண்டா ஆச்சிக்கு சீலை தேடி வாங்கிக்கொண்டு வாறாராம். தனக்குச் சிங்களமும் தெரியால்லையாம்.சரியாக் கஸ்டப்பட்டுப் போய்ட்டாராம்.
பிறகென்ன ஆச்சி அழ தாத்தா அழ நாங்களும் அழ அழுது முடியத்தான் ஆச்சி ஓடி முழிப்பா.

"எங்கயப்பா....சங்கிலி,தவில்..." எண்டா அங்க இஞ்ச எண்டு எத்தனை புளுடாக் கதை எல்லாம் விடுவார்.ஆச்சி "நாசமாப் போக....எண்டு தொடங்கித் திட்டி அழுது முடிப்பா.தெரிஞ்ச யாரிட்டயாவது வித்திருந்தாரெண்டா அவர்களே கொண்டு வந்து கொடுப்பார்கள். ஆச்சியின் அக்கா மகன்தான் இவர்களுக்கு ஆதரவு.அவர் அதற்குண்டான பணத்தைக் கொடுத்தனுப்புவார். கொஞ்ச நாளைக்கு இந்தப் பூனையும் பால் குடிக்குமோ என்கிறமாதிரி வீபூதிப்பட்டையும் ஆளுமா சின்னப்பிள்ளைகளோட விளையாடிக்கொண்டும் ஆச்சிக்கு உதவியாயும் இருப்பார்.எப்ப வேதாளம் முருங்கை மரம் ஏறுமோ எண்டு ஆச்சி சொல்லிச் சிரிப்பா.

தாத்தா சின்னனில சரியான குழப்படியாம்.கலைச்சுக் கலைச்சு தவில் வாராலதான் அடிவிழுமாம்.ஆனாப் பிடிபடமாட்டாராம்.கிணத்துக்குள்ள இறங்கிநிண்டு கூத்துக்காட்டுவாராம்.இல்லாட்டி பிடியுங்கோ பாப்பம்...எண்டு துலாக்கட்டில ஏறி இருப்பாராம்.இரவிலயும் வரமாட்டாரம்.அம்மாவை வெருட்டி தூர இருந்தபடியே சாப்பாடு வாங்கிச் சாப்பிடுவாராம்.ஆனா கடைசில அடி வாங்கித்தான் வீட்டுக்குள்ள வரமுடியுமாம்.தான் தவில் பழகின தன் குருவுக்கு மட்டும்தானாம் பயம்.அதனால மூன்றாம்வகுப்பு மட்டும்தான் படிச்சவராம்.அதுக்குப்பிறகு தன் குருவின் வீட்லயே வளர்ந்தவராம்.

இப்பிடி அவர் ஓய்வா இருக்கிற காலத்தில தன்னைப் பெட்டையள் சுத்தினதும் தான் பெட்டையளுக்கு கச்சான் கடலை வாங்கிக் கொடுத்ததும்,ஐஸ்கிரீம் காரனோட சண்டை போட்டதும் எண்டு தன் இளைமைக்காலக் கதையெல்லாம் சொல்லுவார்.ஆச்சியும் ரசிப்பா.

ஏனெண்டா அவ இவரை காதலிச்சுத்தானாம் கல்யாணம் செய்துகொண்டவ.இவர் கொஞ்சம் குழப்படி எண்டாலும் தொழில் சுத்தமாம்.அதனால ஆச்சியிண்ட அப்பா இவரைத் தனக்கு தவில்காரனா வீட்ல வச்சிருந்தவராம்.அந்தக்காலத்தில வீட்டோட ஒரு வெளி ஆண் இருந்தால் வீட்டிலுள்ள பெண்புரசுகளைக் காணேலதாம்.எல்லாரும் பின்பக்கமாகவே புழங்கிக்கொள்வார்களாம்.

இவர் அடிக்கடி கிணத்தடிக்குப் போவாராம்.ஏனெண்டா அங்கதான் வாழைமரத்தடில சின்னக்கா....அவதான் சின்னாச்சி பாத்திரங்கள் கழுவுவாம்.இவர் செருமுவாராம். இருமுவாராம்.சின்னக்கா பாக்கவே மாட்டாவாம்.இவவைக் கேக்காமலே வாளி நிறையத் தண்ணி நிரப்பி வச்சிட்டு வருவாராம்.அவவும் அதிலதானாம் பாத்திரம் கழுவுவாவாம்.

பிலாமரத்தடிலதான் பாய் விரிச்சு தவில் வேலை எல்லாம் செய்வாராம்.அது காத்தாட என்கிற பொய்யோட கருக்குமட்டைக்குள்ளாள ஆச்சியப் பாக்கலாமெல்லோ அதுக்குத்தான்.ஆச்சியும் பாக்கிறா எண்டு நினைச்சுக் கொள்ளுவாராம்.ஆச்சியை நாங்களும் கிண்டிக் கிளறிக் கேட்டுப் பாத்தம்.நீங்களும் பாத்தனிங்களோ எண்டு.அவ கடைசி வரைக்கும் சொல்லவேயில்ல.ஆனா வெக்கப்பட்டுக்கொண்டு உள்ளுக்க போய்டுவா.

இப்பிடி ஒரு நாளுமே நேருக்கு நேர கதைக்கவோ பாக்கவோ இல்லையாம்.ஆனா இவருக்கு வீட்ல கல்யாணம் பேசத் தொடங்க இவர் தன்ர வீட்ல சொன்னவராம்.ஆச்சி வீட்டுக்காறார் நல்ல பேர்புகழனா நாதஸ்வரக் குடும்பமாம்.அதோட பெரிய பணக்காரருமாம்.அதனால வீட்ல சிக்கலாம்.இவர் என்ன செய்திருக்கார் தெரியுமோ.தான் சின்னாச்சி நினைவோட அவவுக்காக காத்திருந்த பிலா மரத்திலயே தூக்கு மாட்டி சாகவேண்டு கயிறு மாட்டிட்டாராம்.

அப்பத்தானாம் மெல்லமா ஆச்சி அழுத்தவ.அவவின்ர அம்மாவுக்கும் விளங்கினதாம் ஆச்சிக்கும் விருப்பமெண்டு.அப்பத்தானம் இரண்டு வீட்டுக் காரரும் கல்யாணப் பேச்சுக்கள் பேசினதாம்.ஆனாலும் சாதகம் பொருத்தமில்லையாம்.எண்டாலும் நாங்கள் இவ்வளவு காலம் சந்தோஷமா வாழ்ந்திட்டம்தானே எண்டு பெரிய சந்தோஷமாச் சிரிச்சு தோழில சால்வையை உதறிப்போடுவார் தாத்தா.

அப்ப நான் சின்னனா இவையளை பாக்கிற நேரமே அவையளுக்கு 60-65 வயசு இருக்கும்.இணுவிலிலதான் இருந்தவை.இப்ப நிச்சயமா இருக்கமாட்டினம்.
என்றாலும் அடுத்தமுறை அப்பாவோட கதைக்கேக்குள்ள கேக்கவேணும். கிருஷ்ணமூர்த்தி தாத்தாவையும் சின்னாச்சி அம்மாச்சியையும் ஞாபகப்படுத்தின தமிழ்நதி அக்காவுக்கும் நன்றி.

"எங்கிருக்கிறாய் என்கிறார்கள் இப்போதும்.நான் இங்கில்லை என்கிறேன்".

ஹேமா(சுவிஸ்)

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP