Friday, February 26, 2010

கடந்து வந்த பதின்மத்தில்.

தோழி கண்ணகி பதின்மத்தை எழுதச் சொன்னதும் மனதில பட்டதுகள் கொஞ்சம் இதுகள் மட்டும்தான்.
கையைப் பிடியுங்கோ கண்ணகி.பதின்மத்தில் சில அலைகளை அலையவிட்டதுக்கு.போதும் அடங்கு(யாரோ திட்டுகினம் என்னை).அழ அழத்தான் என்ர நினைவுகள் எண்டு !

அப்ப முந்தி நடந்ததெல்லாம் நடக்கிறதெல்லாம் நல்லதுக்கு எண்டுதான் சந்தோஷமாய்த் திரிஞ்சம்.எதுக்கும் சும்மா சும்மா அழுதம்.விசருகள் போலச் சிரிப்பம் தேவையில்லாம.அடம் பிடிப்பம்.அதுவும்...குதிச்சு குதிச்செல்லோ அழுவம்.பாவம் நிலத்துக்கு நோகும் எண்டு ஆர் நினைச்சது.

ஜானகி அத்தை வரேக்க ஏதாச்சும் வாங்க்கிக்கொண்டு வராட்டா அண்டைக்குச் சரி.பாவம் 50 சதத்துக்கொண்டாலும் கச்சான் கடலையோடதான் வருவா.பள்ளிப் பாடமெல்லாம் முடிச்சப்பிறகு விளையாட விடாட்டித் துலைஞ்சுது.அப்பா லீவில வீட்ட வந்து நிக்கேக்க படத்துக்குக் கூட்டிக்கொண்டு போகாட்டி,கொத்து ரொட்டி போட்டுத் தராட்டி,மலாயன் கபே ல வடையும் சம்பலும் வாங்கித் தராட்டி கையைக் காலை அடிச்சுக் குழறி.என்னவெல்லாம் செய்திருப்பம்.ஆனாக் கொஞ்ச நேரம்தான்.எதுவும் மனசில நிலையாய் நிண்டதில்ல.அந்த நேரம் மட்டும்தான்.அடுத்த அடம் பிடிக்கத் தொடங்க முதல் அடம் மறந்து போகும்.நித்திரை கொண்டு எழும்பிட்டா எல்லாமே போய்டும்.கவலையெண்டு தெரியாமலே இருந்தது.மாமரக் குரங்குகளாய் பனம்பாத்தி அணில்களாய் அரிசிமூட்டை எலிகளாய்....

எப்பாச்சும் பிச்சைக்காரரைக் கண்டா இல்லாட்டி அம்மா அப்பா இல்லாதவையளைக் கண்டா மட்டும் ஒரு மாதிரி இருக்கும்.அப்பிடி எங்காலும் யாராவது எங்கயாச்சும் ஒருசிலர்தான் இருப்பினம்.எங்கட பக்கத்துவீட்டு தங்கமணி அக்காக்கு கௌரி அக்காக்கு கணேசண்ணைக்கு அப்பா அம்மா இல்ல.அவையளுக்கு அவையளே அப்பா அம்மாவா இருப்பினம்.ஆனாலும் சந்தோஷமா இருப்பினம்.எங்கட அம்மா பின்னேரங்களில போய்க் கொஞ்சநேரம் இருந்து கதைச்சிட்டு வருவா.நானும் கணேசண்ணை இல்லாட்டிப் போவன்.ம்ம்ம் ..இப்பிடித்தான் நாங்கள் எல்லாரும் ஊர்ல சந்தோஷமா இருப்பம்.எங்கட கிணறுகூட பங்குக் கிணறுதான். அங்கால தங்கமணி அக்கா குளிக்க நான் இஞ்சால குளிப்பன்.

எப்பவும் நிரந்தரமான கவலைகள் எங்களைச் சுத்தி இருக்கேல்ல.சமூகச் சகதி சிலசமயம் யோசிக்க வைக்கும்.கோயிலிக்குள் போகவிடாததுக்கு,வெளில நிப்பாட்டி கிளாஸில தேத்தண்ணி குடுத்தா,திருப்பி அடிக்கமாட்டினம் எண்டு தெரிஞ்சுகொண்டு அடிக்கிற ஆக்களைக் கண்டா அதுவும் எனக்கு பெஞ்சாதியை(மனைவி) அடிக்கிற புருஷனைக் கண்டா நல்லாக் கோவம் வரும் என்ன செய்ய.

இப்பிடி இப்பிடி சின்னச் சின்னதாத்தான் கவலை இருக்கும்.எல்லாம் நல்லாத்தான் நடந்துகொண்டிருந்தது.நடக்குது எண்டும் நம்பிக்கொண்டுதான் வாழ்க்கையின்ர பாரம் தெரியாம கிணத்துக் கட்டில இருந்து குயிலுக்கு எதிர்க்குரல் குடுத்துக்கொண்டிருந்தம்.

யாருமே கத்திக் குழறியழமாட்டினம்.அப்பிடி அழுதா ஒண்டு அங்க யாரோ செத்திட்டினம் எண்டுதான் அர்த்தம்.அதுவும் எப்பாலும்தானே எங்காலும் ஒரு செத்தவீடு நடக்கும். இல்லாட்டிக்கு நல்லாக் குடிச்சுப்போடு சித்தப்பா சித்திக்கு அடிப்பார்.அப்ப ஒருக்கா நாங்கள் குழறுவம்.

ஒருநாள் இப்பிடித்தான் என்னையும் தம்பியையும் தங்கச்சியையும் படிக்கச் சொல்லிப்போட்டு அம்மா படுத்திருக்க நாங்கள் பேப்பரில என்னவோ ஒரு விளையாட்டு.பேரும் மறந்திட்டன். மிருகங்களின்ர பேர் எழுதியிருக்கும்.அந்த விளையாட்டுக்கு கதைக்கத் தேவேல்ல. சத்தம்போடாம விளையாடலாம்.எண்டாலும் அம்மாட்ட பிடிபட்டுப்போனம்.

பிறகென்ன அவ்வளவும்தான்.அம்மா எங்கள வெளிவிறாந்தைல விட்டுப்போட்டு அவ உள்ளுக்குள்ள படுத்திட்டா.எனக்கெண்டாப் பேய்ப்பயம்.ஒருத்தரையொருத்தர் நீதான் விளயாடலாம் எண்டு சொன்னனீ சொல்லிச் சொல்லி அழ ,அதுக்கும் பெரிசா
அழக்கூடாதெண்டு பயம்.ஏனெண்டா அம்மா அடிப்பா.நிலவு வெளிச்சத்தில வேலிப் பூவரசு அசைய நான் குழற வெளிக்கிடுவன்.அம்மா "என்ன அங்க" எண்டுவா.அடக்கிப்போடுவன்.

இப்பிடி 2 மணித்தியாலம் ஒருமாதிரி அழுதழுது போயிருக்கும்.நேரம் 10 மணியாகும்போல. சித்தப்பா நல்லா தண்ணியடிச்சிட்டு வந்து சித்தியை அடிக்க ஆனந்தாவும் ஜெயாவும் குழற சித்தி வந்து எங்கட மேல்கட்டுக் கட்டாத கிணத்துக்குள்ள விழ சித்தப்பாவும் சேர்ந்து விழ மாரிமழை பெய்ஞ்சு முக்கால்கிணற்றில முட்டின தண்ணி.ஐயோ....கடவுளே அப்ப குழறி அழுதம்.

ஆனா அந்தக்கையோட நாங்கள் மூன்று பேரும் ஓடிப்போய் படுத்திட்டமெல்லோ.ஆனாலும் அடுத்தநாள் பெரி....ய கடிதம் ஒண்டு அம்மா அப்பாவுக்கு எழுதினவ.பிறகு அப்பா வந்து ஒண்டுமே கதைக்கேல்ல.

நான் ஊர்ல இருக்கிற வரைக்கும் இப்பிடி எங்கயாவது எப்பவாவதுதான் குழறிக் கேக்கும்.இன்னொருநாள் குழறி அழுதவ இந்திரா அக்கா.அங்கதான் ராசன்ர அம்மம்மா இருந்தவ.இந்திரா அக்கான்ர அம்மா.அவவுக்கு வடிவாக் கண்தெரியாது பாவம் அவ.
ஆனா இவன் ராசன் செல்லமா விளையாட்டா அவவோட எப்பவும் சொறிஞ்சபடிதான் இருப்பான்.அவ வெளிலதான் படுப்பா.கண் தெரியாம அவ பட்ட கஸ்டம் நிறைய.அப்ப அது விளங்கேல்ல.இப்ப அவ இருந்தா அவவுக்கு நானே எவ்வளவு உதவி செய்திருப்பன்.

இவன் ராசன் அவவின்ர வெத்திலை பைக்குள்ள பூவரசமிலையை வச்சிடுவான் வெத்திலையை எடுத்துப்போட்டு.அவ ஒரு உரல் வச்சிருக்கிறா.தாளம் பிசகாம இடிப்பா வெத்திலை.அவ வெத்திலையைக் கிழிச்சு எடுத்து சுண்ணாம்பு பூசி எல்லிப்போல(மிக மிகச் சிறிது) போயிலை எடுத்து இடிக்கிறதை நான் ரசிச்சிருக்கிறன்.

அப்பிடி இடிச்சிட்டுப் போடேக்க அவவுக்குத் தெரியும்.இவன் தான் பூவரசமிலையை வச்சிட்டான் எண்டு.ராசன் நிண்டு நக்கலடிக்க அவன்ர பக்கம் உரலைத் தூக்கியெறிஞ்சு "சனியன் பிடிச்சவன்...கோதாரில போறவன்...பாழ்பட்டுப் போவான்.அடியேய் இந்திரா உந்தப் பெடியைப் பார்"எண்டு கத்துவா.அவவிட்டுக் கலைப்பா.அவன் எங்க ஓடுற ஓட்டத்தில நாய்க்கும் உதைஞ்சுபோட்டு ஓடுவான்.அதுவும் சேர்ந்து குழறிக்கொண்டு ஓடும்.

அவ பிறகு சுகமில்லாம படுத்திட்டா.அப்ப அவன் ராசன் தானாவே வெத்திலை இடிச்சுத் தரட்டோ அம்மம்மா எண்டு கேட்டு இடுச்சுக் குடுப்பான்.வெளிக்குப் போக கை பிடிச்சுக் கூட்டிப் போவான்.எச்சில் துப்ப சிரட்டைக்க மண் போட்டு எடுத்துக் குடுப்பான்.அவ அப்ப எல்லாம் "என்ர ராசா நீ நல்லா இருக்கோணும்.குழப்படி செய்யாம அம்மாக்கு உதவியா இருக்கோணும்"எண்டு சொல்லுவா.பிறகு கொஞ்ச நாளேல அவையளின்ர வீட்லயும் குழறிக் கேட்டது ஒருநாள்.அம்மம்மா செத்துப்போனா.

அதுக்குப் பிறகு இரவெண்டாலே பயம்.பேய் எண்டா இரவில மட்டும்தானோ எண்டு எனக்குள்ள இப்பவும் கேள்வி.அதுவும் செத்தவீடு நடந்தபிறகுதானோ!அம்மம்மா செத்தே இருக்க வேண்டாம் போல இருக்கு எண்டான் ராசன்.நானும் அழுதிட்டன்.அம்மம்மாவுக்கு செலவோ அந்தியேட்டியோ எண்டு எல்லாம் படைச்சினம்.ராசன் தான் வெத்திலை இடிச்சு வச்சவன்.நானும் வெத்திலைக்கு சுண்ணாம்பு பூசிக் குடுத்தனான்.எண்டாலும் அந்தச் செத்தவீட்டு மணம் இன்னும் போகாம இருக்கெண்டு பயம் பயமா வரும்.

அதுக்குப் பிறகு நான் இருக்கேக்க யாரும் பெரிசாக் குழறேல்ல.செத்தவீடும் நடக்கேல்ல. அம்மா சொல்றா எல்லா வீடுகளிலயும் இப்போ செத்தவீடாம்.ஆனா ஆரும் குழறி அழமாட்டினமாம்.ஏனெண்டா எப்பவும் எல்லா ஆக்களும் சாகினமாம்.அதனால பேய்ப் பயமும் இல்லையாம்.(தொடர விருப்பமில்லை)

நான் இன்னும் பதின்ம ஞாபகங்களை கிளறக் கேக்கிறது கலா,ஸ்ரீராம்,
தமிழுதயம்,அரங்கப்பெருமாள்.
ஆறுதலா எழுதுங்கோ.நான் ஊருக்குப் போய் வந்து பாக்கிறன்.கலா என்ர மெயிலுக்கு அனுப்புங்கோ.நான் பதிவில போடுறன் விருப்பமெண்டா.சரியோ !

இது என் யாழ்ப்பாண வழக்கு மொழியில எழுதியிருக்கேன்.பின்னூட்டங்கள் வராமலிருக்கிறதைப் பார்த்தா என்ன சொல்லியிருக்கேன்னு புரியலயாக்கும்.
நண்பர்களே...புரியாட்டி சொல்லிடுங்க !

ஹேமா(சுவிஸ்)

Tuesday, February 16, 2010

ஆண்களும் உதவலாம் அடுப்படியில்.

நான் சென்ற ஒரு பதிவில் கிண்டலாக ஆனால் உண்மையாகக் கேட்டிருந்தேன்.யாரச்சும் வீட்டில் மனைவிக்கு உதவியாய் சமைச்சுக் கொடுப்பீங்களா.அப்படியாயின் சொல்லுங்கள் என்று கருணாகரசு சமையல் அனுபவத்தையே தந்திருந்தார்.

//சி. கருணாகரசு
நான் சிங்கபூரிலிருந்து எழுதுகிறேனுங்க என்னோட பேரு...... கருணாகரசுங்க.
நான் என்னோட மனைவிக்கு சமைத்து போட்டிருக்கேன்..... என்ன சமையல்ன்னா... மீன் வறுவல்.அப்புறம்.... அப்பப்ப...முருங்கக்காய் சாம்பார்....... அடுத்து எனக்கு தெரிந்த எதாவது.... இதெல்லாம் ஒரு விடயமே இல்லைங்க..... பதிவை முழுமையா படிச்சுட்டு அப்புறம் வரேனுங்க.

சாட்சிக்கு வேனா கலாவை... என்னோட இல்லத்தரசியிடம் கேட்டு பார்க்க சொல்லுங்க.//

கலாவும் உறுதிப்படுத்தியிருந்தாங்க.

//கலா... ஹேமா கருணாகரசின் பின்னோட்டத்தில்....சொல்லியிருக்கிறார் சமைத்துக் கொடுப்பதாக,ஆம் அது நிஐந்தான்,சிவரஞ்சனிக்கு ஏற்ற அருமையான கணவர்.நானே நேரில் பார்த்திருக்கின்றேன்,அத்தனை கவனிப்பு.//

இதைவிட ஸ்ரீராம்,அரங்கப்பெருமாள்,மற்றும் பித்தனின் வாக்கு(சுதாகர்) இவர்களும் வீட்டில் உதவி செய்வதாகச் சொல்லியிருந்தார்கள்.சந்தோஷமாக இருந்தது.

இதைவிட ஜெரி ஈசானந்தா தான் நான் ஒருமுறை இன்று நீங்களா வீட்டில் சமையல் என்று கேட்டபோது ,ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டதுபோல இல்லையே... சமையலா...நானா...ஏன் என்றெல்லாம் அடுக்கியவர் ,அதன் பிறகு என் தொல்லை தாங்கமலே தான் இப்போவெல்லாம் வீட்டில் உதவுவதாகவும் முடிந்த நேரங்களில் சமைத்துக் கொடுப்பதாகவும் சொல்கிறார்.எவ்வளவு சந்தோஷம்.

எங்கள் வீட்டில் அப்பாவும் எப்போவாவது ஒருநாள் இன்று நான்தான் சமையல் என்று அட்டகாசம் செய்வார்.வித்தியாசமான சுவையோடு அம்மாவின் புன்னகையோடு அன்றைய பொழுது மிக மிக அருமையாய் சந்தோஷமாய் இருக்கும்.அப்பா அம்மாவின் அந்நியோன்யமும் அன்று புரியாவிட்டாலும் இன்று உணரக்கூடியாதாக இருக்கிறது.(அடுப்படி அன்று துப்பரவு செய்வதென்பது பெரிய வேலைதான்.எந்தச் சாமான்களும் இருக்கும் இடத்தில் இருக்காது)

ன்னும் இதுபற்றிக் கொஞ்சம் பேசலாம் என்று நினைக்கிறேன்.அடுப்படி என்னவோ பெண்களுக்கே சொந்தமான இடம் என்பதாகவே சில ஆண்களின் நினைப்பு.ஒரு அவசரம் ஆபத்திற்குக்கூட ஒரு தேநீர் வைத்துக் கொடுக்கத் தெரிவதில்லை.ஏன் சில சமையல் விஷயங்களை ஆண்கள் அறிந்து வைத்துகொள்வதில் என்ன தப்பு.வீட்டில் உதவியாய் இருந்தால் என்ன.அம்மா அக்கா அம்மம்மா அத்தை மனைவி மகள் என்று பெணக்ளின் கைப்பிடித்துக்கொண்டே ஆண்களின் அன்றாட அலுவல்கள் அசராமல் நடந்துகொண்டிருக்கிறது.ஒரு நேரம் இல்லாவிட்டாலும் தவிப்பது தெரியும்.ஆனால் ஒரு விஷயம்.பிறக்கும் குழந்தை மட்டும் ஆணாகப் பிறக்கவேண்டும்.

பெண்களில் பலர் நாங்கள் ஆண்களுக்கு உதவியாக எத்தனையோ வெளி வேலைகளைச் செய்தபோதும் வீட்டில் ஆண்கள் எதுவும் செய்வதில்லை.செய்ய முயற்சி செய்வதுமில்லை.
ஏன் வீட்டில் இப்படியான சில வேலைகள் இருக்கிறது என்றுகூடத் தெரியாமலே சில ஆண்கள் குழந்தைகளோடு குழந்தையாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.மகனோ மகளோ எத்தனையாம் வகுப்பில் படிக்கிறார்கள் இன்று என்னென்ன முக்கியமான் அலுவல்கள் என்றுகூடத் தெரியாதவர்களும் இருகிறார்கள்.உழைத்துக் கொடுத்தால் மட்டுமே போதுமானதாய் நினைப்தே பெரிதாய் எண்ணி உலவுகிறார்கள்.வேலைக்குப் போகும் மனைவி அத்தனை வீட்டு வேலைகளையும் செய்து வைத்துவிட்டே வேலைக்குப் போகிறாள்.அதுவும் நம்நாடுகளில்தான் இந்த ஆக்கிரமிப்புக்கள் கூடுதலாகக் காண்கிறோம்.

நிச்சயமாக நான் காணக்கூடியதாக இந்த நாட்டில் அப்படி ஒரு பிரிவினை இருப்பதாகக் காணவில்லை.நான் பழகும் ஒரு சுவிஸ் குடும்பத்தில் மாலைச் சமையல் அவர்தான் செய்வார்.எத்தனை பேர் சாப்பிட்டாலும் சாப்பிட்டு முடிய அத்தனை பாத்திரங்களும் ஒதுக்கி மெஷினில் கழுவ வைத்துவிட்டு சாப்பிட்டபின் அருந்தும் காப்பியும் ஏதோ ஒரு இனிப்பும் மேசைக்குக் கொண்டு வருவது அவரேதான்.பின் கழுவப்பட்ட பாத்திரங்களை எடுத்து அடுக்கிவிட்டுத்தான் மதியத்தில் வேலைக்குப் போவார்.இதில் ஆங்கிலப் பேராசிரியர் அவர்.இந்த நிகழ்வு நான் காண்பது அடிக்கடி மதியச் சாப்பாட்டு இடைவேளையின்போது.

பெண்கள் தான் சமைக்க வேண்டும் என்ற நிலை ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறது.இல்லையென்றில்லை.காரணம் பொறுமையாக எதற்குள் எதைக் கலந்தால் உணவின் ருசி அதிகமென்று அவளால் தீர்மானிக்கப்படுவதாலும் வீட்டில் உள்ளவர்களின் சுவை உணர்வை அறிந்து வைத்திருப்பதாலோ என்னவோ.இதில் சிக்கனமும் அடக்கம்.என்றாலும் விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை.உலகெங்கும் சமையலைத் தொழிலாகவே வைத்துள்ளவர்களில் 75% ஆண்கள் தான்.(Professional Cooks)

சமையல் செய்ய வேண்டாம்.அது பெண்களின் சமாச்சாரம் என்றே
வைத்துக்கொள்வோம்.மனைவிக்கு வீட்டில் இன்னும் எத்தனையோ வழிகளில் உதவலாமே.வீட்டு வேலைகள் எதிலும் ஆண்கள் பங்கெடுத்துக்கொள்வது என்பது இன்னும் நம் சமூகத்தில் விரும்பத்தகாத செயல்.தகுதிக்குக் குறைவான வேலை என்றே கருதப்படுகிறது.ஆண்கள்தான் உயர்வு என்று சொல்லிக்கொண்டு வரும் திரைப்படங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.ரசிக்கவும் படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக கணவன் தன்னைவிடப் பெரியவன் தான் செய்யும் வேலையை அவனைச் செய்யச் சொல்லக் கூடாது என்று எண்ணும் மனைவிமார்களே நம் சமூகத்தில் இன்னும் அதிகமாக இருக்கிறார்கள்.உதவி செய்ய முன்வரும் ஆண்களைக்கூட இவர்கள் விடுவதில்லை.இந்தப் பெண்களை என்ன செய்யலாம் !

ஆனல் வெளிநாட்டில் வாழும் எங்கள் ஆண்கள் ஓரளவு இப்போதெல்லம் உதவி செய்யக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.நம் நாடுகளில் வெகுசிலர் மட்டுமே சமையல் செய்கையில் தனது மனைவிக்கோ தாய்க்கோ சகோதரிக்கோ உதவி செய்ய முன்வருகிறார்கள்.அவர்கள் என் அப்பா,கருணாகரசு,ஸ்ரீராம்,அரங்கப்பெருமாள் சுதானந்த சுவாமிகள் போல விதிவிலக்கானவர்கள்தான்.பாராட்டுவோம்.

ஹேமா(சுவிஸ்)

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP