Monday, June 13, 2011

முயற்சியின் உயர்ச்சி.

முயற்சி என்கிற கிரியா ஊக்கியைப் பற்றி அறிந்திருக்கிறோமா?எல்லா நல்ல குணங்களும் சிறந்த கொள்கைகளும் முறையான படிப்பறிவு நல்ல சூழல் எல்லாம் அமைந்திருந்தாலும் முயற்சி இல்லாவிட்டால் வாழ்வில் பயன் ஏதுமே இல்லை.

கொஞ்சம் முயற்சி செய்யும் குணத்தை வளர்த்துக் கொண்டால் நல்லது.இழந்தவைகள் இனிக் கிடைக்கப்போவதில்லை.நினைக்கும்போது வேதனையாக இருந்தாலும் புலம்பிக்கொண்டிருக்காமல் (என்னைப்போல) அடுத்த வழி தெரியும் திசையில் நடக்க வேண்டிய ஆயத்தங்களில் ஈடுபடுவதே பெருமையையும் வெற்றியையும் தரும்.

எங்களின் மன உறுதியும் முயற்சியின் அளவைப் பொறுத்தே எம் வாழ்வின் வளர்ச்சியும்.

முயற்சி தேவைதான்.அதே சமயத்தில் தன் பலம் மற்றும் அடுத்தவர் பலம் உணர்ந்தே செயற்படுதல் அவசியமாயிருக்கிறது.எங்களின் சக்திக்கு மீறிய செயற்பாடுகள் தரையில் தன் பலத்தை முயற்சித்துப் பார்க்கும் முதலையைப் போன்றது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

முயற்சியின் முழுப்பலனையும் பெறவிரும்பினால் சோம்பலை அறவே ஒழித்துக் கட்டுதல் முக்க்கியம்.(இந்த இடத்தில 3,4 பேர் என்னைக் கலாய்க்க ஓடி வருவினம்.)

முழு முயற்சியுடன் செயல்படும் வழக்கத்தைப் பழகிக்கொண்டால் சோர்வு,ஞாபகமறதி எம்மை விட்டுத் தூரவே போய்விடும்.

சரியான பயிற்சியுடனான முழுமையான முயற்சிக்கு மற்றவர்களின் எந்தச் சூழ்ச்சியும் தடை ஏற்படுத்தமுடியாது.

விதி,நேரகாலம்,அதிக்ஷ்டம்,பயம் என்று புலம்புவதில்லை என்று மனதில் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.இப்பிடித்தான் நான்.மனத்தளர்ச்சி இல்லாத முயற்சி விதியையே மாற்றியமைக்கும்ன் சக்தி கொண்டது.சில காலங்கள் தாமதமாகலாமே தவிர நல்லதே நடக்கும்.சத்தியமா நான் சொன்னதெல்லாம் உண்மை.

துயரங்கள் சோர்ந்து போகவேண்டாம்.விடையில்லாத வினாவோ தீர்வேயில்லாத பிரச்ச்னையோ இல்லை.விடைக்கான தீர்வுக்கான முயற்சியை அதிகப்படுத்த துயரங்கள் கைகாட்டி மறைந்துகொண்டேயிருக்கும்.

ஒரு காரியத்திற்காக முயற்சி செய்யும்போது இடையூறுகளால் மனம் தளர்வடையாமல் உறுதி கொண்ட மனம் கொண்டவராய் இருத்தல் அவசியம்.

அனுபவ அறிவு இல்லாத செயல்களில் ஈடுபடும்போது அதைப்பற்றித் தெரிந்தவர்களிடம் கலந்து ஆலோசித்து செயல்படுவது மிக மிக முக்கியம்.(இதில் நான் நிறையவே அடிபட்டிருக்கிறேன்.)அப்போதான் நிலையான வெற்றி கிடைக்கும்.

ஒரே நேரத்தில் பல காரியங்களில் கை வைக்காமல் ஒரு செயலில் மாத்திரமே முழுமையாக முயற்சிப்பதால் காலம் தாழ்த்தாமல் வெற்றி கிடைக்கும்.

எத்தனை காலம் சிறப்பாகத் திட்டம் போட்டாலும் அதற்கான செயற்பாட்டின்போது தளராத முயற்சியே சிறப்படைய வைக்கும்.

தளராத முயற்சி எனும் அஸ்திவாரத்தின் மேல் தொடங்கும் நமது வாழ்க்கை பாறை மேல கட்டிய வீட்டைப்போல உறுதியாய் அழகாய் மிளிரும்.(கல்லுப் பாறைக்கு மேல வீடெல்லாம் கட்டேலுமோ எண்டு கேக்கப்படாது...சொல்லிப்போட்டன் )

முயற்சிதான் வாழ்வதின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. தன்னைத் தானே உணர்ந்து கொள்வதற்கு வழி செய்கிறது. நாம் செய்யும் எல்லா முயற்சிகளிலும் நம்மை நாமே புரிந்து கொள்வது மகத்தானது.நம்மை நாம் புரிந்து கொள்ளாதவரையில் நமக்குள் மறைந்து கிடக்கும் மாபெரும் சக்திகளினால் பயன் எதுவும் ஏற்படாது. பிறப்பு இயற்கையானது போலவே முயற்சியும் நம்முடனேயே இருந்து கொண்டிருக்கிறது.

என் அனுபவம் இவைகள்.எத்தனையோ இடங்களில் மனம் தளர்ந்திருந்தாலும் என் முயற்சியே என்னை ஓரளவு பாதுகாத்து உயர்த்தி வைத்திருக்கிறது.எனக்கு நானே எத்தனயோ தரம் தட்டிக் கொடுத்துச் சந்தோஷப்பட்டிருக்கிறேன்.
எனக்கு....என் துணிச்சலுக்கு நன்றி....!

ஒரு ஊர்ல (சத்தியமா பாட்டிக் கதை இல்லை.)ஒரு பழ வியாபாரி இருந்தாராம்.அவர் வாழ்க்கையில முன்னேற எத்தனையோ முயற்சிகள் எடுத்தாலும் கஸ்டமாவே இருந்திச்சாம்.அவரோட மனைவி திட்டிக்கொண்டே இருந்தாவம்.மூன்று பிள்ளைகளும் இருந்திச்சினமாம்.அப்போ ஒரு நாள் தன்ர மூத்த மகனோட தன்ர கவலையை சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தாராம்.அப்ப அவரின்ர மகனுக்கு விளங்கிச்சாம்.

அப்பா பாவம்.அவர் சோர்ந்துபோகேல்ல.எவ்வளவு முயற்சி செய்றார்.ஆனாலும் எங்கட கஸ்டம் கஸ்டமாவே இருக்கு.அதற்காக அவரைச் சோரவிடக்கூடாது எண்டு நினைச்சு அவர்கூடையில இருந்து ஒரு பழத்தைப் பிச்சுக்காட்டி "அப்பா...பாருங்கோ இந்தப் பழத்துக்குள்ள இவ்வளவு விதைகள் இருக்கு.ஆனால் முளைக்கப் போட்டால் எல்லாம் முளைக்குமோ இல்லைத்தானே அதுபோல நாம் முயற்சிக்கிற எல்லாமே வெற்றியாகும் எண்டு நினைக்கிறது சரில்ல.நங்கள் விதைச்சுக்கொண்டேயிருப்போம்.ஏதோ ஒருநாள் நிச்சயமா ஒரு விதை முளைச்சு விருட்சமா ஆகும்.அப்பா கவலைப் படாதேங்கோ.இனி முயற்சிக்கு நானும் கூட உழைப்பேன்"எண்டு சொல்லிச் சமாதானம் சொல்லி ஊக்கப்படுத்தினானாம்.

கதையும் முடிஞ்சுது.காக்காவும் நித்திரையாப் போய்ட்டுது.....!

Thursday, June 02, 2011

நிர்ப்பந்திக்கப்பட்டவைகள்.

நிர்மலா விரைவாகத் தேங்காயைத் துருவியெடுக்க நினைக்கிறாள்.துருவலை அவளுக்கு ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது.கழன்று கழன்று விழுந்தபடி....!

"இது ஒரு சனியன் திருவலை.எவ்வளவு நாளா நானும் கேக்கிறன் புதுசொண்டு வாங்கித் தாங்கோவெண்டு.கெதியாச் சமைச்சு முடிக்கவேணும்.சுதா வந்திட்டாளெண்டா தெய்ய தெய்ய எண்டு குதிப்பாள்.எப்பத்தான் இந்தத் திருவலைக்கு விடிவுகாலமோ”என்று மனதிற்குள் முணுமுணுத்தபடி “அப்பா இந்தாங்கோ தேத்தண்ணி....கேட்டனீங்களெல்லே"என்று கூப்பிட்டபடி வேலை செய்துகொண்டிருந்தவள் பதில் குரல் வராதபடியால் அடுப்படி கருக்குமட்டை இடுக்கு ஓட்டைக்குள்ளால் கூர்ந்து பார்க்கிறாள்.

மணியத்தார் கிணத்துக் கட்டிலிருந்தபடியே யோசித்துக்கொண்டிருந்தார்
"அப்பா தேத்தண்ணி கேட்டுப்போட்டு என்ன இஞ்ச வந்து யோசிச்சுக்கொண்டிருக்கிறியள்" என்றாள்.ஒண்டுமில்லப் பிள்ளை.அம்மா வந்திட்டாவோ.கொக்காளும் (அக்கா) இண்டைக்குத்தானே வாறன் எண்டவள்.அவள் பின்னேரமாத்தான் வருவாள் (மாலை நேரம்).அவன் ஆனந்த்க்கும் ஏதோ உடம்பு சரில்ல வருத்தமாக்கிடக்கு எண்டவள்.டொக்டரிட்டயும் போய்ட்டு அங்கயிருந்து பஸ் பிடிச்சு வர எப்பிடியும் மாலை சரிஞ்சிடும்.அதுதான் இவன் கண்ணனின்ர ஞாபகமும் வந்திட்டுது.எனக்கென்ன பிள்ளை உங்கட நாலு பேரின்ரயும் யோசனைதானே”என்றார் பெருமூச்சோடு மணியத்தார்.

"சரி இந்தாங்கோ குடியுங்கோ முதல்ல.அம்மா அநேகமா இப்ப வந்திடுவா.
சீட்டுக்காசு குடுத்திட்டு,நாளையான் சமையலுக்கு மிளகாய்த்தூள் இல்ல.இடிக்கவேணும்.அதுக்கும் சரக்குச் சாமான்கள் வாங்கத்தானே போனவ.வெயிலுக்க இராம நிழலாய்ப் பாத்து இருங்கோ.தலைச் சுத்து வந்திடும்.சுதா நெசவால வந்திடுவாள்.நான் கெதியாச் சமைச்சு முடிக்கவேணும்.பசியோட வந்து என்னைத் திண்டு கை கழுவுவாள்."என்று சொல்லிக்கொண்டே அடுப்படி நோக்கி நடந்தாள் நிர்மலா.

அம்மா கமலமும் தட்டிப் படலையைத் தூக்கித்திறந்து திரும்பவும் சாத்துவது தெரிகிறது.அம்மா வந்திட்டா.அண்ணா சுவிஸ்ல இருந்து உண்டியலில காசு அனுப்பியிருக்கிறார்.முதல் வேலையா சுத்தவர வேலியை இறுக்கமா அடைப்பிக்க வேணும்.துருவலையின் ஞாபகமும் வந்துபோகிறது நிர்மலாவுக்கு.

கமலம் நேராக மணியத்தாரைக் கிணற்றுக்கட்டில் கண்டுவிட்டுக் கிணற்றடிகே வர "என்னப்பா காசு தந்தவங்களே கடையில."என்றாள்.

மணியத்தாரும் "ஓமப்பா ரெண்டரைதான் (2 1/2 இலடசம்) தந்தவங்கள்.மிச்சம் நாளைக்கு வரட்டாம்.எனக்கும் முழுக்காசும் கொண்டுவரப் பயமாக்கிடந்துது.அதுதான் நானும் சரியெண்டு விட்டுப்போட்டு வந்திட்டன்."
என்றார் மணியத்தார்.

நிர்மலாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க இருக்கிறது.அதன் ஏற்பாடுகளுக்குத்தான் மகன் கண்ணன் சுவிஸ்ல இருந்து பணம் அனுப்பியிருந்தான்.மணியத்தாரும் கமலமும் ஐயர், மேளம் ,பந்தல் ,சமையல் என்று திருமணத்திற்கான ஏற்பாடுகளைப் பற்றிக் கதைத்துத் திட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

மணியத்தார் பெரிதாகப் பெருமூச்சொன்றை இழுத்து விட்டபடி "பாவம் கண்ணனும் ஒருத்தனாய்ப் பிறந்து எங்களுக்காக எவ்வளவு கஸ்டப்படுறான்.படு சுட்டித்தனமா படிச்சுக்கொண்டிருந்த என்ர பிள்ளையை எங்கட நாட்டு நிலைமையாலயும் வீட்டு நிலையாலயும் எங்களோட சேத்து வச்சிருக்க முடியாமப் போச்சு.என்னையும் ஆண்டவன் வேளைக்கு (நேரவேளைக்கு) நோயாளியா ஆக்கிப்போட்டான்.மூண்டு பெட்டைக் குஞ்சுகளையும் பெத்தும் போட்டன்.பாவம் அவன்தான்".என்று வானத்தைப் பார்த்தபடி மனம் நொந்து சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தார்.

”சரியப்பா கனக்க யோசிக்காதேங்கோ.என்ன செய்யிறது எங்கட தலை விதியோ அதுகளின்ர தலைவிதியோ மூண்டு பெட்டையளுக்க தனியனாப் பிறந்திட்டான்.அவனை இஞ்சயும் வச்சிருக்க பயந்துதானே கடனை உடனப்பட்டு காணியையும் ஈடு வச்சு அனுப்பினனாங்கள். அந்தக் கையோட நீங்களும் ஏனோதானோவெண்டு செய்துகொண்டிருந்த வேலையையும் செய்யேலாம படுக்கையில விழுந்த்திட்டியள்.அவன்ர கை அசையிறபடியால்தான் மூத்தவளையும் ஏதோ எங்களால் முடிஞ்சளவுக்குக் கரை சேர்க்கக்கூடியதா இருந்தது.உங்கட டொக்டர் செலவும் எவ்வளவு போயிருக்கும் பாருங்கோ.

அவன் போய் 10-15 வருஷமாகுது.கடன் அடைச்சு காணி மீண்டு அக்காளுக்கும் சீதனமா வீட்டோட காணி,நகை,காசு எண்டு குடுத்துக் கல்யாணம் செய்து குடுத்து இப்ப நிர்மலாவுக்கும் அவன்தானே எல்லாம் செய்யிறான்.பாவம்தான் என்ர பிள்ளை.எங்களால ஓடாய்ப்போகுது.

இதிலயும் ஒண்டு விளங்குதே.நாங்கள் குடுத்து வச்சனாங்கள் எண்டு நன்றியோட அந்த மருதடியானை கையெடுத்துக் கும்பிட்டுக் கொள்ளுங்கோ.மற்ற வீட்டுப் பிள்ளைகள்போல வெளிநாடு எண்டு போனவுடன தறுதலையாய்த் திரியாம எங்களை மறந்து போகாம,ஒரு வெள்ளைக்காரியைக் கல்யாணம் செய்திட்டன் எண்டு சொல்லாம,பிள்ளை எங்கட நிலவரம்தெரிஞ்சு எங்களோட ஒத்துழைச்சு எங்களிலயும் எவ்வளவு பாசம் வச்சிருக்கிறான்.

அவனுக்கும் 38 வயசாகுது.நிர்மலான்ர கல்யாணம் முடிய அடுத்த வருஷத்தில சுதாவுக்கும் இவனுக்குமாச் சேத்து எங்கையெண்டாலும் மாத்துச் சம்பந்தம் அமைஞ்சாக்கூடப் பரவாயில்ல.இன்னும் வயசு போகவிடாமலுக்கு கட்டாயமாச் செய்திடவேணும்”.என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தபடியே இருவரும் அந்த இடத்தால் எழும்பி வர சுதாவும் நெசவால் வர மத்தியானச் சாப்பாட்டுக்கு ஆயத்தமானார்கள்.

நிர்மலாவுக்கும் திருமணம் பக்கத்துக் காளிகோவிலில் சந்தோஷமாக சுற்றம் சூழலோடு நிறைவேறியது.அவளின் கணவர் ஒரு தபால்நிலையத்து அதிகாரியாக இருந்தார்.அவளும் புகுந்த வீட்டோடு ஒன்றிவிட்டாள்.

வருடங்கள் இரண்டு ஆகிவிட்டிருந்தது.சுதாவுக்கு வரன்கள் பார்த்தபடி இருந்தார்கள்.சரியாக இன்னும் அமையவில்லை.இப்படியிருக்க மணியத்தாருக்கும் கமலத்திற்க்கும் மேலதிகமாய் ஒரு ஆசை குடியேறிக்கொண்டிருந்தது.

இரண்டு பெட்டச்சியையும் ஊரோட கட்டிக் கொடுத்தாச்சு.சின்னவளுக்குக் கொஞ்சம் கூடுதலாகச் சீதனம் கொடுத்தாலும் பரவாயில்லை.வெளிநாட்டில மாப்பிள்ளை பார்க்கலாம் என்று.இதைப் பற்றிக் கண்ணனிடமும் கலந்து கதைத்தும்விட்டார்கள்.கண்ணனும் தன்னைமீறிய செயலாக இருந்தாலும் பெற்றவர்களின் ஆசையும் தன் கடமையும் என்று சம்மதித்தபடி சரி பார்ப்போம் என்றுவிட்டான்.கண்ணனுக்குள்ளும் ஆயிரம் கனவுகள்.ஆனால் யாரிடம் மனம்விட்டுத் தன் ஆசைகளை எண்ணங்களைச் சொல்லமுடியும்.தன்னைக் கண்ணாடியில் பார்க்கும்போது மட்டுமே ஒருகணம் யோசித்துச் சிரித்துக்கொள்வான்.பிறகும் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு தன் வேலைகளோடு தன்னைக் கரைத்துக்கொள்வான்.

"இரண்டு பெரிய பாரத்தை இறக்கி வச்சு என்ர கடமையைச் சரிவரச் செய்திட்டன்.இனி என்ன தங்கச்சி சுதா மட்டும்தானே.பிறகு எனக்கு என்ன.சுதந்திரமாயிடுவன்.அப்பா அம்மாவையும் கடைசி வரைக்கும் பாத்துக்கொள்ளவேணும்.ம்ம்ம்...எல்லாம் நல்லதாவே நடக்கும்.அநேகமா லண்டனில பாத்திருக்கிற மாப்பிள்ளை சரிவரும் எண்டுதான் நினைக்கிறன்.லல்லி அக்காவுக்கு ஒருக்கா போன் பண்ணவேணும்.

ஞாபகமா கலண்டர்ல எழுதிவிடவேணும்.நாளண்டைக்கு டொக்டர்.அடிக்கடி முள்ளந்தண்டு குடைஞ்சு நோகுது.இந்தக் குளிர் நாட்டில ஐஸ்பெட்டிக்குள்ள இருக்கிற செத்த கோழிபோலத்தானே இங்க எங்கட வாழ்க்கை.எங்கட ஊர் வாழ்க்கை சுவாத்தியம் எல்லாம் எங்களுக்கு எவ்வளவு நல்லாயிருக்கும்.நாரி,மூட்டு,முது,கை,கால் எண்டு எல்லாமே வலிக்குது."

என்று தனக்குத் தானே மனதிற்குள் பேசியபடியே 3 1/2 க்கு வேலை முடித்து வீட்டுக்கு வந்தவன் பாபுவும் இண்டைக்கு வரப் பிந்தும்.அடுத்த வேலைக்கு 6 மணிக்குப் போகவேணும் என்றபடி ரேடியோவைப் போட்டுவிட்டு சமைக்க ஆயத்தப்படுத்தினான்.

பாபுவும் கண்ணனுமாக ஒரு அறையில் வசிக்கிறார்கள்.ஒத்துப்போகும் புரிந்துகொண்ட ஒரு நல்ல நண்பன்.என்ன....தண்ணியடிச்சுப்போட்டு கொஞ்சம் அரசியல் சினிமா எண்டு உளறுவான்.கண்ணன் தன் களைப்போடு அந்த அறுவையெல்லாம் ம் கொட்டிக் கேக்கவேணும்.இதொண்டுதான் எரிச்சல் வரும் அவனில.

4-5 மாதங்கள் போயிருக்கும்.சுதாவின் திருமணம் சரி என்கிற பேச்சளவில் நின்றுகொண்டிருந்தது.லண்டன் மாப்பிள்ளை என்றவுடன் சீதனம்தான் கூடுதலாகக் கேட்கிறார்கள்.லல்லி அக்கா எப்பிடியும் பேசிச்சமாளிச்சுச் சரிப்பண்ணிடுவா.சுதாவுக்கும் மாப்பிள்ளையைப் பிடிச்சிட்டுது.எப்பிடியும் இதைச் சரியாக்கிடவேணும்.

பழைய லோன் இன்னும் 5 மாசம் கட்டக் கிடக்கு.புது லோன் எடுத்தா அதைக் கழிச்சுத்தான் தருவாங்கள்.பாப்பம்.......சாமாளிப்பம் என்று நினைத்துக்கொண்டவன்.

அன்று வங்கிக்குப் போய் கடன் எடுப்பது பற்றினதான பத்திரங்களை நிரப்பிக் கொடுத்துவிட்டு அப்படியே வைத்தியரிடமும் போய் வந்தான்.இண்டைக்கு லீவு.பாபுவும் நேரத்துக்கு வந்திடுவான்."சொல்ல மறந்த கதை" என்று நல்ல படம் ஒண்டு வந்திருக்கு.கடையில கொப்பி ஒண்டு எடுத்துக்கொண்டு வந்தனான்.பின்னேர வேலை மட்டும்தான்.வந்து சாப்பிட்டு முடிச்சிட்டுப் படம் பாத்திட்டுத்தான் படுக்கவேணும்.

இண்டைக்கு பாபு சமைக்கிறன் எண்டவன்.எனக்கும் முதுகு சரியா வலிக்குது.நல்லா ஐஸ் கொட்டிக்கிடக்குது.சவம் பிடிச்ச ஊர் இது.எங்கட தலைவிதி.நாசம் கட்டினவங்கள் எங்களை ஊரோட நிம்மதியா இருக்கவிடுறாங்களே என்றும் நடுவில்அலுத்துக்கொண்டவன்.....விண்டர் சூவும் (குளிர்காலச் சப்பாத்து) பழுதாப்போச்சு.இந்த வருசம் இதோடயே சமாளிக்கலாம்.அடுத்த வருஷம் வாங்கிக்கொள்ளலாம்.என்று மனதோடு பேசிக்கொண்டே சோபாவில் சாய்ந்தவன் தான் அப்படியே நித்திரையாகிவிட்டான்.

பாபு வந்து கதவைத் திறக்கவே திடுக்கிட்டு விழித்த கண்ணனிடம் பாபு " என்னடா மச்சான் பின்னேர வேலைக்கு நேரமாச்சு.இன்னும் படுத்திருக்கிற."என்றான்.

"ஓமடா மச்சான் அசந்து போனன்." என்றபடி முகத்தைக் கழுவி வெளிக்கிட்டபடியே தன் தங்கையின் திருமணம் பற்றியும்,அதற்காக வங்கியில் கடன் எடுப்பது பற்றிக் கதைத்திருப்பது பற்றியும்,வைத்தியர் முதுகுவலி பற்றியும்,சொல்லிக்கொண்டே வேலை முடித்து வந்து இருவருமாகப் படம் பார்த்துவிட்டுப் படுக்கலாம் என்றும் சொல்லிவிட்டு வேலைக்குப் போய்விட்டான்.

பாபு கோழி ஒன்றை ஐஸ்பெட்டிக்குள்ளால் எடுத்து ஊறவிட்டுவிட்டு சமையலுக்குண்டான மற்றைய ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தான்.
கதவு திறக்கும் சத்தம்கேட்டுத் திரும்பியவன் போய்க் கொஞ்ச நேரத்திலேயே கண்ணன் திரும்பி வந்ததைக் கண்டு திடுக்கிட்டான்.

"என்னடா மச்சான் என்ன நடந்தது"என்று பாபு கேட்கவும்" "இண்டைக்குச் சரியா ஏலேல்ல மச்சான்.குனிஞ்சு நிமிந்து ஒண்டும் செய்ய ஏலாம இருக்கு.முதுகு குடைஞ்சு நோகுது.நாளைக்கு கிறங் (சுகயீனம்) சொல்லிட்டு டொக்டரிட்ட போனாத்தான் நல்லது" என்றபடி படுக்கைக்குப் போய்விட்டான்.

அதே இரவு கண்ணன் வலியால் துடித்துப்போக அவசர அழைப்பு வைத்திய வாகனத்திற்கு தொலைபேசியில் அழைத்துக் கொண்டு போய்ச் சேர்த்தான் பாபு வைத்தியசாலைக்குக் கண்ணனை.

அடுத்த நாள் விடிந்தது ஆனால் கண்ணனுக்கு இருளாக.வைத்தியர் சொன்னது அதிர்ச்சியாக்கியது கண்ணனை."இனி ஒரு நாளுக்கு 4-5 மணித்தியாலங்களுக்கு மேல் வேலை செய்யமுடியாது என்றும்,பாரமான பலமான வேலைகள் எதுவுமே செய்யக்கூடாதென்றும், தொடர்ந்தும் செய்தால் பக்கவாதத்திற்குண்டான அறிகுறிகள் தெரிகிறதென்றும்,பிறகு எழும்பி நடமாடவே முடியாத நிலைமை வந்துவிடுமென்றும்" உறுதியாகத் தெரிவித்தார்.

கண்ணன் தன் 43 வயதின் வாழ்நாடகளில் கடந்த காலத்தில் தன் கடமைகளைச் சரிவரத் தான் செய்துவிட்ட பெருமிதத்தோடு,அதேநேரம் தனதென்ற தன் வாழ்வு தன்னை விட்டுப்போய்விட்ட வேதனையோடு இதை அப்பா அம்மாவுக்குச் சொல்லலாமா வேண்டாமா என்கிற யோசனையோடும் முற்றிலும் பனியால் மூடப்பட்ட சுவிஸ்ன் உயர்ந்த மலைகளைப் பார்த்தபடியே தானும் மலையாய் மலைத்து நிற்கிறான்.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP