Sunday, January 16, 2011

தாய் தேசத்தின் சார்பில் நன்றி.

இன்றுதான் நேரம் கிடைத்திருக்கிறது.இப்போதான் பார்க்கிறேன்.இந்த வருடமும் 2010ன் ஈழம் பிரிவுக்கான விருது ஒன்று இரண்டாம் பிரிவில் உப்புமடச் சந்திக்குக் கொடுத்திருக்கிறார்கள். கிடைத்திருக்கிறது.சந்தோஷமாய் உணர்கிறேன்.என்னை ஊக்குவிக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.அதேநேரம் தமிழ்மணம் நடுவர் குழுவுக்கும் மிக்க நன்றி.

கவிதை என்கிற பெயரில் கிறுக்கிற அளவுக்கு தொடராக என் எண்ணங்களை எழுதமுடிவதில்லை.என்றாலும் மனதின் சில வேதனைகளை நான் எப்படி நினைக்கிறேனோ அப்படியே எழுதி வைக்கிறேன் என் ஊரின் பெயர்கொண்ட உப்புமடச் சந்தியில்.அப்பா அம்மா சொன்ன விஷயங்களும் நினைவோடு கலந்திருக்கும்.அதன் நினைவுச் சாயலே இந்த வெற்றிக்குப் பதிவான "யாழ் மாநாட்டை மீட்ட வைத்த செம்மொழி மாநாடு".

குழந்தைநிலாவில் ஈழம் பதிவில் "உயிர்த்தளம்"கவிதை வெற்றிபெறும் என்று நினைத்திருந்தேன்.அது என் உள்ளத்து ஓலம்.அத்தனை பிடிக்கும் என் தேசத்தை.என் மக்களை.

இப்போதுகூட மழை வெள்ளத்தால் அவதிப்படும் என் உறவுகளைச் சொந்தங்களை நினைத்து கொஞ்சம்கூட சந்தோஷமில்லாத மனநிலையிலேயே செத்தபிணமாகக் கடமையே என நாளையும் நொடியையும் போகச்செய்தபடி இருக்கிறேன்.நேற்றைய பொங்கல்கூட வானொலியில் கேட்டே அறிந்துகொண்டேன்.அதன்பிறகுகூட குளித்துச் சாமிகும்பிடக்கூட மனமற்று என்ன பொங்கலும் பூசையும் என்று மனவேதனையுடனேயே பொங்கல் பொங்காமல் போனது.

போரினாலும் அடிக்கடி இயற்கையாலும் அரசியலாலும் அவர்களின் வாழ்நாட்காலம் முழுதுமே அவலம்...அவலம்.கொடுத்தே கை தேயந்த தமிழன் இன்று உதவி...உதவி என்ற ஓலத்தோடு வேறு வழியேயில்லாமால் கை நீட்டி ஒல்கிக் குறுகியபடி,கிடைத்ததைச் சாப்பிட்டு,கிடைத்த இடத்தில சரிந்து,தூக்கம் நிம்மதி கெட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

தராசின் நிலையானது வாழ்வு.ஒருப்பக்கம் தாள மறுபக்கம் கொஞ்சம் எழும்பிவருவதாய் தமிழ்மணத்தின் அறிவிப்பு.அங்குகூட என் ஈழம்.மனம் அழுகிறது.ஈழத்தாய்....என் தேசத்தாய்... இப்போதெல்லாம் பேசுபொருளாகிவிட்டாள்.அவளின் கஸ்டங்கள் வேதனைகளே ஒரு சினிமாவில்,மேடைப்பேச்சுக்களில்,எழுத்துக்களில் எல்லாம் வியாபாரமாய் பேர் புகழ் தேடிக்கொடுக்கும் பொருளாய் ஆகிவிட்டது.

என் தாய் தேசம் தந்த பரிசாகவும் மனநெகிழ்வோடு கண்ணீரோடு இந்தப் பரிசை கையேந்திக்கொள்கிறேன்.நன்றி நன்றி !

அன்போடு நட்போடு ஹேமா.

Monday, January 10, 2011

திரும்பிப் பார்க்கிறேன்.

பாதை சீராக இல்லை
குறுக்கும் கோணலுமாய்
நினைத்த இடத்தில் திரும்பியும்
நுழைந்து நடந்தும்
சறுக்கியும்
தடுமாறியபடி முடியாமல்
திரும்பிப் பார்க்கிறேன்.
வளைந்து வளைந்து
அழகான
ஒரு பாதையொன்றின்
ஆரம்பமாய் புதுப்பாதை!!!


தொடர்பதிவு எழுதவென்று கௌசி அன்புக்கட்டளை போட்டிருக்கிறார்.நன்றி தோழி.நான் 2010தை நான் திரும்பிப் பார்க்கவேணுமாம்.பழையவைகள மறப்பவள் அல்ல நான்.ஆனால் திரும்பிப் பார்க்க ஒரு பயம்.எப்போது கலங்கிய பாதைதான் என்னுடையதாகிறது. துணிச்சலும் தைரியமும் தந்தவிட்டு போராடிக்கொண்டேயிரு என்றும் ஒரு வரியில் முடித்துவிடப்பட்டிருக்கிறது வாழ்வு.

முழு வாழ்வையும் திரும்பிப் பாத்தால் சொல்ல முடிந்தவையும் சொல்ல முடியாதவையுமாய் நிறையவே கதை பேசிச் சிரித்து அழும்.2010 ல் பெரிதாக சொல்ல இல்லை.நாடும் என் மக்களும் இரத்தமும் போரும் முள்வேலியுமாய் முடிவைடந்து இன்று சத்தமில்லா யுத்தத்துக்குள் என் மக்கள்.

போனவருடத்தில்தான் ஊர் போய் வந்தேன் என் மலையடிவாரத்துத் தோழியைக் கண்டேன்.அவளின் மனம் என்னைப் புரிந்துகொண்டாலும் வெறும் புன்னகையோடு மட்டும் என்னை வழியனுப்பி வைத்தது அவள்மேல் எனக்குப் பெருத்த கோவம்.ஆனாலும் அவளை நினைத்து வருந்தாத நாள் இல்லை.

மற்றும் அந்தச் சமயத்தில் போரின் கோரங்களால் நிறைந்த என் தேசத்தைக் காணமுடியாமல் அவதிப்பட்டேன்.அதனால் யாழ் போகவில்லை.என் இரத்த உறவுகள் எல்லோருமே அங்குதான்.தூர இருந்தாலும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்துகொண்டுதான் இருப்பது மட்டும் நின்மதியாக இருக்கிறது.

புலம் பெயர்ந்த எங்களுக்கு இன்னொரு சங்கடமும்.10 - 15 வருடங்களுக்கு மேலாக உறவுகளை விட்டுத் தள்ளியிருக்கும் ஒருவருக்கு ஊரில் தலைமுறை மாற்றங்களால் ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொளவதும் நிறைந்த அன்போடு நெருங்கிக்கொள்வதும் கஸ்டமான விஷயம்.எனக்கும்கூட அது மனச் சங்கடத்தையே தருகிறது.அதோடு ஊரிலே புலம் பெயர்ந்து யார் யார் எங்கிருக்கிறார்கள் என்றுகூடத் தெரிவதில்லை.இந்தக் கதை சொல்லத் தொடங்கினால் சொல்லிக்கொண்டே போகலாம்.
விடுங்கள்.

முக்கியமான ஒன்று.அப்பா அம்மாவுக்கு 60ம் கல்யாணம் செய்து பார்த்துச் சந்தோஷப்பட்டோம்.அதன் பிறகு சில என் பிடிவாதகுணத்தால் தற்சமயம் அம்மா என்னோடு கதைப்பதை நிப்பாட்டியிருக்கிறா.இது மிகவும் கஸ்டமாயிருக்கு.காலம் சரிசெய்யும் என்ற நம்பிக்கையோடு நகர்கிறது அகதி தேசத்து வாழ்வு.

சுவிஸ் வாழ்வும் வேலையும் தனிமையும் ஒற்றைச் சிநேகமும் என் அன்புக்காதலன் சச்சின் தரும் முத்தமும் அன்பும் அப்பிடியே மாறாமல் நிறைவோடு.என்ன...அவன் இப்போ கொஞ்சம் வளர்ந்திருக்கிறான்.என்னைக் கவனிப்பது குறைந்து தன் வயதுச் சிநேகிதர்களோடு மட்டுமே விளையாடுகிறான்.ஆனால் புதுமாதிரியான கார் செய்து தருவதாகச் சொல்லியிருக்கிறான்.அவனுக்காகக் காத்திருக்கிறேன்.

இணையம்...நான் வலைப்பதிவு ஆரம்பித்த காலத்தில் ஏதோ என் கவிதைகளைச் சேமிக்க ஒரு இடம் என்று மட்டுமே சொல்லித் தந்தார்கள்.
ஆனால் அதுவே ஒரு குட்டி உலகமாய் இருக்கிறது இப்போ.இங்கும் நான்,
நீ,ஊழல்,போட்டி,பொறாமை,ஒதுக்கிவைப்பு,முகஸ்துதி,குழுப்போராட்டம் இப்படி ஒரு அரசியலாகவே காண்கிறேன்.

இதற்குள்ளும் நல்ல சில உள்ளங்களைக் கண்டுகொண்டுதான் இருக்கிறேன்.குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு யாருடனும் நெருங்காவிட்டாலும் பின்னூட்டங்கள் அவர்களின் மனங்களைக் காட்டிக்கொண்டிருக்கிறது.

எனக்கு இங்கு எல்லோருமே சமம்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இயல்பு.அவரவர் திறமை.எனக்குக் கவிதை என்று வார்த்தைகள் கோர்க்கும் அளவுக்கு ஒரு கட்டுரை எழுதவோ நகைச்சுவையாக எழுதவோ வராது.முயற்சி செய்தும்கூட முடியாமல் போகிறது.எனவே எல்லோர் எழுத்துக்களையும் வாசிப்பேன் ரசிப்பேன்.

இந்த இடத்தில் ஒரு குற்றச்சாட்டும் ஒன்று.நான் தரம்பார்த்து பின்னூட்டம் இடுகிறேனாம்.எனக்கே சிரிப்பாயிருக்கிறது.இயல்பாகவே என்னிடம் அந்தக் குணம் இல்லை.குழந்தையோ பெரியவர்களோ திறமையைப் பாராட்டவும் என் தப்பு ஏதுமென்றால் மன்னிப்புக் கேட்கவும் தயங்கமாட்டேன்.இங்கு திறமையே தவிர எல்லோருமே சமம்.சிலசமயம் அந்தப் பதிவுக்கேற்றபடி கொஞ்சம் கொண்டலாகச் சொல்லியிருப்பேன்.நல்லதொரு கவிதைக்கு கிண்டலாய் பின்னூட்டம் கொடுக்கமுடியாதுதானே.

இணையம்தான் என் உறவாய் இப்போதெல்லாம்.ஆனால் அதையே நம்பியும் அல்ல வாழ்வு.இதில் ஒன்றை நிச்சயம் சொல்லியே ஆகவேண்டும்.போன வருடத்திலும்(2010)தமிழ்மண விருது இரண்டாம் இடத்தில் கிடைத்தது.இப்போதும் மூன்றாம் கட்டத் தேர்வு வரைக்கும் என் நான்கு பதிவுகள் வந்திருக்கு.இந்த இடத்தில் மனம் நெகிழ்கிறது.என் சார்பில் என் ஒரு ஓட்டைத் தவிர எல்லாமே யார் என்றுகூடப் பார்க்கமுடியாத என் இணைய உறவுகள்தான்.இந்தச் சமயத்தில் அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி நன்றி.

அன்பு என்பது எல்லோருக்குமே பொது.அவரவர்களுக்கேற்றபடி அதன் வடிவம் மட்டுமே மாறியிருக்கும்.ஒன்று கரிசனம்.அடுத்தது கனிவு.பின் பாசம்.மற்றது காதலாய்.

இங்கெல்லாம் சம்பளத்திற்காக வேலை செய்வது தவிர வேலை இடங்களில் நிறைவான அன்பையெல்லாம் எதிர்பார்க்கமுடியாது.என்னிடம் எங்கள் பண்பாடு இங்கும் தொடர்கிறது.
ஏதாவது வீட்டில் பழுதுபட்டால் பார்க்க வருபவர்கள் விளம்பரங்களோடு (தொலைபேசி அட்டை முதல் முட்டை வரை)வந்து வீட்டில் அதைப் பற்றிச் சொல்லிக் களைப்பவர்கள் என்று இந்த நாட்டவர்கள் பள்ளிச் சிறுவர்கள்கூட வருவார்கள்.அவர்களுக்கு ஏதாவது குடிக்கிறீர்களா என்று கேட்பதும் கொடுப்பதும் என் பழக்கம்."தமிழர்களைத் தவிர வேறு யாரும் இப்படிக் கேட்பதில்லை" என்று சொல்வார்கள்.

இதில் என்ன இருக்கிறது.ஒரு மனிதனின் அடிப்படை மனிதாபிமானம்.இந்தப் பழக்கம் இல்லாத ஒருவரைக்கூட யோசிக்க வைத்து நாமும் இப்படி இருக்கவேண்டும் என்று சிலசமயம் மாற்றி வைக்கும்.எமக்காக யார் எம்மை எதிர்பார்த்து யார் என்று மனம் சோர்ந்து இருக்கும் சிலரிடம் காட்டப்படுவதே கரிசனமாகிறது.

தெருவில் வைத்தியசாலையில் மற்றும் பொது இடங்களில் நாங்கள் காட்டும் சிறு சிறு உதவிகள் அன்பு வார்த்தைகள் அந்த இடத்தில் சம்பந்தப்பட்டவரை மகிழ்விக்கும்.மனதிற்கு ஆறுதலாக இருக்கும்.

இங்கெல்லாம் வயது போனவர்கள் தங்களால் முடிந்தவரை தனியாகவே வாழ்கிறார்கள். முடியாத நிலை வரும்போதுதான் வயோதிப மடங்களுக்குப் போய் இருப்பார்கள்.கைகளில் பொருட்களைக் காவியபடி வருபரைக் காண மனம் என் பெற்றோர்களையே நினைத்துக்கொள்வேன்.நேரமிருக்கிற நேரங்களில் வீடுவரை கொண்டுபோயும் கொடுத்திருக்கிறேன்.சிலர் மறுத்தும் போவார்கள்.மறுத்தாலும்கூட என் மனம் முழுத்திருப்தியாகிவிடும்.அவர் பார்வையில் காணும் அன்பு நெகிழ்ச்சியூட்டும்.

எனவே எல்லோரிடமும் அன்பாய் இருப்போம் !

சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.அது இதயத்தின் ஓசை.
சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.அது சக்தியின் பிறப்பிடம்.
படிக்க நேரம் ஒதுக்குங்கள்.அது அறிவின் ஊற்று.
நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்.அது மகிழ்ச்சிக்கு வழி.
உழைக்க நேரம் ஒதுக்குங்கள்.அது வெற்றியின் விலை.

கௌசி ஏதோ சொல்ல நான் ஏதோ புலம்பி முடித்திருக்கிறேனோ !

ஹேமா(சுவிஸ்)

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP