Tuesday, December 28, 2010

சுவிஸ்...ல் இன்றைய குளிரும் அழகும்.

Swiss - Bern ல் என் இருப்பிடத்தை அண்டிய பகுதிகள் மட்டும்...!































































ஹேமா(சுவிஸ்)

Thursday, December 23, 2010

உதவுவோமா.

மீண்டும் ஒரு புது வருடம் பூக்கத் தொடங்குகிறது.ஒவ்வொரு வருடத்திலும் ஒவ்வொரு நல்ல விஷயம் செய்யவென்று உறுதி செய்துகொள்வது என் வழக்கம்.அதன் முயற்சியில் சிலசமயம் நடக்கும் நடக்காமலும் போகிறது.ஆனாலும் தொடர்ந்துகொள்வேன்.எனக்கே அது இடைஞ்சலாகவும் வந்து சூழ்ந்துகொண்டதும் உண்டு.என்றாலும் முடிந்த உதவிகளைச் செய்வது மனதிற்கு ஒரு திருப்தி.பிறந்ததின் பயன்.

ஒரு நாள் காலைநேரம் ஒரு முதியவர் கடற்கரையில் மெல்ல நடந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கண்ட ஒரு காட்சி அவரது கவனத்தைக் கவர்ந்திழுத்தது.ஒரு இளைஞன் ஒருவன் அலைகளினூடேயும் கரையிலும் மாறி மாறி ஓடிக் குனிந்து ஏதோ செய்து கொண்டிருந்தான்.முதியவருக்கு அவன் என்ன செய்கிறான் என்று அறியும் ஆர்வம் மேலிட அவன் அருகில் சென்றார்.அவன் குனிந்து கரையோரம் ஒதுங்கிக்கிடக்கும் நட்சத்திர மீன்களை ஒன்றொன்றாகப் பொறுக்கி மெல்ல கடலுக்குள் வீசிக்கொண்டிருந்தான்."தம்பி! நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார் முதியவர்.

"ஐயா...வெயில் ஏறிக்கொண்டிருக்கிறது அலை உள்வாங்குகிறது.எனவே கரையோரம் இரவில் ஒதுங்கியுள்ள இந்த நட்சத்திர மீன்களை நான் கடலுக்குள் எறிந்துகொண்டிருக்கிறேன். இல்லையென்றால் அவைகள் செத்துவிடும்." என்றான் இளைஞன்."தம்பி! இந்தக் கடற்கரையோ பல மைல்கள் நீளமானது.கரை முழுவதும் ஏராளமான மீன்கள்
ஒதுங்கியுள்ளன.உன் முயற்சியால் ஒரு மாற்றமும் விளையப்போவதில்லை." என்றார் முதியவர்.இளைஞன் புன்னகைத்தான்.குனிந்து மற்றொரு மீனை எடுத்துக் கடலில் வீசியவாறே "மாற்றம் இந்த மீனுக்கு விளைந்துள்ளது ஐயா!" என்றான்.

நாம் செய்கின்ற சின்ன விஷயமானாலும் சம்பந்தப்பட்டவருக்கு அது பெரிதாகவும் தேவையானதாகவும் இருக்கும்.சென்ற வாரமொரு நிகழ்ச்சி பார்த்தேன் தொலைக்காட்சியில். திடீரென விபத்தில் இறந்த 15-16 வது மகனின் 11 உறுப்புக்களை அந்த நேரச் சோகத்தையும் தாண்டி தேவையானவர்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள் அவனின் பெற்றோர்கள்.யாருக்கு இப்படி ஒரு மனம் வரும்.அந்தத் தாய் அழுதபடியே தன் மகனை அந்தப் பதினொரு பேரிலும் பார்ப்பதாய்ச் சந்தோஷப் படுகிறார்.

இதற்குள் அப்பா சொன்ன கதையையும் சேர்த்துக்கொள்கிறேன்.

ஒரு கிராமத்திற்குச் ஒரு பெரியவர் சென்றிருந்தார்.சிறுவன் ஒருவன் அவரிடம் ஒரு ரூபாய் பிச்சை போடுமாறு கேட்டான்.அவர் அவனைப்பார்த்து "நான் உனக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் நீ என்ன செய்வாய்?" என்று கேட்டதற்கு சிறுவன் ஐம்பது சதத்தை என் அம்மாவிடம் கொடுத்துவிட்டு ஐம்பது சதத்திற்குப் கொஞ்சப் பழங்கள் வாங்கிவந்து விற்பேன்" என்று சொன்னான்.அவரும் அவனுக்கு ஒரு ரூபாய் கொடுத்தார்.

வருடங்கள் கழிந்தன.மீண்டும் அந்தப் பெரியவர் அங்கு வந்திருந்தார்.அப்பொழுது ஒரு பெரியவர் வந்து அவரை வீழ்ந்து வணங்கி "ஐயா...என்னைத் தெரிகிறதா?" என்று கேட்டார்."மன்னிக்கவும்.எனக்கு உங்களை அடையாளம் தெரியவில்லையே! நீங்கள் யார்?" என்றார் பெரியவர்."நீங்கள் சில வருடங்களுக்கு முன்பு இந்த ஊருக்கு வந்த பொழுது ஒரு சிறுவன் தங்களிடம் ஒரு ரூபாய் பிச்சை கேட்டான்.நீங்களும் கொடுத்தீர்கள்.அந்த ஒரு ரூபாயை முதலீடாகக் கொண்டு அவன் பழ வியாபாரம் தொடங்கி இப்பொழுது ஒரு பெரிய பணக்காரனாகி விட்டான்.அந்தச் சிறுவன் நான்தான் என்று சொன்னார் அந்தச் சிறுவனான பெரியவர்.

ஒரு ரூபாய் என்ன பெரிய பணமா எம் வாழ்வின் ஓட்டத்தில்.ஒற்றை ரூபாய் ஒருவரின் வாழ்வையே புதுப்பித்திருக்கிறது என்றால் எத்தனை சந்தோஷம்.அவன் வாழ்வையே புரட்டிப் போட்டிருக்கிறது.இதுமாதிரிச் சின்னச் சின்ன உதவிகள் செய்யும் மனநிலைகூட இல்லாமலா நாங்கள் வாழ்கிறோம்.எங்கள் தோளை நாங்களே தட்டிக்கொடுத்து எங்களை நாங்களே உற்சாகப்படுத்தும் நிகழ்வுகள் இவைகள்.

வறுமையும் கையேந்துதலும் அசிங்கம் என்று அடுத்தவர்களைப் பார்த்து பேசிக்கொள்ளும் நாம் அதைக் குறைக்கவோ தடுக்கவோ என்ன செய்கிறோம்.

நம் நாடுகளில் நாளொன்றில் தெருவில் ஒரு விநாடி நின்று பார்த்தாலே ஆயிரம் உதவிகள் செய்ய்லாம்.அதற்காக வேலையற்றவர்களா நாம் என்றில்லை.நடக்கும்போது காலில் தட்டுப்படும் குப்பையை எடுத்து அதன் இடத்தில் போடலாம்.தெருக்கடக்கும் கண் தெரியாதவருக்கு உதவலாம்.பாரம் சுமக்கும் ஒருவருக்குச் சுமையைத் தூக்கித் தலையில் வைக்க உதவி செய்யலாம்.இப்படி எத்தனயோ.அன்று இரவு தூங்கப்போகையில் அன்றைய நிகழ்வை நினைத்துப் பார்த்தாலே நின்மதியான திருப்தியான தூக்கம் வரும்.

எனவே அடுத்தவர் வாழ்வை மாற்றி எம்மையும் மாற்றிக்கொள்வோம்.
பிறக்கும் புதிய ஆண்டில் இருள் விலகி சந்தோஷ ஒளி பிறக்க நல்லன செய்வோம்.

Thursday, December 16, 2010

தொலைந்துபோவமோ தூரதேசத்தில்.


மறந்து போகுமோ மண்ணின் வாசனை.
தொலைந்து போவமோ தூர தேசத்தில்.
தூர....தூர....தூர....தூர தேசத்தில்.

வேப்பமரக் குயிலே...
குயிலே......என் வீடு இன்னும் இருக்கிறதா
ஏக்கமுடன் நீ பாடும் ஒற்றைக் குரல் ஒலிக்கிறதா
ஒற்றைக்குரல் ஒலிக்கிறதா......ஒற்றைக்குரல் ஒலிக்கிறதா
நேப்பிள்மர நிழலோரம் மெல்ல விழி மூடுகையில்
கேட்குதடி உன் பாடல்
தேம்புதடி என் இதயம்....

மறந்து போகுமோ மண்ணின் வாசனை.
தொலைந்து போவமோ தூர தேசத்தில்.
தூர....தூர....தூர....தூர தேசத்தில்.

வந்த இடம் ஒட்டவில்லை வாழ்நிலமும் கிட்டவில்லை
சொந்தமும் பக்கமில்லை சொல்லியழ நேரமில்லை
சொல்லியழ நேரமில்லை
சொல்லியழ நேரமில்லை......சொல்லியழ நேரமில்லை
இந்த நிலை மாறி எங்கள் சொந்த மண்ணைச் சேர்வதெப்போ
அன்னை நிலம் முத்தமிட்டு அழுது துயர் தீர்வதெப்போ
அழுது துயர் தீர்வதெப்போ....

மறந்து போகுமோ மண்ணின் வாசனை.
தொலைந்து போவமோ தூர தேசத்தில்.
தூர....தூர....தூர....தூர தேசத்தில்.

தூர தேசத்தில்.....
தூர தேசத்தில்.....
தூர தேசத்தில்.......................!!!!!!

பாடியவர் - சுகல்யா ரகுநாதன்.
வரிகள் - கலைவாணி ராஜகுமாரன்.

Monday, December 13, 2010

தொலையாத ஞாபகங்கள்.

தட்ஷணாமூர்த்தி


நினைவலையொன்று வீசியடிக்கிறது இன்று தொலைபேசியூடாக அம்மாவோடும் அப்பாவோடும்.

ஞாபகங்கள் ...இதுதான் எங்கட பலஹீனம்.எல்லாத்தையும் மனசுக்குள்ள பொக்கட் போல நிரப்பி வச்சுக்கொண்டு திரியிறம்.அது உடம்பு முழுக்க ஊர்ந்தபடி திரியுது.எதையும் பெரிசா நினைக்காமல் மறந்திட்டா நிறையப் பிரச்சனைகள் குறையும்.ஒதுக்கித் தள்ளி வச்சிட்டு இதுகள் இல்லாட்டி எங்களுக்கென்ன எண்டு இருக்க முடியாமல் இருக்கு.

லண்டனில இருந்து வாற தொலைக்காட்சியில ஒரு விளம்பரம்.அதில கோயில் திருவிழா. அங்க ஒரு மேளச்சமா.அதைப் பார்த்தால் ரசிச்சுச் தொலைச்சிட்டுப் போகவேண்டியதுதானே. ஏன் உடன் எங்கட உப்புமடச் சந்தியடிப் பிள்ளையார் கோயில் ஞாபகத்துக்கு வரவேணும்.
அது துரத்தியடிக்குது ஊர் வரைக்கும்.

தூரமாய்க் கேட்ட மேளச் சத்தம் இப்ப பக்கதில கேக்குது.அந்த மண்வாசனை செம்பாட்டுப் புழுதியும்,பனக்கூடலும்,பனம்பழ வாசமும்,பன்னாடை,காவோலை,கொக்கறை,ஙொய் என்று பறந்து பயமுறுத்தும் மாட்டிலையான் அதைத்தொடர்ந்து....

அப்புக்குட்டி அண்ணாட்ட ஏதோ ஒரு பனைமரம் குறிச்சு அந்தப் பனைக் கள்ளுத்தான் வேணுமெண்டு வாங்கிக் குடிச்சிட்டு சித்தியை அடிக்கிற சித்தப்பா,அவரோடு சேர்ந்து குடிச்ச வேலுப்பிள்ளை அண்ணை வடக்கு வீதியில மேளச்சத்தம் கேட்டு கண்ணையும் பூஞ்சிக்கொண்டு வாயையும் சப்பிப் புழுந்திக்கொண்டு "அடியுங்கோ நல்லா அடியுங்கோ" எண்டு தானும் தாளம் போட்டபடி அட்டகாசம் பண்றதையும் மறக்க முடியேல்ல.

நிலவில் நண்பர்கள் சூழ
கோயில் மணல் கும்பியில்
நான் தான் ராஜாவாய்.

அடுத்த நிமிடம்கூட
கேள்விக்குள் இல்லாத
விதை முளைத்து
வெளி வந்த வசந்த காலம்.

பூவரசம் தடியும்
கள்ளி முள்ளும்
காஞ்சூண்டி இலையும்
பிச்சு மறைச்சு
மூடியொரு பொறிக்கிடங்கு.

குண்டிக் கழுசானில்
தபால் போடலாம்.
மூக்கைச் சீறி
சட்டையில் துடைச்சபடி

நிலவு வெளிச்சத்தில்
ஒளிச்சிருச்சிருந்து பாக்க
பொறிக்கிடங்கில்
விழுந்து
அம்மா என்று அலறும்
யாரோ ஒருவர்
அடுத்த நொடி
அப்பா வாறார்.

மாயமாய் மறையும்
வித்தைக்காரன் நான் அப்போ!!!

சில நேரங்களில் இப்பிடி நினைவுகள் துரத்தி துரத்தி அடிக்கேக்க எங்கயாச்சும் ஒரு மூலையில குந்தியிருந்து அழவேணும் போலக் கிடக்கு.பக்கத்துக் கோயில்ல திருவிழா எண்டா முதல் நாளே லவுட்ஸ்பீக்கர்ல பக்திப் பாட்டுக்கள் கேக்கத் தொடங்கிடும்.கிட்டத்தட்ட வீடும் கோயில்போல ஆயிடும்.விடியக்காலேல எழுப்பிவிட்ருவா அம்மா.துளசிமாடம் சுற்றிப் பெரிய முற்றம்.அதைப் புழுதி பறக்கக் கூட்டிப் பிறகு புழுதி தணிக்க சாணகம் கரைச்சுத் தெளிச்சு முற்றம் நிறையக் கோலம் போட்டு வீட்டு முற்றத்தில கட்டில் போல ஒரு பெரிய திண்ணையோடு ஒரு பகுதி.அதையும் அழகா பசுஞ்சாணியால மெழுகிவிடுறா அம்மா.

வீட்டில சொல் பேச்செல்லாம் அந்த நேரத்தில ஒழுங்காக் கேப்பம்.ஏனெண்டால் இரவில கண்ணன் கோஷ்டி,சின்னமணி அண்ணையின்ர வில்லுப் பாட்டு,சின்னமேளம் எண்டு நடக்கும்.பிறகு விட மாட்டினம்.எல்லாரும் தோய்ஞ்சு குளிச்சு சாமி கும்பிட்டு பிடிக்காவிட்டாலும் விரதம் இருந்தே ஆகவேணும்.பசியெண்டா கண்ணுக்குள்ள பசிக்கும்.

அம்மா சமைக்க அடுக்குப் பண்றா.அம்மாவுக்கு தேங்காய் துருவி வெங்காயம் உரிச்செல்லாம் குடுப்பன் வீட்ல நிண்டா.அப்பாவும் ஒரு சாதரண தவில் வித்வான்தான்.போய்ட்டார் வேற எங்கேயோ சேவுகமாம்.நான் பள்ளிகூடம் போகேல்ல.பிள்ளையார் எல்லாம் அருள் தருவார் எண்டு திருவிழா நேரத்தில 2-3 நாளைக்குப் போகமாட்டன்.

சமைச்சு வச்சிட்டு கோயிலுக்குப் போய் வந்துதான் சாப்பிடுவம்.கோயில்லயும் சாப்பிடலாம். அன்னதானம் தருவினம்.அம்மாவுக்கு வருத்தம்.பிந்தினால் மயங்கி விழுந்திடுவா.அம்மா பூசை முடிய அவசரமா வீட்டை வந்து சாப்பிடுவா.நான் வரமாட்டன்.அம்மாட்ட குழப்படி செய்யமாட்டன் எண்டு சத்தியம் பண்ணிட்டுத்தான் நிப்பன்.அதுவும் விரதமெண்டா சத்தியத்தைக் காப்பாத்தவேணும்.

பூசை தொடங்குது.சுத்துப்பலி சாமியைச் சுத்துவினம்.தொடங்கும் ஆரவாரம்.ஆம்பிளைகள் பிரதட்டையும்,பொம்பிளைகள் அடியழிச்சும் வருவினம்.வடக்கு வீதிதான் அமர்க்களம். சாமியும் அப்பிடியே நிக்கும்.அப்படி ஒரு நிகழ்வு அதிலதான்.


இணுவில் தட்ஷணாமூர்த்தி,இணுவில் சின்னராசா,கைதடிப் பழனி,நாசிமார் கோயிலடி கணேசு.சமா எண்டா அதுதான் மேளச்சமா.அதுதான் கேட்டது எனக்கு இப்ப கொஞ்சம் முன்னால.அவையளை அதில கன நேரம் நிக்க வைக்கவெண்டே பெரிசா மைக் கொண்டு வந்து வச்சிடுவினம்.

தட்ஷணாமூர்தியின்ர வடிவைப் பாக்கவெண்டே பெட்டையள் கூடி நிப்பினம்.அவர்தான் தொடங்குவார் தெரியுமோ.நெஞ்சில மொத்தமா ஒரு சங்கிலி மீன் வச்ச பதக்கத்தோட சிரிச்சபடி மனுஷன் தொடங்கி வைப்பார்.அவரின்ர தவில் மழைபோல கொட்டித் தீர்க்கும். கடல் போல கொந்தளிக்கும் விரல்களில அத்தனை லயம்.பிசகாத தாளம்.கோபமாய் முறைச்சு சிரிச்சு தானே தாளமும் போட்டுக் காட்டித் தன் கலையின் அத்தனை வித்தையையும் கலந்து குழைத்துத் தரும் கலைக் கடவுள் அவர்.

மேளத்தில் முத்துவிரல்கள் விளையாடி தாளலய ஞான தரிசனங்கள் காட்டிய நம் ஈழத் தவிலரசன் எழிலார் இசைக்கணித வேழமெனத் திகழ்ந்த வித்தகன் என்பார்கள் அவரை.

ஈழத்து மேதை கொடுத்த லயத்தை அப்பிடியே கேட்டு வாங்கிக் கொள்கிறார் இணுவில் சின்னராசா.தடியன் சின்னராசா.கருவல் சின்னராசா எண்டெல்லாம் பேர் வச்சிருக்கிறம் அவருக்கு.மலைபோல பெருத்த உடம்பு.தந்ததை நான் அழகாக இன்னும் அழகாய் மெருகுபடுத்தி வாசிப்பேன் என்பதுபோல தாளக்கட்டோட பிசகாமல் வேர்த்து ஒழுக ஒழுக வாசிக்கிறார்.பக்கத்தில அவரின்ர மகனும் நிக்கிறார் தாளம் போட்டபடி.தட்ஷணாமூர்த்தியை நேர பார்த்தபடி என்னாலயும் ஏலும் என்கிற மாதிரி சிரிச்சபடி வாசிக்கிறார்.நாங்கள் கொஞ்சப் பெடியள் சுத்தி நிண்டு வேடிக்கை பாக்கிறம்.ஆனாலும் ரசிக்கிறம்.சிரிக்கிறம்.தாளம் போட்டும் பாக்கிறம்.ஆனால் அவையள் போடுறது வேற மாதிரிக் கிடக்கு.

விரதம்.பட்டினி சனங்களுக்குப் பசி.எண்டாலும் வெயிலுக்க நிக்குதுகள் மேளச்சமா ரசிச்சபடி.இதை விட்டால் இனி அடுத்த வருசம்தானே.


N.K.பத்மநாதன்

சின்னராசாவைக் கவனிச்சபடி கட்டையான ஒருத்தர்.கருப்புத்தான்.கை துருதுருக்கக் காத்திருக்கிறார் கைதடிப் பழனி.ஞானம் முட்டின தாள லயிப்பு சின்னராசவின்ர வாசிப்பில.அவர் குடுக்க இவர் வாங்கிறதுபோல அப்பிடியே எட்டிப் பிடிச்சுக்கொள்றார் பழனி.வாங்கிய வேகத்தில் தன் திறமையைச் சொல்லாமல் பார்வையாலயே கர்வமாய்ப் பார்த்தபடி வெளுத்து வாங்குகிறார்.தாளம் ஏற ஏற அவரை விட தட்ஷணாமூர்த்தியும் சின்னராசாவும் வித்துவத்தில் திறமையாய் இருந்தாலும் தானும் சளைத்தவரில்லை என்பதைப் புன்னகைத்தபடி தவிலில் சொல்லிக் காட்டியபடி வாசிக்கிறார்.

இது ஒரு சோர்வில்லாத சமர்.தாளத்தை மெட்டுக்குள் அடக்கும் வித்தை.கைமாறும் தாளக்கட்டு தவிலுக்குள்.பசி பறந்திட்டுது.அம்மாகூட வீட்டை போகாம மயங்கியும் விழாமப் பாத்துக்கொண்டிருக்கிறா. பிள்ளையாரப்பா அழகா ரசிச்சபடி இருக்கிறார்.பசிக்கேல்ல அவருக்கும்.

நிலை கலையாமல் பார்த்துக்கொண்டிருந்த வேகத்திலயே மேளச்சமா நாச்சிமார் கோயிலடி கணேசு,வாக்கர் கணேசு எண்டு சொல்ற அவரிட்ட போய்ட்டுது.அவர் கால்களை அகல வச்சபடி தாளத்தைக் காலில போட்டுக்கொள்றார்.தாளக்காரருக்கு ஒரு முறைப்பு.தவில் ஒன்றுதான் என்றாலும் ஒவ்வொருவர் வாசிப்பிலும் ஒவ்வொரு வித்தியாசம் காணலாம் வாசிக்கும் தன்மையிலும் தவிலின் நாதத்திலும் கூட.கணேசு வாசிக்கும்போது உடம்பு அசையாது.வெத்திலை வாய் நிறைய எப்பவும் இருக்கும்.கோயில்ல வாசிக்கும்போது மட்டும் இருக்காது.நாசூக்கான வாசிப்பு எனலாம்.

கானமூர்த்தி பஞ்சமூர்த்தி

கண்கள் விரிய காது அடைக்க ஆனாலும் தூரமாய்ப் போகாமல் பக்கத்தில நிண்டு பார்ப்போம்.ஒருத்தை ஒருத்தர் போட்டிபோல யாரையாச்சும் தடக்கி விழுத்தவேணும் எண்டுதான் வாசிப்பினம்.யாருமே தாளம் பிசகாம லயம் குழம்பாம வாசிப்பினம்.ஒருத்தருக்கு ஒருத்தர் குறைஞ்சவை இல்லை.வீச்சுக் குறையாத கலைச் செல்வங்கள்.அந்த நாதம் எல்லாம் காற்றில் தொங்கி நிற்கிறது இப்போ.அவர்களும் இல்லை இப்போ.வாரிசுகள் அவர்கள் அளவுக்கு இல்லாமல் வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் தாளக்கட்டுக்கு தலையசைத்த வேலுப்பிள்ளை அண்ணையும் பனை மரமும் இப்போது அந்த இடங்களில் இல்லை.எதுவுமே இல்லாத அந்த இடத்தில் ஒரு புதைகுழியோ.........புத்தர் சிலையோ......!!!

இதில் குறிப்பிட்ட கலைஞர்களை விட இவர்கள் காலத்தில் வாழ்ந்த புகழ் பெற்ற எங்கள் ஈழத்துக் கலைஞர்கள்.

கோண்டாவில்(மூளாய்) பாலகிருஷ்ணன் சகோதரர்கள்
அளவெட்டி குமரகுரு
இணுவில் கோவிந்தசாமி
அளவெட்டி பாலகிருஷ்ணன்
சட்டநாதர் கோவிலடி N.முருகானந்தம் - தவில்
காரைதீவு கணேஸ் - நாதஸ்வரம்
சாவகச்சேரி பஞ்சாபிஷேகன் - நாதஸ்வரம்
அளவெட்டி S.S.சிதம்பரநாதன்
அளவெட்டி M.சிவமூர்த்தி - நாதஸ்வரம்
அளவெட்டி R.கேதீஸ்வரன்
யாழ்பாணம் K.நாகதீபன்.
இணுவில் சுந்தரமூர்த்தி புண்ணியமுர்த்தி சகோதரர்கள்

(இன்னும் அறிந்தவர்கள் பெயர்களிருந்தால் அறியத்தாருங்கள்.)

ஹேமா(சுவிஸ்)

Tuesday, November 30, 2010

என்னைப்போல யாராவது இருந்தால் !

என்னை நான் வெறுத்துத் தள்ளி நிற்கும் சமயத்தில் மனம் சோர்ந்து எதிலும் இல்லாமல் விரக்தி தோழமைக் கை கொடுக்க சாப்பாடு நித்திரை தவிர்த்து எதிலும் மனம் ஒட்டாமல் குந்திவிடுவேன்.ஆனால் ஏதோ ஒரு இசை மாத்திரம் என்னைத் தனிமையாக்காமல் சூழ்ந்து நிற்கும்.

ஆழ யோசித்தால் .... நான் ஏன் இப்படி.இன்பமும்,துன்பமும்,இழப்புக்களும் எனக்கு மட்டும்தானா.என்னைவிட இயலாதவர்கள்...இழப்பையே வாழ்வாக வாழும் எத்தனை பேர் உலகில்.

இந்த உலகில் நான் பிறந்துவிட்டேன்.நான்தான் இந்த வாழ்வை வாழ்ந்து முடிக்க வேண்டும்.என்னைப்போல யாரும் இல்லை.என் வாழ்க்கையை யாரும் வாழமுடியாது.விரும்பியோ விரும்பாமலோ பிறந்த வாழ்வை வாழ்ந்தே ஆகவேண்டியிருக்கிறது.

வாழ்வு தளம்புவதும்,உறவுகள் பிரிவதும்,இல்லாமையும்,வறுமையும் இவற்றால் வரும் கஸ்டங்களும் இயல்பானதே.ஏன் பெரும்பணம் படத்தவர்களுக்கும்,உயர் பதவியில் இருப்பவர்கள் மட்டுமென்ன சந்தோஷமாகவா வாழ்வார்கள்.நான் மட்டும்தான் வேதனையோடும் விரக்தியோடும் வாழ்கிறேன் என்பது கொஞ்சம் என் அறிவீனத்தைச் சொல்லாமல் சொல்கிறது.இவையில்லாவிட்டால் வாழ்வின் சுவையும் குறைந்துவிடுமோ என்பதாயும் இருக்கிறது.

எத்தனையோ இழப்புக்கள் வேதனைகள் பிரிவுகளைத் தாங்கியபோதும் சில பிரிவுகள் சில இழப்புக்கள் மனதோடு கலந்துகிடப்பவை.காயங்கள் மாறினாலும் அவை வடுக்களாக அப்பப்போ கைகளுக்கு தட்டுப்பட்ட்டு ஞாபகங்களை கிளறிப் புதைத்து,எரித்து,பின் அணையாத தனலாகத் தகித்துக்கொண்டிருப்பவை.

இப்போதெல்லாம் இன்னும்...இன்னும் வலிகளை வேதனைகளைத் தாங்கக்கூடிய பக்குவத்தையடைய முயல்கிறேன்.என்னால் உணரமுடிகிறது.என் தலை நிறைந்த பாரங்களாய் என் வேதனைகள்தான்.சந்தோஷமான நேரங்களில் உடம்பின் உற்சாகம் கூடிநிற்பதும் கவலையான சமயங்களின் உடம்பின் சக்தியே குறைந்து கூடாய்க்கிடப்பதையும் உணர்கிறேன்.கவலைகள் மறக்கவும் வெறுக்கவும் தொடங்குகிறேன்.தூரவே இருக்கும்படியாகக் கட்டளையிடுகிறேன்.

இன்னும்...இன்னும் வாசிப்பதையும் கேட்பதையும் அதிகமாக்குகிறேன்.
தேவையான தேடுதலில் கவனம் செலுத்துகிறேன்.ஒருவேளை நான் கூடுதலாகப் பேசுகிறேனோ என்கூட நினைக்கிறேன்.அர்த்தமற்ற ஆசைகளுக்குள் அழுந்திக்கிடக்கிறேனோ.எல்லா வேதனைகளுக்கும் காரணம் நானேதானோ.ஒரு வரையறையின்றி பறந்து திரியாமல் எனக்கென்ற சில கட்டுப்பாடுகள், கோடுகள் போட்டு அதற்குள் என் எண்ணங்களை ஆசைகளை அடுக்கி வைத்திருக்கிறேனோ.

விரிந்து பரவிக் கிடக்கும் உலகில் நான் தனித்தில்லை.எனதென்று எதையும் சொந்தம் கொண்டாடுவதில் அர்த்தமேயில்லை.உலகம் தாண்டிப் போனால் பிரபஞ்சம்.அதையும் கடந்து போனால்...சிந்தனைகள் குறைந்ததாலேயே தாமதங்கள் வாழ்வில்.என் எண்ணங்கள் செயலற்றுக் கிடந்ததுக்கு நானேதான் பொறுப்பு.சிரிப்பைத் தொலத்ததற்கும் நானேதான் பொறுப்பு.

அன்பைக்கூட அளவோடு பெற்றும்...கொடுத்தம் இருந்திருக்கவேண்டும்.
இன்று ஜீரணிக்க முடியாமல் அவதிப்படுவது நான்தானே.சாப்பிடும் சாப்பாட்டுக்கு அளவும் கலோரியும் நினைக்கும் நான்...ஏன் உணர்வுகளுக்கு மாத்திரம் அளவை அதிகப்படுத்தி வைத்திருக்கிறேன்.

என்றுமே நான் அடுத்தவர்கள் புகழவேண்டும் என்பதற்காக வாழ்ந்ததில்லை.ஆனால் என் மனதிற்கு பிடித்தமான மாதிரி வாழ ஆசைப்பட்டிருக்கிறேன்.அதேசமயம் என்னால் அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் வாழவும், மனதுக்கு ஒப்பாத,மனச்சாட்சி தவறியும் வாழ நினைத்ததில்லை.

வாழ்வு அற்புதமாய் அழகாய் இருக்கிறது இப்போதெல்லாம்.
எண்ணிக்கையோடு வாழ்வதைவிட எண்ணிக் கை நிறையக் கொடுத்து உதவி வாழ்வதில் எத்தனை சந்தோஷம்.உயிர் இருப்பதாய் இருந்ததற்கும்....உயிர் வாழ்வதற்கும் நிறையவே வித்தியாசம்.

மாற்றமுடியாத நேற்றைய வாழ்வை மறக்கிறேன்.இன்றைய வாழ்வை ரசிக்கிறேன் மதிக்கிறேன்.நாளைய பொழுதை பிரயோசனமாய் திருத்தி திருப்தியாய் வாழ்வேன்.என் வாழ்வை நானே வாழ்ந்துகொள்வேன்.வாழ்வின் வலிகளை வசப்படுத்திக்கொள்வேன்.
இனி எதற்காகவும் யாருக்காகவும் நான் காத்திருக்கபோவதில்லை.

ஹேமா(சுவிஸ்)

Thursday, November 18, 2010

அவன் அவள் அவர்கள்.

த்மன் அலைபேசியோடு அப்படியே சாய்ந்திருந்தான் சுழல்நாற்காலியில்.மகன் ரிஷி கூப்பிடும் சத்தம் கேட்டே நிலைக்கு வந்தவனாய்..."என்னப்பா" என்றான்.

"ஜெனியை வீட்டுப்பாடம் செய்ய உதவி செய்யக் கேட்டேன்.தனக்கு நிறைய வேலை இருப்பதாய்ச் சொல்கிறாள்.நீங்களாவது சொல்லித் தாருங்கள்" என்று ஜேர்மன் மொழியில் கேட்டபடி நின்றிருந்தான் ரிஷி.

பத்மனுக்கு அவ்வளவாக சொல்லிக்கொடுக்கத் தெரியாது.சுவிஸ் வந்து 15 வருடமாகியும் மொழித் திறன் இல்லை.

"ஏன் இன்று அம்மாவிடம் கேட்டுக்கொள்ளவில்லை"... என்றபடி வாங்கிப் பார்த்தான் பத்மன்.

"சரி இரு...அக்காவிடம் சொல்லித் தரச்சொல்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே...

"ஜெனி ப்ளீஸ் மா தம்பிக்குச் சொல்லிக் கொடு.எனக்கு சொல்லிக் கொடுக்கத் தெரியவில்லை"... என்றான் தமிழ் பாதியும் ஜேர்மன் பாதியுமாய்.

அப்பா இறந்து 6 மாதங்களாகிறது.அம்மா தனித்துவிடப்பட்டதாய் தான் உணர்ந்தாலும் தன்பாட்டில் எனக்கும் பிள்ளைகளுக்கும் தனக்கு முடிந்ததைச் சமைத்துத் தந்துகொண்டிருந்தா.பிள்ளைகளும் என்றும் இங்கு தங்குபவர்கள் இல்லை.கிழமையில் செவ்வாய்,புதன் கிழமைகளில் மாத்திரமே.ஜெனி ஓரளவு எங்கள் சாப்பாடான சோறு,புட்டு, உறைப்புக்கறிகள் சாப்பிடுவாள்.ரிஷிக்கு வாழைப்பழரொட்டியும்,பால்புட்டும் பிடிக்கும்.அவனுக்காகவே அம்மா உழுந்து வறுத்து அரைத்து பால்புட்டு,அரிசிமாக்கழி என்று செய்து கொடுப்பா.இல்லாவிட்டால் மக்டோனால்ஸ்,பூஸ்ட் என்று ஏதாவது நான்தான் தெரிந்த சுவிஸ் உணவுவகைகளைச் செய்துகொடுப்பேன்.

இன்றும் அம்மா செய்யும் எங்கள் சமையலின் வாசனை கதவு தாண்டி வெளியில் போய்க்கொண்டிருந்தது.எங்களுக்கு வாசனை.வெளியில் சுவிஸ்காரருக்கு அது நாத்தமாகக் கூட இருக்கலாம்.

அப்பா அம்மா இரு தங்கைகளோடு 5 வருடங்களுக்கு முன் இங்கு அழைத்துக்கொண்டேன்.தம்பியைக் கனடா அனுப்பிவிட்டேன்.ஒரு தங்கையைச் சொந்தத்தில் திருமணம் செய்து கொடுத்தேன்.மறு தங்கை ஊரில் இருக்கும்போதே பிரான்ஸ்ல் இருக்கும் ஒரு பையனை விரும்பியிருந்தாள்.

வந்து ஒரு வருடத்திலேயே மூத்த தங்கையின் திருமணம்.சொந்தம் என்றபடியால் பெரிதாகச் செயவு இல்லை.அதோடு மாமா மாமி மச்சான் எல்லோருமே இங்கு வந்து திருமணம் செய்துகொண்டு கூட்டிப்போனார்கள் தங்கையை.எல்லாச் செலவும் தானே ஏற்றுக்கொண்டான் மச்சான் என் நிலை அறிந்தவனாய்.நான்கு பேரைக் களவாக இலங்கையிலிருந்து கூப்பிடுவது என்பது ஏஜென்சிக்குப் பெரிய தொகை செலவு.அவர்கள் வந்து அடுத்த வருடத்திலேயே பெரிய செலவு என்று சொல்லிக்கொண்டிருந்தாள் கிரட்.

அதே வருடத்தில் அப்பாவுக்கும் சிறிது சிறிதாக நோய் வந்தும் போயும் கொண்டிருந்தது.அதுவும் அடிக்கடி செலவுதான்.என்ன செய்யலாம்.வாழ்வின் அத்தியாவசியச் செலவுகளைக் கிரட்டும் செய்துகொண்டுதான் இருந்தாள்.

அவளின் அன்புக்கும் உதவிக்கும் ஈடு இல்லை.அவளால்தான் நான் இத்தனை உயர்ந்தேன்.சுவிஸ் வந்து 6 மாதங்கள் வேலை இல்லாமல் இருந்தேன்.அந்தச் சமயத்தில் உதவிப்பணம் தருவார்கள்.அது வாங்கப் போகும் வேளையில் அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருத்தியாகவே இந்த மார்கிரட்டைச் சந்தித்தேன்.என்னைப்பற்றி எங்கள் நாட்டின் அவலங்கள் பற்றி என் குடும்பம் பற்றி விசாரிக்கத் தொடங்கியவள் மெல்ல மெல்ல என்னை விரும்புவதாகச் சொன்னாள்.

ஓரளவு ஆங்கிலம் தெரிந்தபடியால் அவளோடு என் நிலைமைகளை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தேன்.என்னைப் பத்து...என்றே அழைத்து என் கை வருடி ஒரு தாயின் அன்போடு எனக்கு ஆறுதலாயிருந்தாள் கிரட்.

எங்கள் பழக்கவழக்கம்,பண்பாடு,கலாசாரம் எல்லாம் பற்றிக் கதை கதையாகச் சொன்னேன்.சமையல் பற்றிச் சொன்னேன்.அடம்பிடித்தாள் சமைத்துக் காட்டச்சொல்லி.சமைத்துச் சாப்பிட்டோம் இருவருமாக.புரிதல் நிறைவாகவே பட்டது எனக்கும்.எங்கள் பெண்கள் போலவே பண்பாடினாள்.ஒத்துக்கொண்டது ஒட்டிக்கொண்டது மனங்கள்.அறிவித்தோம் இருபக்கப் பெற்றவர்களுக்கும்.சட்டப்படி இணைந்துகொண்டோம்.

வாழ்வு வித்தியாசமாய் இனிதாய் அன்புத் துணையோடு நகர்ந்துகொண்டிருந்தது.எங்கள் சாப்பாடு தொடக்கம் இனிமையான பாடல்கள் வரை ரசிக்கப் பழகியிருந்தாள் கிரட்.பத்து...பத்து என்று என்னைப் பற்றிப் படர்ந்திருந்தாள் என் தோழியாக.

மூன்று வருடங்களின் பின் பிறந்தாள் ஜெனி.அதன்பின் ரிஷி.

அவளாகவே சொல்லிப் பணம் அனுப்புவாள் அப்பா அம்மாவுக்கு.ஓரளவு தமிழ் சொற்கள் கதைக்கப் பழகிக்கொண்டாள்.

அத்தை....சுகமா இருக்கீங்களா....உங்க மகன் ரொம்ப குழப்படி.என் பிள்ளைங்க நல்லம்.அவங்களும் சுகம்.

இப்படியாகச் சின்னச் சின்னதாக பேசப் பழகியிருந்தாள்."மலரே மௌனமா...மிகவும் பிடித்த பாடல்.எந்தப் பிடித்த பாடலுக்கும் பொருள் கேட்டுத் தெரிந்துகொள்வாள்.

இப்படியாய் இருந்த அவள்தான் இன்று இரண்டு பட்டுப் பிரிந்து நிற்கிறாள்.என்னைவிட அவளுக்குத்தான் வேதனை அதிகம்.

காரணம் அவர்களின் வாழ்க்கை பாரங்கள் சுமக்காமல் இலேசானது.என் வாழ்க்கை...என் பாதை என்று பெற்றவர்கள் கையில் இவர்களோ இவர்கள் கையில் பெற்றவர்கள் பிறந்தவர்களோ தங்கியிருப்பதில்லை.சிறு சிறு உதவிகள் சந்தோஷங்களோடு மட்டுமே இவர்களின் உறவு.அமைதியை விரும்புபவர்கள்.மன உளைச்சலைத் தவிர்ப்பவர்கள்.

ஆரம்ப காலத்தில் என் குடும்பத்தோடு மாதம் அனுப்பும் பணமும் தொலைபேசியோடு மட்டுமே இருந்த தொடர்பு என் குடும்பம் நாட்டின் சூழ்நிலையால் அவர்களையும் ஒரு அமைதியான வாழ்க்கைக்குக் கொண்டு வர நினைத்தே ...

அதற்கு அவளும் சம்மதித்தாள்.பணமும் உதவினாள்.

ஒருவேளை இப்படியாகும் என்று அவள் எதிர்பார்க்கவில்லைப் போலும்.

அப்பா அம்மா தங்கை ஹொங்ஹொங் போய் அங்கு 7 மாதங்கள் பிறகு எங்கெங்கெல்லாமோ அலைந்து அங்கங்கெல்லாம் தேடுதலும் தொலைபேசிச் செலவும்.ஒரு மாதிரி 11 மாதங்கள் அலைந்து வந்து சேர்ந்தார்கள்.மறுபக்கத்தில் தம்பி பயணித்தான் கனடா.அதன் செலவு.வீட்டிலும் இரு குழந்தைகளோடு இருவரும் வேலைக்குப்போவதும் குடும்பத்தைப் பராமரிப்பதுமான செலவுகள்.

இது என் தலையில் சுமக்கும் பாரமாயிருந்தாலும்...கிரட்டுக்கு இருக்கும் முழுச் சந்தோஷம் நானும் குழந்தைகளும் மட்டுமே.வாரம் ஒருநாள் ஞாயிறு மட்டுமாவது வெளியில் எங்காவது போய்வர வேண்டும்.விடுமுறைக் காலங்களில் இரண்டு வாரமாவது எங்காவது சுற்றுலாப் போகவேண்டும் என்பது நியதியும் ஆசையும்.

எனக்கு இருக்கும் மனநிலையில் என் சொந்தச் சந்தோஷங்களைத் தவிர்க்கத் தொடங்கினேன்.இங்கேதான் பிரச்சனையே தொடங்கியது.

"பத்து....எனக்குப் பிடிக்கவில்லை.நீ கடன் கடன் என்கிறதும்......எந்த நேரமும் உன் குடும்பம் பற்றி மட்டும் யோசிச்சுக் கொண்டிருக்கிறதும்...."

உண்மைதான் கடன் முட்டி வந்து நிற்கிறது.

அப்பா அம்மா வந்து 5 வருடத்திற்குள் நான் ஆலாய்ப் பறக்கத் தொடங்கிவிட்டேன்.என் குடும்பச் சந்தோஷங்களைத் தொலைத்துவிட்டேன்.கிரட் தள்ளியே உணரத் தொடங்கிவிட்டாள்.

அவளும் புரிந்துகொள்கிறாள்.ஆனாலும் முடியவில்லை.ஒரே சலசலப்பு வீட்டில்.

இரண்டாவது தங்கைக்கும் திருமணம் சீக்கிரத்தில் அதுவும் நிறைவான சீதனத்தோடு அப்படி இப்படியென்று செய்துகொடுத்தேன்.

மூத்த தங்கைக்குக் குழந்தை பிறந்திருக்கிறது.நான் மாமாவாம்.கண்டிப்பாய் முறைதலைகள் செய்யவேணுமாம்.கடமைகள் தொடர்ந்தபடி.

இதோடு புதுக்கதை...குழந்தை பிறந்ததிலிருந்து தங்கைக்கு மனநிலை சரியில்லையாம்....மச்சான் ஒருமாதிரிக் கதைக்கிறார்.என்ன ஆகுமோ என்றபடி !

என்னதான் ஒத்திழுத்தாலும் பொறுமையிழந்து பார்த்துக்கொண்டிருக்கிறாள் கிரட்.

அப்பாவின் நோய் வர வர கூடிகொண்டே போனது.வயோதிபத்தின் தன்மையால் அவருக்குக் கொடுக்கும் மருந்துகள் சிகிற்சைகள் பலன் ஏதும் தராமல் குறைவதும் கூடுவதுமாகவே இருக்கிறது.

இப்போ அதுவும் வேலையோடு வேலையாகிவிட்டது எனக்கு.கிரட்டுக்கு குடும்பப் பாரம் கூடியிருந்து.குழந்தைகளைக் கவனிக்கவோ பாடசாலையால் கூட்டி வரவோ ...ஏன் வீட்டு மளிகைச் சாமான்கள் வாங்குவது வரை எல்லாமே கிரட்தான் பார்த்துக்கொண்டாள்.எனக்கு வேலையும் வைத்தியசாலையுமே உறவாகிவிட்டிருந்தது.அம்மாவையும் அடிக்கடி கூட்டிப் போகவும் வேண்டியிருந்தது.

இந்கக் கால்கட்டத்தில்தான் கிரட் ஒருநாள்...

"பத்து....இனி என்னால் உன்னோடு வாழமுடியாது.ஆனால் இப்போதும் உன்னை விரும்புகிறேன்.நீ...இப்போவெல்லாம் என்னை மறந்தே போகிறாய்.இன்னும் வர வர உன் குடும்பத்தின் பாரமும் செலவுகளும் கூடிக்கொண்டே போகிறது.நானும் குறையும் என்றுதான் சமாளித்துக் கொண்டிருந்தேன்.உன் அப்பாவுக்குச் சுகமில்லை.உன் மூத்த மச்சான் வேறு திருமணம் செய்ய்ப்போவதாகச் சொல்கிறான்.அந்தத் தங்கையும் குழந்தையும் இன்னொரு பாரம் உனக்கு.அவர்கள் அங்கு இருந்தாலும் அதன் வேதனை பாரம் எல்லாமே நீதான் சுமக்கப் போகிறாய்.எனக்கு ஒரே நெஞ்செல்லாம் வலிக்குது.நீ யாரையும் அவர்கள் பாட்டுக்கு விடுவதாயில்லை.எல்லாவற்றையும் உனதாக்குகிறாய்.என்னால் இதைப் பார்த்துக்கொண்டிருக்கவோ இதற்குள் கிடந்து உளரவோ முடியவில்லை.மன அழுத்தம் அதிகமாகிறது எனக்கு.இப்படியே போனால் மனம் குழம்பிவிடும்போல இருக்கு.

ஆனால் உன்னை இந்த நிலையில் விட்டுப் போகவும் விருப்பமில்லை.இப்போதும் உன்னை விரும்புகிறேன்.ஆனால் எனக்கானவனாய் மட்டும் நீ முன்னைப்போல இல்லை.என்னாலும் பெரியதொரு குடும்பச் சிக்கலுக்குள் பின்னித் தவிக்க முடியவில்லை.எனவே நான் முடிவு செய்துவிட்டேன்.நான் உன்னை விட்டுப் பிரிந்திருக்கப்போகிறேன்.என்னால் இனி முடியாது.நான் இதை இன்று ஒரே இரவில எடுத்த முடிவல்ல.பல நாட்களாகச் சிந்தித்து என் பெற்றோருடனும் கலந்தே இப்படியொரு முடிவெடுத்திருக்கிறேன்."என்று தன் மனதில உள்ள அத்தனையும் கொட்டி முடித்தாள்.

என்னால் எதுவுமே சொல்ல முடியவில்லை.உண்மைதான்.என் குடும்பச் சிக்கல் இன்னும் கூடிக்கொண்டே போகிறதே தவிர குறைவதாயில்லை.

அவர்கள் வாழ்வில் இப்படியான விஷயங்களைச் சந்தித்தே இருக்க மாட்டார்கள்.பொருளாதாரம் நிறைவாக இல்லாவிட்டாலும் அவர்களுக்குத் தேவையானதை அவர்களது நிலைமைக்கேற்றபடி அரசாங்கம் கவனித்துக்கொள்ளும்.பாசம் இருந்தாலும் எதையும் பெரிதாக அலட்டிக்கொள்ளாத மனநிலை அவர்களுடையது.ஒருவருக்கு ஒருவர் பாரமாக இருக்கமாட்டார்கள்.பாரத்தை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள்.நான் மௌனித்து ஏதோ ஒரு பேச்சுக்குச் சமாதானம் சொல்லிக்கொண்டு வேறு வழியற்று அவளை அணைத்தபடி ஊமையாய் இருந்தேன்.

"எனக்கு இதைவிட வேறு வழி தெரியவில்லை பத்து...அன்புக்குள் கட்டிக்கிடந்தபடியால்தான் இந்தப் பத்து வருடங்களை உன்னோடு என்னால் பகிர்ந்துகொள்ள முடிந்தது.இனியும் முடியாதுப்பா என்றாள்."கண்கள் கலங்குவதை மட்டும் அவளால் தடுக்க முடியவில்லை.அது அன்பின் ஊற்றெடுப்பு.

பிள்ளைகள் அங்கும் இங்குமாக பெற்றவர்களைப் பங்கெடுத்துக்கொண்டார்கள்.ஜெனிக்கு ஓரளவு புரிந்தும் புரியாத கணக்கானது அப்பா அம்மாவின் வாழ்வு.

ரிஷி மட்டும் அடிக்கடி கேட்டுக்கொள்வான்....
"ஏன் அம்மா தனியாக இருக்கிறா.நான் அம்மாவோடு கோபம்..."என்று மட்டும் சொல்லுவான்.ஆனால் அம்மாவோ அம்மா தந்த பொம்மையோ வேணும் தூங்குவதற்கு.

என்றாலும் நேரம் ஒதுக்கி நல்ல சிநேகிதர்களாய்ச் சந்திப்பதும்,பிள்ளைகளோடு உணவகம் போவது,சுற்றுலாப் போவது என்றும் தீர்மானித்திருந்தார்கள்.

இப்போ....அப்பாவும் அதே நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார்.

கிரட் வந்திருந்தாள்.மாமா..என்று உருகி மனம் விட்டு பாசத்தோடு அழுதாள்.அப்பா வாங்கிக் கொடுத்த சிரட்டையிலான ஒரு பொம்மையைத் தன் தலை மாட்டில் வைத்திருப்பதாகச் சொல்லிக் கொள்வாள்.ஆனால்....ஏன் ....!

இனி..அம்மா தங்கை குழந்தைகள் என்று அந்தப் பாரங்களைச் சுமந்தபடியே பத்மனின் வாழ்க்கை சுமைதாங்கியாய் ஒற்றை இடத்தில் நகராமால் அப்படியே.கிரட் என்கிற அன்பு இருக்கிறவரை அவன் அப்படியேதான் இருப்பான்.சாய்ந்துவிடவும் மாட்டான்.சாய்ந்துவிட விடவும் மாட்டாள் அவனது கிரட்.

ஹேமா(சுவிஸ்) படங்கள் உதவி - இணையம்.

Wednesday, November 10, 2010

உலவும் வீடு.

ப்படியும் ஒரு வீடு வாங்கினா என்ன ? வீடு திருத்தப்போய் ரொம்பவே உடம்பும் மனசும் இளைச்சுப்போய் இப்பிடி ஒரு பதிவு !































ஹேமா(சுவிஸ்)

Thursday, September 30, 2010

வெறுத்தலும் வேதனையும்.

நம் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்களுக்கு அது அப்பா அம்மாவாகக்கூட இருக்கலாம்.சங்கடமான கட்டங்கள் வரும்போது நம்மையும் சேர்த்து ஏதேனும் சொல்லிவிடுகிறார்கள்.ஏன் நாம்கூடத்தான் சொல்லிவிடுகிறோம்.நாம் உடனே வேதனைப்படுகிறோம்.அட..சே! எப்படி இருந்தவர் இப்படி மாறிவிட்டார் என்று இந்த ஒரே ஒரு சம்பவத்தை வைத்து முடிவிற்கு வருகிறோம்.

அவர்களும் காலம் முழுதும் அவர்களுக்குக் கீழ்ப்படிவாய் இருந்ததையோ இப்போது தோளுக்கு மேல் வளர்ந்திருப்பதையோ உலக அறிவுகளோடு மனம் பக்குவப்பட்டிருப்பதையோ யோசிப்பதில்லை.

மாறாக... மனப்பாதிப்புகளைப் பற்றி நாம் அக்கறை கொள்வதில்லை.
நினைப்பதேயில்லை.மனங்கள் கொஞ்சம் தணிந்து ஆறிய பிறகாவது ஏன்...என்ன ஆயிற்று உங்களுக்கு? இப்படியெல்லாம் கோபப்படவே மாட்டீர்கள்! இப்படிப்பட்ட வார்த்தைகளையெல்லாம் சொல்லவே மாட்டீர்களே?’என்று கேட்கும் மனநிலை இருப்பதில்லை எமக்கு.எம் கவலையெல்லாம் நாம் அடைந்த பாதிப்பைப் பற்றி மட்டும்தான்.

இதேநேரம் சின்ன வார்த்தையாய் இருந்தாலும் எங்களால் எங்களைப் பெற்று வளர்த்தவர்கள் மனம் பாதிக்கப்பட்டு இருப்பதைப் பற்றியும் கவலையேயில்லை.

இப்படி நிலைமை மோசமாயிருக்க மனம் விட்டுக் கதைக்கவோ முன்பைப்போல நெருங்கிப் பழகவோ மனம் இணங்காமல் தள்ளி இருத்தலே நல்லதென மனம் ஒதுங்குவது சரியாகுமா.இத்தனை கால அன்பிற்கும் இது எப்படி ஒரு முடிவாகும்!

இந்த இடத்தில்தான் கவனமாக இருத்தல் நல்லது.உறவுகள் பிளவாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.என் அனுபவமும் கூட.எதையும் பெரிதுபடுத்தாமல் அவர்கல் வயதில் பெரியவர்கள்.பேசவோ திட்டவோ உரிமை இருப்பதாய் நினைத்துக்கொண்டு அவர்களை சுகநலம் விசாரித்துப்பாருங்கள்.அழுதேவிடுவார்கள்.

இதில் நன்மைகளும் உண்டு.அவர்களே அவர்கள் தங்கள் பிழையை உணர்ந்து தவிப்பார்கள்.தாங்கள் மனம் நோகப் பேசியும் திரும்பவும் தங்களைத் தேடி வருவதும் தங்கள் மேல் அக்கறைப் படுவதும் இன்னும் இன்னும் அன்பைக் கூட்டும்.மனதை இளக வைக்கும்.

இதைவிட நாங்களும் உன் மனம் நோகப் பேசிவிட்டோம் இனி இப்படி ஏதும் வராது என தங்கள் மனம் விட்டுக் கதைத்து இருவரும் பரஸ்பரம் மன்னிப்புக் கேட்டு அன்பை இன்னும் இருமடங்காக்கி நிலைமையை இலேசாக்கிவிடும்.

இப்படியான நல்ல அணுகுமுறைகள் இருக்க நத்தையாய் உள்ளிழுத்துக் கொள்வதும் தொட்டால் சிணுங்கியாய்ச் சுருங்கிக் கொள்வதும் உண்மையான அன்பின் அடையாளங்கள் அல்ல!உங்களுக்கும் இப்படியான அனுபவங்கள் வாழ்வில் நிச்சயம் இருக்கும்.பகிர்ந்துகொள்ளுங்கள்.நிச்சயம் எல்லோருக்குமே பயன்படும் !

Friday, September 17, 2010

வேண்டாம் ஒரு மழைநாள்.

இன்று இங்கு மழை.மெல்லக் குளிர்கிறது. போர்வை தேடி நுழைந்துகொண்டுதான் எழுதுகிறேன்.மனம் வெக்கையாய் போர்வை தள்ள நினைத்து விலக்காமல் வெளியே பார்க்கிறேன்.எரிச்சலாய் வருகிறது.இயற்கை அழுவதாய் மழைக்கால இருட்டு மம்மல் இருட்டு ஒரு விதமான சோகத்தையே தருகிறது எனக்கு.

மழையில் நனைவதும்,சேற்றில் விளையாடுவதும் சந்தோஷம் என்றாலும் அந்தக் கருத்த மேகமும்,இடியும்,மின்னலும்,காற்றில் அலையும் மரங்களும்,மரம் விட்டுப் பறக்கும் இலைகளும் எனக்குச் சோகமாகவே படும் சிலநேரங்களில்.இல்லை இல்லையென்று நீங்கள் சொன்னாலும் உணர வைக்கவும் சொல்லவும் எனக்குக் கடினமாகவே இருக்கிறது.

மழை பற்றி அறிந்திருப்பீர்கள்.நிறையவே அறிந்திருப்பீர்கள் குடை தவிர்த்து வெள்ளம் விளையாடிய நினவோடு சந்தோஷம்தான் என்பது உங்கள் கருத்து.ஒரு மழைக்காலத்தில் வெறும் ஒற்றைக்கோட்டுப் பாதை வழியே நடந்து பாருங்கள்.ஒற்றைச் சிட்டுக்குருவியின் சோகம் காண்பீர்கள்.அப்போது சொல்லுங்கள்.

அடர்ந்த மரத்தின்கீழோ,கூரை வீட்டின் கிடுகு சொட்டும் மஞ்சள் நிற மழைநீர் தெறிக்க அந்தத் தாவாரத்திலோ மழைக்காக ஒதுங்கிப் பாருங்கள்.
இன்னும்...இன்னும் தனித்த அந்த மழையின் இருட்டுக்காக ஒரு மெழுகுதிரியையோ மின்சார விளக்கையோ பொருத்திவிட்டுப் பால் விடாத ஒரு வெறும் தேநீரோடு ஏதோ ஒரு புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள்.அதுவும் சோகமான ஒரு பாடல் அல்லது சோகமான ஒரு நாவலாய் இருந்துவிட்டால் அதைவிடக் கொடுமையான நேரம் இருக்க முடியாது என்பதாய் இருக்கும்.உணரும் சோகம் அதிகமாகவே வலிதரும்.

சோகம் நிறைந்த மழைக்காலங்கள் என் வாழ்வில் தொடர்ந்து வரும் ஒரு உறவுபோல.ஒரு மழைக்காலத்தில்தானாம் நான் பிறந்தேனாம்.ஒருதரம் மழையால் நிரம்பிய கிணற்றுக்குள் விழுந்து மூச்சுத்திணறி விட்ட உயிரை இழுத்து வந்திருக்கிறேன்.ஒரு சந்திப்பும்...ஒரு இறப்பும்...பிரிவுமான தினமும் அதே மழை மேக இருட்டுக்குள்தான்.காடும் மழையும் உறவெனக் கொஞ்சநாள்,வீடும் உறவுமாய் வாழ்ந்தபோதும் கண்கள் மழையாய் பொழிந்த காலங்கள் நிறைய.

வீடு விட்டு உறவுகள் விட்டு மழையென என் மக்கள் பாதையெங்கும் குண்டுகளுக்குள்ளும் குழிகளுக்குள்ளும் நிரம்பிக் கிடக்க,சோவென அடித்த மழையில் என் இனத்தின் இரத்தத்தில் கால் கழுவி ஒருபிடி ஈரமண்ணைத்தானும் கொண்டுவர அனுமதிக்காத சிங்கள இராவணுத்தின் கையை உதறி,அதே மழை நீரில் என் மண்ணைக் கைகழுவி விமானம் ஏறிய நாளும் இதே மழைநாள்தான்.அந்த ஈர உடையைக்கூட மாற்ற மனமற்று மூன்று நாட்களாய் முனகிக் கிடந்து நான் தொலைந்த மழைப்பொழுதுகள் அதிகம்.

என்றாலும் மழை பிடிக்கும்.இங்கே நான் சுவீகரித்துக்கொண்ட சோகம் தவிர மழையும் தூரலும் அதன் சாரலும் களங்கமில்லாத தண்ணீரும் அழகுதான்.மிக மிக அழகு.பச்சைப் பசேல் பூமியும்,ஓடும் வெள்ளமும்,ஒடுங்கி விரைவாய் அடங்கும் பறவைகளும்,குடை மனிதர்களும்,நனைந்த பூனைகளும்,நனையாப் புல் நுனிகளும் அழகு அழகு கொள்ளை அழகு.

எனவே மழை அழகு.கொள்ளை அழகு.அதற்குள் அடைத்து வைக்கப்பட்ட சோகம்தான் சொன்னேன்.என்னை நினைத்தபடி இனி வரும் மழையை அவதானியுங்கள்.சிலிர்த்து சிலிர்த்து மெலிதாய் அழுவதாய் இருக்கும் ஒரு உணர்வோடு தெரியும்.

ஹேமா(சுவிஸ்)

Friday, September 10, 2010

கனவும் நாங்களும்.

கனவு காணாத மனிதனே இருக்க முடியாது. அது ஒரு தன்னியல்பான நிகழ்வு. மிக அவசியமான நிகழ்வும் கூட.சொல்லப் போனால்,கனவுகள் பல பிரச்னைகளுக்கான தீர்வு, சங்கடங்களை நீக்கும் ஒரு திறவுகோல்.ஆனால் நம்மில் பலர் கனவுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பது இல்லை.சிலரோ கனவுகளுக்கான அர்த்தங்களைத் தாங்களாகவே கற்பித்துக்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்தக் கனவு என்பதுதான் என்ன? அது எப்படி உருவாகிறது? அதன் பொருளை எப்படி உணர்வது?அது தேவைதானா என்பது குறித்ததே இக்கட்டுரை.

நம் மனமானது இரண்டு பிரிவுகளை உடையது. ஒன்று நனவு மனம் என்று அழைக்கப்படும் வெளிமனம்(Conscious Mind).இன்னொன்று நனவிலி மனம் என்று அழைக்கப்படும் ஆழ்மனம்(Sub-Conscious mind or Un-conscious Mind).நாம் உறங்கும் பொழுது நனவு மனம் ஓய்வெடுக்கிறது.ஆழ்மனம் விழித்துக் கொள்கிறது.நனவு மனத்தின் நடவடிக்கைகள் பொதுவாக சொற்களாக,வாக்கியங்களாக வெளிப்படுத்தப் படுகிறது.அதையே சிந்தனை அல்லது எண்ணங்கள் என்கிறோம்.ஆழ்மனத்தின் இத்தகைய நடவடிக்கைகள் குறியீடுகளாகவே வெளிப்படுத்தப் படுகின்றன.இவையே கனவுகள் எனப்படுகின்றன.நனவிலி மனத்தில் தோன்றும் இத்தகைய கனவுகளை நனவு மனத்தின்மூலம் ஆராய நினைப்பது கொஞ்சம் கடினம்.ஏனெனில் இரண்டும் வெவ்வேறு வகையானவை. இது தமிழ் தெரியாத ஒருவர் தமிழ்ச் செய்யுளை வேறொருமொழியில் மொழிபெயர்க்க முயல்வது போன்றது.

நனவிலி மனமானது ஒரு குறிப்பிட்ட சீரான அமைப்பை (Pattern) எதிர்பார்க்கிறது. ஒரு பொருளை தொடர்புடைய மற்றொரு பொருள் மூலம் உணர்த்த முற்படுகிறது. இதைப் புரிந்துகொள்வதானால் நேரடியாக அர்த்தம் எடுத்துக்கொள்ளக் கூடாது.முடியவும் முடியாது.எடுத்துக்காட்டாக நெருப்பு ஒருவரது கோபத்தையும், சிறை போன்ற இடத்தில் மாட்டிக்கொள்வது,மீளமுடியாத ஏதோ ஒரு சிக்கலில் நம் மனம் மாட்டிக்கொண்டு தவிப்பதையும் உணர்த்தலாம்.

ஏதோ ஒரு மனக்குழப்பத்துடன் படுக்கைக்குச் செல்கிறீர்கள்.பல சமயம் நீங்கள் விழித்தெழுகையில் அக்குழப்பம் தீர்ந்துபோய் விட்டது போல் உணரக்கூடும்.ஆழ்மனம் உங்கள் உறக்கத்தின் பொழுது கனவுகள் மூலம் உங்களுக்கு வழிகாட்டி விட்டது.சொல்லப் போனால் ஆழ்மனம் மிகுந்த சக்தியை உடையது.இது குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன.நீங்கள் பார்த்தவை,படித்தவை,கேட்டவை,உங்கள் மேல்மனத்தில் நினைத்தவை இவை அனைத்தும் ஆழ்மனத்தில் சேமிக்கப் படுகின்றன.உங்கள் நனவு மனம் சோர்ந்து உறங்குகையில் ஆழ்மனம் இந்தச் செய்திகளைத் தொகுத்துப் பார்த்து நமது சிக்கலுக்கான விடையைக் கண்டறிய உதவுகிறது.

முதலிலேயே சொன்னபடி ஆழ்மனம் இவற்றைப் பல குறியீடுகள் வாயிலாக வெளிப்படுத்துகிறது.ஆழ்மனத்தின் இந்நிகழ்வினையே நாம் கனவு என்கிறோம்.இது குறித்து சுவையான கதை ஒன்றுண்டு.இன்றைய தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவரான விஞ்ஞானி "சிங்கர் மெரிட்" தம் தையல் இயந்திரத்தில் நூலை ஊசியில் எப்படிக் கோர்த்தால் சரியாக இருக்கும்,இயந்திரம் தடையின்றி இயங்க இயலும் என்பது குறித்து மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டவாறே உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டாராம்.தூக்கத்தில் அவரை செவ்விந்தியர்கள் சூழ்ந்துகொண்டு நுனியில் துளையுள்ள ஈட்டி கொண்டு குத்த வருவதைப் போல் அவருக்குக் கனவு வந்ததாம்.அவருடைய குழப்பத்திற்கு விடை கிடைத்துவிட்டது.இன்று நாம் பயன்படுத்தும் தையல் இயந்திரங்களில் ஊசியின் முனையில் உள்ள துளையில் நூல் கோர்க்கப் படுவது நாம் அறிந்ததே அல்லவா !

நனவிலி மனமே கனவின் தாய்வீடு ஆகும்.இங்குதான் நமது அடிப்படையான எண்ணங்கள் வலுவடைகின்றன.இங்குதான் நமது உணர்ச்சிகள்,கருத்துகள்,அறிவு அனைத்தும் உருப்பெறுகின்றன.மேல் மனத்தில் தோன்றும் எண்ணம் எதுவாக இருப்பினும் அது முதலில் நனவிலி மனத்தின் வாயிலாக கனவு மூலம் அறிவுறுத்தப் பட்டதாகவே இருக்கும்.ஆனால் நாம் ஒவ்வொன்றையும் பிரித்தறிய இயலாததால் அனைத்தையும் மேல்மனத்தின் சிந்தனைகள்,செயல்பாடுகள் என்றே கருதுகிறோம்.

சிலர் தங்களுக்குக் கனவுகளே வருவதில்லை என்று கூறுவர்.இது உண்மையில்லை.அனைவரும் கனவு காண்பதுண்டு.சிலர் அதை விழித்தபின்னும் நினைவு வைத்திருப்பர்.சிலருக்கு விழிப்பு வருகையில் கனவு கண்டதே மறந்துவிடும்.இதற்கு போதைப்பொருட்கள் உட்கொள்தல்,மது அருந்துதல்,அளவுக்கு அதிக வேலைப்பளு,மன உளைச்சல் இவை காரணமாக இருக்கக் கூடும்.சிலருக்கோ, பிறப்பிலேயே ஏற்படும் ஜீன் கோளாறு காரணமாக தம் கனவுகள் எதுவும் நினைவுக்கு வருவதில்லை.அவ்வளவுதானே தவிர கனவே வராமல் இருக்கும் சாத்தியமே கிடையாது.ஏனெனில் இது மூளையின் ஒரு செயல்பாடு.

தூக்கத்தில் நான்கு நிலைகள் உண்டு.ஒவ்வொரு நிலையும் சுழற்சி முறையில் வரும். இந்த ஒவ்வொரு நிலையும் ஒன்று முதல் ஒன்றரை நேரம் இருக்கும்.அதில் REM (Rapid Eye Movement) என்ற நிலையில் கனவுகள் தோன்றுகின்றன.தூக்கத்தின் பொழுது ஒரு சராசரி மனிதனுக்கு மூன்று முதல் ஐந்து கனவுகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.முழுமையான எட்டு மணி நேரத்தூக்கம் ஒருவருக்கு இருக்குமானால் அதில் சராசரியாக இரண்டு மணி நேரம் கனவுகளில் செலவிடப்படுகிறது. ஆனால் எல்லாக் கனவுகளும் விழித்த பின் நினைவுக்கு வரவேண்டும் என்று அவசியமில்லை.

கனவுகள் ஏன் தோன்றுகின்றன என்பதற்குத் திட்டவட்டமான விடை எதுவும் இதுவரை இல்லை.ஆனால் கனவுகள் மூளை புத்துணர்வு அடைய அவசியமான ஒரு நிகழ்வு என அறிஞர்கள் கருதுகின்றனர். நாம் கணிணியில் Defragmentation என்று ஒரு நிரலைப் பயன்படுத்துகிறோமல்லவா? இது சிதறிக்கிடக்கும் கோப்புகளை நமது Hard Disk Drive இல் ஒழுங்கு படுத்தி வைக்க உதவும் நிரல்.இதனால் நமது தேடும் நேரம் குறைகிறது.அதே போல் வேண்டாத கோப்புகளையும்,நிரல்களையும் நீக்கும் சில மென்பொருட்களும் உள்ளன.இச்செயலினையே நமது மூளை தூக்கத்தின் பொழுது மேற்கொள்கிறது.நனவிலி மனத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பல்வேறு தகவல்களை ஒழுங்குபடுத்துவும்,தேவையற்றவற்றை நீக்கவும் உதவுகிறது.வெளியில் சொல்ல இயலாமல் நாம் மறைத்து மற்றும் புதைத்து வைத்திருக்கும் கோபம்,துயரம் ஆகியவற்றினை மூளை கனவுகள் மூலமாக விடுவிக்கிறது அல்லது வெளியிடுகிறது. இதனால் மனம் லேசாகின்றது.எவ்வளவு பெரிய துயரமானாலும், அதிர்ச்சியானாலும், நாம் சில நாட்களில் பழைய நிலைக்குத் திரும்பிவிட உதவும் செயல்பாடு இதுவே.

நம் மனத்தில் தீராத குழப்பங்கள் விடை தெரியாத வினாக்கள் நிரம்பியிருப்பின் ஒரே கனவானது திரும்பத்திரும்ப வரக்கூடும்.உங்கள் கனவின் பொருளை அறிந்து கொள்ள வேண்டுமானால் உங்கள் கனவில் வந்த நிகழ்வை அலசாமல் உங்கள் எண்ணங்கள்,நீங்கள் பார்த்த ஏதேனும் நிகழ்வுகள்,நீங்கள் யாருடனாவது போட்ட சண்டை முதலானவற்றை அலசிப்பாருங்கள்.உங்கள் கனவுகளுக்கான பொருள் உங்களுக்குக் கண்டிப்பாக விளங்கிவிடும்.

என்றாலும்....நல்லது நடக்கவும் நல்லவராய் வாழவும் கனவுகள் காண்போம் !

----------------------------------------------------------------
நட்புடன்...முரளி.

வெல்வதற்கே தோல்வி!எழுவதற்கே வீழ்ச்சி!
நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...!

Thursday, August 05, 2010

அம்மிணி இழுத்த தொடர் சந்தியில்.

ம்ம்ம்...தொடர் எழுத அவ்வளவு விருப்பமில்லை.ஏனென்றால் அதுவும் ஒரு பதிவு.அதில் ஏதாவது ஒரு விஷயம் இருக்கவேணும்.இந்தப் பதிவில் ஏதும் இருக்கா ?! ....நீங்களே கண்டு பிடிங்க !

என்னை இந்த வம்பில மாட்டிவிட்ட சின்ன அம்மிணிக்கு நன்றி நன்றி மிக்க நன்றி தோழி.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர் ?

ஹேமா(சுவிஸ்)

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

உண்மையான பெயர் ஹேமவதி.சுவிஸ் என் பெயரோடு ஒட்டிக்கொள்ளக் காரணம்...முன்பு வானொலியில் பங்குபற்றிக்கொண்டிருந்த நேரத்தில் இன்னொரு ஹேமாவும் இருந்தார். அதனால் சுவிஸிலிருந்து ஹேமா என்று தொடங்கி....ஹேமா(சுவிஸ்) ஆகிவிட்டது.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

ஓ...அந்தக் கதையா.எனக்கு என்னமோ சின்னப்பிள்ளைல இருந்து ஊடகத் துறை மேல நிறைய விருப்பம்.நாள் முழுக்க ரேடியோ அலறினபடியே இருக்கும்.அதில வாற அறிவிப்பாளர் என்ன திறமையோட இருக்கிறார் என்று அறிஞ்சு வியப்பேன்.கடிகாரம் பார்க்காமலே நிகழ்ச்சி கேட்டு நேரத்தைச் சொல்லிவிடுவேன்.அப்படி ஒரு பைத்தியம்.செய்தி வாசிப்பவர்கள் தொடக்கம் இரவில நித்திரைக்குத் தாலாட்டுப் படிக்கிறவர்கள் வரைக்கும் எல்லோருமே என் விசிறிகள்தான்.

அதுபோல கவிதைகள் எழுதி எழுதி அவர்களைப்போல வாசிச்சுப் பார்ப்பேன்.ஆனா அனுப்பினது கிடையாது.வீட்டில யாரும் ஊக்கப்படுத்தேல்ல."என்னடி கண்ட நிண்ட இடமெல்லாம் கிறுக்கி வைக்கிறாய்" என்று மட்டும்தான் கேட்டார்கள்.

அப்பிடி இப்பிடி நாள் ஓடி நானும் சுவிஸ் வந்தேன்.அப்ப இலண்டன்ல இருந்து 2-3 வானொலிகள் ஒலிபரப்புச் சேவையில் இருந்தன.அவைகளுக்கு மெல்ல மெல்ல எழுதத் தொடங்கினேன்.என் கவிதைகள் ஒலிபரப்பாகின.அதன்பிறகும் வானொலிகளுக்கு இடையிலான பிரிவுகள்,அரசியல் பிரிவுகள் என ஒரு வானொலியை இன்னொரு வானொலி திட்டுவதும்,கேட்பவர்களும் சார்ந்து பிரிந்து நிற்பதும் என்னை அவர்களோடு ஒட்டி நிற்கவிடாமல் தனித்தே விடப்பட்டேன்.புலம் பெயர்ந்து ஒட்டுக் குடித்தனம் நடத்தும் வேளையிலும் ஒற்றுமையில்லை.விருப்பமில்லை.கேட்பதோடு மட்டும் நிறுத்திக்கொண்டேன் என்னை.

அதன் பின்னரும் கிறுக்கல்கள் தொடர்ந்தபடிதான் படிக்கும் புத்தக மூலையிலும்,பாடும் கழிவறைக் கடதாசியிலும் கூட.வானொலியில் என் திறமையைக் கண்ட இலங்கைச் சூரியன் வானொலி அறிவிப்பாளர்,என் ஊர்க்காரர்,என் உறவுக்காரர் தீபசுதன் தான் இப்படி ஒரு வழி இருக்கு என்று சொல்லி அவரும் என் தமிழகத்து நண்பருமான அரவிந் ம் சேர்ந்து ஒரு புளொக்கர் செய்து தருகிறோம் என்று இதைச் செய்து தந்தார்கள்.

அவர்கள் செய்ததும் போதும்.நான் அவர்களைப் படுத்தின பாடும் போதும்.அது பெரும் கதை.கருப்புத்தான் வேணும்.அதுவும் மூன்றாகப் பிரிஞ்சிருக்க வேணும்.மேல என் மன அவதிகள் ஓடவேணும்.இப்பிடி இப்பிடி....!

தொடக்கிவிட்டதோட தீபசுதன் சரி.பதிவுகளின் அபிப்பிராயம் மட்டும் எப்போதாவது சொல்வார்.அரவிந் தான் இப்பவும் அவசர உதவியில் இருக்கிறார்.என்றாலும் அவருக்கும் பயம்.எதுக்கோ இந்தக் கொக்கு ஒற்றைக்காலில நிக்கபோகுது என்று போன் பண்ணினாலும் சிலசமயம் போன் "நீங்கள் போன் செய்த நபர் இப்போ தூக்கத்தில்" என்று சொல்லச் சொல்லிடுவார்.

புளொக்கர் செய்ய முதல் அரவிந் ஏதோ ஒரு கவிதைத் தளத்தில் ஒரு கவிதையைப் பதிவிட்டார் படத்தோடு.அதுவே எனக்கு ஆர்வமாய் இருந்தது.இப்போது சந்தோஷப் படுவார்கள் இருவரும்...சும்மா விளையாட்டாகத் தொடங்கித் தந்தோம்.நீங்கள் அதை ஆர்வத்தோடு அழகாகக் கொண்டு போகிறீர்கள் என்று என்னை ஊக்கப்படுத்துவார்கள்.
அவசர உதவியாளர் இருவரும் இலண்டனில்தான் இருக்கிறார்கள்.
உண்மையில் இருவருக்கும் மனம் நிறைந்த நன்றி.

அதன் பின் என்னை இன்றுவரை தொடரும் இணைய நண்பர்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.அவர்கள் தரும் பின்னூட்டம் தரும் ஊக்கம்தான் அடுத்த கவிதைக்கான அஸ்திவாரம்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

என் குழந்தைநிலா பிரபல்யம் அடைந்திருக்கிறாளா.அப்படி நீங்கள் சொன்னால் சந்தோஷம்தான்.எனக்கு வந்து என்னை ஊக்கப்படுத்தும் நண்பர்களை நானும் ஊக்கப்படுத்தத் தவறாமல் பின்னூட்டம் தருவேன்.வேறு லங்காஸ்ரீ இணையத்தில் என் தளத்தை இணைத்திருக்கிறார்கள்.மற்றும் தமிழ்மணம்,தமிழிஸ் லும் இணைத்திருக்கிறேன்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

பாதிக்குப் பாதி ....ஓரளவு பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.யாரிடமும் சொல்லி ஆறமுடியாத மன அவஸ்தை எழுத்துக்குள் அடங்கிப் போகிறது.யாரிடமோ சொல்லிவிட்டதுபோல ஒரு பெரிய பாரம் இறங்கினதுபோல பெருமூச்சு ஒன்று வெளிவரும்.அது சந்தோஷமோ, கவலையோ அல்லது கோபமாய்த் திட்டவேணுமோ,செல்லமாய்க் கொஞ்சவேணுமோ எல்லாமே எழுத்துக்களில் அடக்கிக் கொள்வேன்.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ஐயோ....முழுக்க முழுக்கப் பொழுது போக்குத்தான்.எனக்கு லாபம் ன்னா என் மன அழுத்தம் குறைகிறது.அட....இதில சம்பாதிக்கவும் முடியுமா அப்பிடியே இருந்தாலும் வேணாம். நிறையவே சம்பாதிச்சு வச்சிருக்கிறேன்.போதும்!

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இரண்டு.என்ன கேள்வி இது.இரண்டுமே தமிழ்தான்.ஒன்று "வானம் வெளித்த பின்னும்". அடுத்து ஒரு வருடத்தின் பின்னர் கவிதை தவிர்த்து வேறு விஷயங்கள் எழுதவென்று தொடங்கித் தந்தார்கள் "உப்புமடச்சந்தி".கவிதைகள் எப்போதும் கவலையாகவே இருக்கு என்று...நகைச்சுவையாகக் கதைச்சுச் சிரிக்கலாம் என்றுதான் தொடங்கினேன்.இந்த இடத்தில் கடையம் ஆனந்த் க்குத்தான் நன்றி.கவிதைப் பக்கத்தில் வந்து அடிக்கடி சொல்லிக் கொள்வார் .....ஏன் இப்படிச் சோகமான கவிதைகள் என்று !அவரின் அந்தப் பின்னூட்டங்களே சந்தோஷமான பதிவுகளுக்காக இன்னொரு பக்கம் தேவை என ஊக்கம் தந்தது.

என்ன எழுதப்போகிறேன் என்று தெரியாமலே எதையாவது அங்கும் பதிவிட்டபடி இருக்கிறேன்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாமை கட்டாயம் வரவேணும் இந்த மன ஆமைக்குள்ளயும்.அப்பத்தான் எழுதவேணும் என்கிற உற்சாகம் வரும்.

நல்லா எழுதுற எல்லார் மேலயும் பொறாமை வரும். பாரா அண்ணா மேல,நேசன் மேல பொறாமை.பிறகு ...ஒருத்தர் பேரும் சொல்லமாட்டேன்.ஆனா நல்லாச் சிறுகதை... கட்டுரை...சமூக விழிப்புச் சங்கதிகள் எழுதுற,பிழை பிழையா எழுதுற,கும்மி அடிக்கிற,நகைச்சுவையா எழுதுற,படம் வரையிற,அரசியல் அனுபவம்ன்னு எழுதுற எல்லார் மேலயும் அன்போட பொறாமை இருக்கு !

திறமையா எழுதுறவங்க பதிவுக்குப் போய் அவங்க என் பக்கமே வராம இருந்தாலும் அவங்க திறமையைப் பாராட்டிவிட்டு வருவேன்.அவங்க என்னை ஒரு லூசுன்னு நினைச்சாலும் பரவாயில்லை.உண்மையில் பலராலும் புகழப்படும் சிலர் என் பக்கம் வருவதேயில்லை. காரணம் தெரியவில்லை.

ஏதாவது என் மீது தப்பிருக்கோ அல்லது தப்பான விஷயங்களை எழுதுகிறேனோ என்று கூட நான் நினைத்துக்கொள்வேன்.அவங்க வரணும் என்னைப் பாராட்டி வாழ்த்தணும்ன்னு எப்பவும் எதிர்பார்க்கிறேன்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி அந்த பாராட்டைப் பற்றி..

உண்மையில் இந்தக் கேள்விக்குக் குழப்பம்தான் பதில்.குழந்தைநிலாதான் என்னோட முதல் தளம்.அதில டெம்லேட் பிடிக்கேல்ல பிடிகேல்ல என்று அடிக்கடி அழித்துவிடுவேன்.4-5 மாதங்களின் பின் தான் இந்த டெம்லேட் சரி என்று தலை ஆட்டினேன்.அதனால் எந்தக் கவிதை முதல் பதிவிட்டேன்....யார் பின்னூட்டம் என்று சொல்லத் தெரியவில்லை.முதல் கவிதை பதிவில் 25.01.2008 என்று இருக்கிறது.

அதோடு ஆரம்ப காலங்களின் ஒரு பின்னூட்டம் காணத் தவமாய்த் தவமிருக்க வேணும். யாருக்கும் என் பக்கம் தெரியவில்லை.எனக்கும் யாரையும் தெரியவில்லை.மற்றவர் தளங்கள் போகவோ பின்னூட்டம் போடவோ தெரியவில்லை.10-15 கவிதைகளின் பின் இரவீ தான் ஒரு கவிதைக்கு அதுவும் 3-4 மாதங்களின் பின் பின்னூட்டம் போட்டிருந்தார்.

comments: Ravee (இரவீ )
//நான் உன் அன்பான
ராட்சதக் காதலிதான்.//

நீங்க ஆரம்பத்தில் இருந்தே அப்படி தானா... சரி சரி.
18 December, 2008 19:47

இந்த நேரங்களில் தமிழ் மணம்,தமிழிஸ்,லங்காஸ்ரீ எதுவும் இணையாத காலங்கள்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

எல்லோரது திறமைகளையும் ஒருவருக்கொருவர் பாரபட்சம் இல்லாமல் ஊக்கம் தாருங்கள் என்று இணையங்களில் இருக்கும் திறமை மிக்க...அனுபவம் நிறைந்த பெரியவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

நிலா அம்மாவின் 31 + 1 கேள்விகள் எனும் என் பழைய தொடரிலும் கொஞ்சம் என்னைப்பற்றிச் சொல்லியிருக்கு.

நான் யாருக்கும் கரைச்சல் குடுக்க மாட்டேன் இதைத் தொடரச் சொல்லி.இந்தத் தொடர் அநேகமாக எல்லோருமே எழுதிட்டாங்க.

நான் குடுத்தா ரவி கிட்டத்தான் குடுக்கணும்.எனக்குத் திட்டு வாங்கப் பிடிக்கேல்ல இப்பல்லாம் !

ஐயோ....இலக்கிய மேதையாம்(அவரே சொல்லிக்கிறார்) மேவீ பண்ற தொல்லை தாங்கமுடியேல்ல.சரி...அவர் இந்தத் தொடரைத் தொடரப்போகிறாராம்.சரி மேவீ எழுதுங்கோ!

ஹேமா(சுவிஸ்)

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP