Tuesday, October 25, 2011

பிரச்சனையோ பிரச்சனை.

கனநாள் ஒண்டும் எழுதேல்ல.என்னத்தை எழுதி என்ன கிழிக்கவெண்டு கிடக்கு.ஆனா எனக்கொரு பிரச்சனை.வெளில சொல்லமுடியாமத்தான் உங்களிட்ட சொல்லலாமெண்டு நினைக்கிறன்.அப்பா அம்மாட்ட சொன்னா உதைப்பினம்.அண்ணாட்ட சொன்னா கிட்டத்தான் இருக்கிறான்.கத்தியோட வருவான் குரங்கன்.என்ர சிநேகிதி ஒருத்தி 3 பிள்ளைகள் புருஷனோட கும்மியடிச்சுக்கொண்டிருக்கிறாள்.அவளுக்கு இதெல்லாம் கணக்கெடுக்க நேரமில்லை.எனக்குத்தான் குடும்பம் குட்டி இல்லையெண்டா அவளையும் ஏன் கஸ்டப்படுத்த.லீவு முடிஞ்சு வந்து கொஞ்சநாள் வெறுமையும் தனிமையும் அலைக்கழிச்சு முடிய இது தலையில மாட்டிக்கொண்டு இரவாப் பகலா எலி குடைஞ்சதுபோல புசுபுசுவெண்டு ஓடிக்கொண்டிருக்கு.உங்களில ஆருக்காவது உண்மையா இந்தப்பிரச்சனைக்கு ஒருவழி கட்டாயம் தெரியும்.

எப்பவுமே கொஞ்சம் கஸ்டமான விஷயங்களையும் முடியாத ஈழக்கதையையும் சோகக்கவிதையையும் எழுதிக்கிழிக்கிறேனாம்.சொல்லிப்போட்டினம் எல்லாரும் சொல்லிப்போட்டினம்.அதுதான் கவிதைகள் இருந்தும்.....ஆசைகள் ஆதங்கம் இருந்தும்......!

இப்ப என்ர வீட்டில ஒரு ஆள் இருக்கிறா.ஒல்லியா கொஞ்சம் கருப்பா.ஆக்களின்ர உறுப்புகளை அறுத்து எத்தினை எலும்பு எங்கெங்க நரம்புகள் இருக்கெண்டு படிக்கிற படிப்பாம்.ஆனா அவவில ஒருகிலோ சதையை கொஞ்சம் தோல் போர்த்திவிட்டமாதிரித்தான் இருப்பா.பாவம்.சரி தற்செயலா இதைப் பார்த்தா முறைப்பாள்.யாரும் சொல்லாதேங்கோ.
அவவோடயே என்ர நேரம் போகுது.அவவுக்கு என்ன சாப்பாடு செய்து குடுக்கிறது.நாளைக்கு என்ன சாப்பிடுவா.எனக்கு எத்தினை மணிக்கு வேலை.கடைக்குப் போய் அவவுக்கு என்ன பிடிக்குமெண்டு சுத்துறதே நேரமாகுது.வீட்டுக்கு வந்தா இண்டைக்கு எதை வெட்டினது எதை ஒட்டினதெண்டு சொல்லிக் கதைச்சு பிறகு சமைச்சுச் சாப்பிட்டுப் படுக்கவே நேரமாகுது.இதுக்குள்ள இந்தப் பிரச்சனை வேற.

இவவுக்குப் பாவம் சொக்லேட் எண்டா நல்ல விருப்பம்.இரண்டு நாள் சொக்லேட் சாப்பிட்டதைப் பாத்திட்ட இவவின்ர விரிவுரையாளர்200-300 பேருக்கு முன்னால மைக்ல சொல்லிப்போட்டாராம்.கோலா குடிச்சதையும் சேர்த்துச் சொல்லிப்போட்டாராம்.அவவுக்கு வெக்கமாப்போச்சு.இப்ப வீட்ல மட்டும்தான் சொக்லேட் கோலா.2-3 மாசத்தில மாணவர் விடுதியில போய் இருந்திடுவா.போக்குவரத்துக்கே நேரம் வீணாப்போகுதாம்.பிறகென்ன நான் எப்பவும்போல கொம்பியூட்டரோட குந்தியிருப்பன்.இதாலதான் இப்ப கொஞ்சம் குறைச்சிருக்கிறன்.உங்கள் எல்லாருக்கும் சந்தோஷமும் நிம்மதியுமாக்கும்.இருங்கோ..... இருங்கோ.நானும் நேரத்துக்கும் நித்திரை கொள்றனெல்லோ !

வேலை இடத்திலயும் கட்டிட வேலை செய்யினம்.30,000 மில்லியோன் செலவழிச்சு 200 வருஷக் கட்டிடங்களைத் திருத்தியெடுக்கினம்.அதால நேற்று வேலை இடத்தில் எல்லா வேலையாட்களும் எங்கள் சாப்பாட்டுச் சாலையில் இருந்து சாப்பிட்டம்.எப்பவும் நானும் அங்கதான் சாப்பிடுவன்.நேற்று வந்த எங்கட ஹொட்டல் பெரியவர் தனக்கு வயிறு கொஞ்சம் சரில்லையெண்டு சாப்பிடாமப் போய்ட்டார்.கள்ளர்.அவரின்ர பார்வையில நடத்துற அடுப்படிச் சாப்பாட்டைத்தானே நானும் 9 வருஷமாச் சாப்பிடுறன்.இருக்கட்டும் இனி சாப்பாட்டுக் காசு கழிக்கட்டுமெண்டுதான் பாத்துக்கொண்டிருக்கிறன்.

பிறகு எப்பவும் ஞாயிற்றுக்கிழமைல கோபிநாத் நடத்துற விஜய் தொலைக்காட்சி நீயா நானா பாத்திட்டுத்தான் படுப்பன்.இந்தக்கிழமை மாமியாய் மருமகள்களைக் கூப்பிட்டு வச்சு நல்ல விஷயம்தான் கதைச்சார் கோபி.ஆனாலும் வீட்லபோய் எந்த மாமி மருமகள்கள் சண்டை போட்டிச்சினமோ.பாவம் அந்த நடுவில நிக்கிற நாயகன்.

கடாபியையும் கலைச்சுப்பிடிச்சு ஒருமாதிரிச் சுட்டுப்போட்டாங்கள்.கடாபியப் பற்றிக் கதைச்சால் எங்கட மாத்தையா சிவப்புச் சட்டைக்காரர் வந்தாலும் வந்திடுவார் ஞாயம் கேக்க.மனச்சாட்சியைக் கேட்டுப் பார்க்க அவருக்கெங்க நேரம்.யாழ்ப்பாணத்தையும் மட்டக்களப்பையும் மொட்டையடிக்கவே அவருக்கும் அவரிண்ட குடும்பத்துக்கும் நேரம் போகுது.

உலகத்தில நாட்டில எவ்ளோ பிரச்சனையிருக்க என்ர பிரச்சனை...சரி நீங்களே சொல்லுங்கோ என்ர பிரச்சனை தீர்க்க என்ன வழி.தீபாவளியோடயாவது என்ர பிரச்சனையை முடிக்கவேணும்.அதான் உங்களிட்ட கேட்டு வைக்கிறன்.சரி எல்லாரும் ஆடு வெட்டி சந்தோஷமா தீபாவளி கொண்டாடுங்கோ.என்ர பிரச்சனையையும் பாத்துக் கீத்து.... !!!!!



வணக்கம் சேர்...என்னை அடையாளம் தெரியுதோ உங்களுக்கு?

ஏன்டாப்பா இப்படிக் கேட்கிறாய்...என்னட்ட படிச்ச பெடியன்தானே நீ...?

ஓம் சேர்.அ..அது... வந்து... ஒ...ஒரு விஷயம் சொல்லவேணும் !

என்ன சொல்லு...இது...வார்த்தை திக்கித் திக்கி வருது...உடம்பு நடுங்குது... நீ என்னவோ கோக்கு மாக்குச் செய்திருக்கிறாய்போல !

எப்படிச் சொல்லுறீங்க ?

நான் சொல்லேல்ல... பஞ்ச தந்திரம் சொல்லுது.

என்ன சொல்லுது ?

ஒரு குற்றவாளி எப்படி இருப்பான் என்பதற்கு சில அடையாளம் உண்டு என்று சொல்லுது !

அப்படியா.....!?

ஓம்... குற்றம் செய்து விட்டுப் பயந்து போன ஒருத்தனுக்கு முகம் வெளிறியிருக்குமாம்.பேச்சுக் குளறுமாம்.மிரண்ட பார்வை...ஒடுங்கிய கர்வம்... தள்ளாடித் தள்ளாடி நடப்பான்.முகம் வெளுத்துப் போகும்.நெற்றியில் வியர்த்துக் கொட்டும்.வார்த்தை திக்கித் திக்கி வரும்.உடல் நடுங்கிக் கொண்டிருக்கும்.பார்வை கீழ் நோக்கிச் செல்லும்.இந்த வெளிப்படையான அடையாளங்களைக் கொண்டு குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்கிறது பஞ்ச தந்திரம்!

இந்த அறிகுறி எல்லாம் இப்ப உன்னட்ட இருக்கு.என்ன சொல்லு.எதுக்காக இந்த நேரத்தில என்னைத் தேடி வந்தாய்?

அழைப்பிதழ் ஒண்டு கொடுக்க...!

என்ன அழைப்பிதழ் ?

கல்யாண அழைப்பிதழ் சார் !

யாருக்குக் கல்யாணம் ?

எனக்குத்தான் !

அடப்பாவி... அதுக்காகவா இப்படிப் பயப்பிட்டு நடுங்குறாய்.சந்தோசப் படவேண்டிய விஷயம்தானே இது ?!

கொண்டா இப்படி... யார் பிள்ளை?

உங்கட மகள் தான் சேர்.....!

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP