Thursday, December 10, 2009

உறவு தேடும் உள்ளம் 2

ஹேமா கதையை அழகுபடுத்தேல்ல மெருகாக்கேல்ல எண்டு குறை சொல்றீங்கள்.நானே அப்படித்தான் இருக்கிறன்.என்னைப்பற்றி இனி நானே என் மனதை அப்படியே பகிரப்போறன் உங்களோட.
இது என்னை நானே விமர்சிக்கும் ஒரு சந்தர்ப்பம்.வலி இருந்தாலும் சொல்லியே ஆகவேணும்.இங்க உங்களிட்ட நான் அனுதாபம் தேடேல்ல.சொல்றதால ஒரு ஆறுதல் தேடிக்கொள்றன்.அவ்வளவும்தான்.

நான் ஊனம் என்று சொல்லுமளவிற்கு கையோ காலோ முடம் எண்டில்லை.நான் என் அப்பாவின் உருவம் என்று என் அம்மா அடிக்கடி சொல்லுவா.அப்படியே அவரை உரித்து வைத்துபோல பெண் உருவமாய் உலாவுறன் எண்டும் சொல்லுவா.வயதிற்கேற்ற தோற்றமில்லாமல் உயரம் குறைவாய் கட்டையாய் மிகவும் கட்டையாய் பிறந்திட்டன்.சரி அதுதான் பரவாயில்லை எண்டால் கையும் காலும் உருவத்திற்கேற்றபடி இல்லாமல் மிகவும் குள்ளமாய் சின்னதாய் உருவத்திற்குச் சமபந்தமில்லாமல் இருக்கு.ஏதோ ஒரு விகார நிலை என்னில் எனக்கே தெரியுது.மற்றும்படி உள்ளத்தில் உணர்வில் ஒற்றுமையில் ஒன்றும் குறைவில்லாமயே இருக்கிறன் நான்.நான் ஒரு வயோதிபர்களைப் பராமரிக்கும் வைத்தியசாலையில் தாதியாகவும் வேலை செய்யிறன்.மற்றவையளைளைப் போலவே என்னாலும் இயங்க முடியுது.இதுதவிர உங்களுக்கும் எனக்குமிடைல வேறு எந்த வித்தியாசமும் இல்லை.ஓரளவு ஆங்கில அறிவோட எனக்கு எட்டின வரைக்கும் படிச்சும் இருக்கிறன்.

இந்தக் குறைபாடு எனக்குள்ள எப்பவும் பிரச்சனை.தாழ்வு மனப்பான்மை எண்டே சொல்லுவீங்கள்.அப்பிடித்தான்.இது மனசுக்குள்ள வாட்டுறதாலதான் சிவா என்னை விரும்புறதாச் சொன்னதும் நான் தள்ளி நிண்டன்.ஆனாலும் உள்மனசில கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல யாருமே உறவென்று இல்லாத இந்த நாட்டில் பாதுகாப்பென்ற துடுப்பாக சிவாவைக் கண்டன்.அடிக்க அடிக்க அம்மியும் நகருமாம் என்பதைப்போல சிவா நாளுக்கு நாள் என்னைத் தன்ர பக்கமாக்கிக்கொண்டார்.

அதுக்குப் பிறகு ஒருத்தருக்கொருத்தர் மனச்சாட்சிப்படி உறுதி எடுத்துக்கொண்டு ஆண்டவனின் சாட்சியோடும் வாழத்தொடங்கினம்.நானோ சிவாவோ சட்டப்படி திருமண எழுத்து எழுதவேணும் என்று நினைக்கவேயில்லை.நான் எப்போவாவது நினைக்கும் அளவிற்கு சிவா சந்தேகத்திடமாக நடக்கவுமில்லை.8 வருட காலம் ஜேர்மனியிலேயே வாழ்ந்தும் வந்தம். அங்கயிருந்து சிவாவின் சில தெரிந்தவர்களின் சில சுடுசொற்களாலும் சில சூழ்நிலைகளாலும் சுவிஸ் வரவேண்டியதாப்போச்சு.

சிவா என்னை விட்டுப் போனவர்தான்.போயேவிட்டார்.காத்துக் கிடக்கிறது மட்டுமே மீதமாய் அருகில கிடக்கு.இப்போ எனக்கு 40ன் வருசமாச்சு இப்ப.இளமை என்னை விட்டு மெல்ல மெல்ல நழுவிக்கொண்டிருக்கு.இப்பவெல்லாம் தனிமையின் கொடுமை என்னை வதைக்குது பயம்காட்டுது.கட்டிலுக்குக் கீழயும் குளியலறைத் தொட்டியிலயும் படுத்துக் கொண்டிருக்கு.

அயர்ந்து களைச்சு வீடு திரும்பேக்க அன்புக்கும் அரவணைப்புக்குமாய் யாராவது இருப்பினமோ எண்டு மனம் தேடுது.என்னால முடிஞ்ச மட்டும் நிறையவே அழுகிறன்.சிவாவை இப்போதும் தேடுறன்.வாற தொலைபேசி அழைப்புக்குள்ளயும் தபால் பெட்டிக்குள்ள கிடக்கிற கடிதங்களுக்குள்ளயும் ஒரு எழுத்தில ,ஒரு சொல்லில ,ஒரு குரலில சிவா என்கிற அந்த வரத்தை இன்னும் தேடுறன்.அறிஞ்சு தெரிஞ்சவைக்குப் பதில் சொல்லத் தெரியேல்ல.வெக்கமாவும் கிடக்கு.

அதோட இன்னொண்டு.இப்பவெல்லாம் குழந்தை என்கிற ஒரு பூ என் மனக் கண்ணில் வாசம் வீசிப் போகுது.அங்கயும் என்னையே நொந்துகொள்றன்.இரண்டுமுறை சந்தர்ப்பம் கிடைத்தும் இப்போ வேணாம் எண்டு நானும் சம்மதித்தே தள்ளிப்போட்டன்.இப்ப அதின்ர ஏக்கம் கனக்கவா(அதிகமா)என்னை உலைக்குது.

சிவாவோடு வாழ்ந்த காலத்திலயே இந்த ஏக்கம் எனக்குள்ள இருந்தே வந்தது.முறையாகக் கல்யாணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் எண்டு சொல்லித்தான் அவரே எனக்கொரு குழந்தையாய் இருந்து வந்தார் என் சிவா.நானும் ஒத்துக்கொண்டன்.அதோடு உள்ளுக்குள்ள ஒரு பயமும் எனக்கிருந்தது.அப்பாபோல நான் இருக்கிறன்.சிலவேளை என்னைப்போலவே என் குழந்தையும் இருந்திட்டால்...!

அவர் இருக்கேக்க இல்லாத தாக்கம் அதிகமா இப்ப எனக்குள்ள.அவரைத்தவிர ஆருமேயில்லாத உலகத்துள்ள வாழ்ந்து பழக்கப்பட்டுட்டன்.வெளிவரப் பயமாவும் மிரட்டலாவும் தெரியுது.அன்புக்காக ஏங்குற என் பலகீனத்தை அவர் நல்லாப் பாவிச்சிருக்கிறார்.நான் அவரை கடவுளின் இடத்தில வச்சுக் கும்பிட்டு என்னையே மறந்திருந்தன்.கடவுளும் அவருமாச் சேர்ந்து என்னை ஏமாத்திப்போட்டினம்.இப்ப காலம் கடந்திட்டுது.அடுத்தவையளைக் காணேக்க உறவுகளின்ர ஏக்கமமும் தப்பிப் போன காலங்களையும் நினைச்சு ஏங்குறன்.

என்னோட ஒண்டா ஜேர்மன்ல இருந்த சிநேகிதி ஒருத்திதான் என்னை அடிக்கடி ஆறுதல் படுத்தும் ஜீவனாய் இருக்கிறாள்.அவள் என்னை மெதுவாய் என் எதிர்காலம் பற்றிச் சொல்லி சொல்லி எப்போதும் என்னை மாத்த முயற்சிக்கிறாள்.

"மதி சிவாவுக்காக நீ காத்திருந்தது போதும்.நாலு வருசமாப் போச்சு ஒண்டுமே தெரியேல்ல.உனக்கு வயசும் போய்க்கொண்டிருக்கு.நீ சிவாவுக்காகக் காத்திருக்கலாம்.காலம் யாருக்காகவும் காத்திருக்காது.உனக்கெண்டு யாருமே பக்கதில இல்ல.உன்ர நிலைமையை நினைச்சு நீயும் யாரோடயும் பழகுறதுமில்ல.நீ இப்பிடியே இருக்கிறது எனக்கு மனசுக்கு கஸ்டமாயிருக்கு.நீ இவ்வளவு காலமும் சொன்ன சமாதானம் போதும்.இனியும் எதுவும் கதைக்காதை"என்று என் பதிலுக்குக்கூடக் காத்திருக்காமல் திருமணம் ஒன்று செய்துகொள்ளச் சொல்லி எனக்கு புத்தி சொல்லியபடியே அலுவலிலயும் இறங்கிட்டாள்.

எனக்கோ சிவாவையோ அவரோட வாழ்ந்த நினைவுகளையோ மறக்க முடியாட்டிலும் என் தனிமைக்கு ஒரு ஆறுதல் தேவைப்படுது.மனம் விட்டுக் கதைக்க ஒரு உள்ளம் தேடுது. தனிமை பயமுறுத்தி வெறுக்கவைக்குது வாழ்வை.என்னை நானே மறக்கிற நிலையில் சிலசமயம் தற்கொலை செய்துகொள்ளட்டோ எண்டுகூட எனக்குள்ளேயே நினைச்சு சமாதானமும் செய்துகொள்றன்.

அவள் இப்போ என்னட்ட ஒண்டும் கேக்கிறதில்லை.என்ர அம்மாவாகிறாள். இப்பவெல்லாம் தானாகவே ஆரிட்டையோ கதைக்கிறாள்.வேணாம் என்கிறாள்.சரி என்கிறாள்.நான் விருப்பு வெறுப்பற்ற ஜடமாய் பார்த்துக்கொண்டிருக்கிறன்.வலு மும்மரமா ஓடித் திரியிறாள்.எனக்குக் கல்யாணம் செய்து தரப்போறாளாம்.சிரிப்பா வேற வருது.

இப்பிடியிருக்க ஆரோ ஒரு தரகர் மூலமாக விபரங்கள் கொடுத்த விசாரிப்பில் மாப்பிள்ளை எண்டு ஒருத்தர் ஒரு நாள் வந்தார்.ஏற்கனவே கல்யாணமாகி மனைவியிடம் விவாகரத்து வாங்கிட்டாராம்.இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பனாம்.பிள்ளைகள் ஊரில் தாயோடயாம். என்னைவிட 6 வயது மூத்தவர்.என் போட்டோ மற்றும் விபரங்கள சொல்லியும் பார்த்தும்தான் வந்திருக்கிறார்.அவரை நான் பாக்கிறன்.

பார்த்தால் வயசுக்கேத்த பருமன் உருவம்.தாரில உருட்டிவிட்ட ஒரு கலர்.முடிகொட்டி வழுக்கை.இருக்கிற முடியும் நரைச்சு வெளுத்திருக்கு.கண்ணில கண்ணாடி.எனக்கு என்னவோ போலக் கிடக்கு.தேவையா இது எனக்கு.ஏன் இவள் என்னைப் படுத்துறாள் எண்டு மனசுக்குள்ள என் தோழியைத்தான் திட்டிக்கொண்டிருக்கிறன்.

எனக்கு ஓ...வென்று குழறி அழவேணும்போல கிடக்கு.யாரோ வீட்டிற்கு விருந்துக்கு வந்திருக்கினம் எண்டு என்னை நினைச்சுக்கொண்டு சரளமாக இருக்கட்டாம்.அப்படியே இருக்கப் பாக்கிறன்.எல்லாருமாப் பேசிச் சிரிச்சு சாப்பிட்டு பிறகு என் தோழி அவர் கணவரோடு தனிமையாக் கதைச்சிட்டும் போனார்.அடுத்த கிழமையே என்னைப் பிடிக்கேல்லயாம் எண்டு பதிலும் வந்தது.அவர் சொல்ல முதலேயே நான் சொல்லிட்டன் என் தோழியிடம்.அவள்தான் என்னைச் சமாதானப்படுத்தி வைச்சிருந்தாள்.நல்லவர் வல்லவர் எண்டு.நான் உயரமாக இல்லையாம்.மயிலின்ர தோகைபோல கூந்தல் வடிவாய் இல்லையாம்.நடையும் வடிவில்லையாம்.ம்ம்ம்....!

இதுக்குப்பிறகு நான் ஆரையும் வீட்டுக்கு வந்து என்னைப் பாக்க விடுறேல்ல.தோழியோ விடுறதாயில்லை.இன்னும் இரண்டு பேரோட கதைச்சதில முன்னைப்போலவே திரும்பவும் செய்திகள் கிடைச்சது.வாழ்வின் வரவும் செலவுமாய் அவர்களை நான்
நினைச்சுக்கொண்டேன்.அவரவர்களும் தங்கட தங்கட குறைகளைக் கொஞ்சம்கூட நினைக்க மாட்டாம என்ர மனதின்ர அழகை உணர்வின்ர அழகைப் பார்க்கமுடியாம போனது அவையள் அறியாமையின்ர இருளில் அழுந்தப்பட்டவையெண்டு நினைச்சுக்கொண்டன்.இதன் பிறகு இனிமேல் இந்த விளையாட்டு வேண்டவே வேண்டாம் என்று மறுத்திட்டன்.

இவ்வளவு தூரம் ஆனபிறகும் என்ர புருஷனாய் எனக்குள்ள வரிச்சுக்கொண்ட என்ர சிவாவை நினைக்காத நாளில்ல.எனக்குள்ளயே ஏராளமான கேள்விகள் எழும்.நானும் ஒரு பெண்தானே. நான் மட்டும் ஏன் இவையளைவிட அன்னியவளாக்கப்படுறன்.என் உருவம் இயற்கையானதுதானே.நானே விரும்பி வடிவமைத்துக் கொள்ளேல்லையே.ஆண்டவன் தந்ததுதானே.ஏன் என்னைப் புறக்கணிக்கினம்.எனக்குள்ள ஆசைகள் உணர்வுகள் குறைவாக இல்லையே.எல்லோரையும் போலத்தானே முழுசாத்தானே இருக்கு.என்னை உணர ஒரு மனசன் இல்லையோ.இதே வரிசையிலதான் சிவாவும்.சிலசமயம் மனம் கலங்கி கண்ணின் வழி இரத்தமாய் வழியும்.

இப்பவெல்லாம் பதிலே சொல்லாத கடவுளோடு போராடிக்கொண்டிருக்கிறன்.அப்பா இல்லாமல் அம்மாவும் நானும் மாமாவோடுதான் இருந்தம்.படிக்கவென்று ஆச்சிரமப் பள்ளியொன்றில் மாமா சேர்த்துப் படிப்பிச்சிருந்தார்.எல்லோரையும் தவறவிட்டேன் ஊர்க்கலவரத்தில.ஒட்டின படிப்பு இருந்தபடியா நிறைய வாசிக்கப் பழகிக்கொண்டன்.என்ர தனிமையைப் புத்தகங்களோடு இப்ப பகிர்ந்துகொண்டிருக்க்கிறன்.

இப்பிடி இருக்கேக்குள்ளதான் என் சிநேகிதி கேட்டாள்."ஏன் மதி உனக்கென்ன துணைக்கு அன்புக்கு ஆறுதலுக்கு பேச்சுத்துணைக்கு ஒரு துணைதானே தேவை.ஒரு ஆள் இருக்கு.இந்தத் துணையை நீ வேண்டாம் எண்டோ அல்லது அந்தத்துணை உன்னை வேண்டாம் எண்டோ சொல்லவே மாட்டாய்.இஞ்ச பார்.மாட்டேன் சொல்லாமல் நான் சொல்றதைக் கேள்"என்று ஒரு விளம்பரம் காட்டினாள்.அது செஞ்சோலைக் குழந்தைகளுடையது.கனக்க யோசிக்காமல் சரி எண்டும் சொல்லிட்டன்.

இப்ப மூன்று வயது சிவாவுக்கு அம்மாவாக வாழ்ந்துகொண்டிருக்கிறன்.
இன்னும் நிறையக் குழந்தைகளுக்கு உதவிக்கொண்டும் இருக்கிறன்.வாழ நினைச்சால் வாழ வழியா இல்லை யெண்டு இந்தப் செஞ்சோலைச் செல்வங்கள் எனக்குப் பாடம் சொல்லித் தந்து கொண்டிருக்கினம்.நானும் சிவாவோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறன்.

[இது அனுபவம் என்று சொல்ல ஏனோ பலர் பயப்படுகிறீர்கள்.இது என் நெருக்கத்தில் நான் பார்த்த அனுபவ உண்மை.இன்றும் மதி வாழ்ந்து கொண்டுதானிருக்கிறாள்.]

ஹேமா(சுவிஸ்)

42 comments:

Rajeswari said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை..என் இரு சொட்டு கண்ணீர் துளிகள் இவ்வார்த்தைகளுக்குள் உறைந்து கிடக்கின்றன....

தொடர்ந்து எழுதுங்கள் மன்னிக்கவும் பகிருங்கள்...

ரோஸ்விக் said...

வரிகள் முழுவதும் வலி கொடுக்கும்படியான எழுத்துக்கள். மனதிற்கு பாரமாக உள்ளது.

வேறு என்ன சொல்வது... :-(

ராஜவம்சம் said...

வழ்க்கையை அதன் போக்கில் வாழ பழகிக்கொண்டால் நிச்சயம் சந்தோஸமான வாழ்க்கைதான்

நம் இஸ்டத்திற்கு வலைக்க நினைத்தால் தான் பல சமயம் தோல்வியில்முடியும்

இனிமேழ் உங்கள் வாழ்க்கை சந்தோஸமானதாகவும் அர்த்தமுல்லதாகவும் மாற உலகநாயகன் (இறைவனிடம்)பிரார்திதவனாக


உங்கள் நன்பன் ராஜவம்சம்

லெமூரியன்... said...

படித்து முடிக்கும் போது ஏதோ ஒரு விதமான வெறுமையான உணர்வு குடி கொள்கிறது மனத்தில்.....

ப்ரியமுடன் வசந்த் said...

ஹேமா தங்கள் தோழியின் கதை மனத்தை கனக்கச்செய்கிறது,,,

சிவா நல்லவரா? கெட்டவரா?

இருப்பினும் குழந்தை சிவா மதிக்கு ஆறுதல்தானே..சந்தோசமாய் இருப்பாள்..

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஹேமா மேடம் , நல்ல நெகிழ வைக்கும் கதை !

அருமையான பதிவு

சத்ரியன் said...

ஹேமா,

வந்திருந்தேன்

ஆரூரன் விசுவநாதன் said...

மனதை நெகிழ வைக்கும் பதிவு....

அந்த தோழிக்கு என் வாழ்த்தைத் தெரிவியுங்கள்.

அன்புடன்
ஆரூரன்

நசரேயன் said...

இது எழுத்து நடைக்கு,
எம்புட்டு பெரிய கதையாசியர் ஒளிஞ்சிகிட்டு இருக்காரு, இன்னும் நிறைய படைப்புகளை எதிர்பார்கிறேன்

Nathanjagk said...

தைரியமான டைரி பகிர்வு போல முதல் பாகம் இருந்தது.
இரண்டாவது பாகம் அதைவிட சூடாக உங்களை பேசுவது போல இருந்தது.. கடைசியில் "மதி" என்று பெயர் சொருகி மதிமயக்கமாய் முடித்து விட்டிருக்கிறீர்கள்.
சிறுகதைக்கான நேர்த்தி மட்டும் தவறியிருந்தது முதல் பாகம்.
இரண்டாம் பாகம் நேர்மையை தவற விட்டிருக்கிறது போலத் தோன்றுகிறது.
//[இது அனுபவம் என்று சொல்ல ஏனோ பலர் பயப்படுகிறீர்கள்.இது என் நெருக்கத்தில் நான் பார்த்த அனுபவ உண்மை.இன்றும் மதி வாழ்ந்து கொண்டுதானிருக்கிறாள்.]
//
என்ற வரிகள் தேவையா என்று சிந்தியுங்கள்!
மதி என்று உங்களுக்கு ஒரு தோழி இருந்தால்.. அவருக்கு என் வாழ்த்துக்கள்..! இல்லாவிட்டால் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!!
கதை எழுதிய விதத்தை விட அந்த வாழ்க்கைக்கு கனமாக படுகிறது.

Nathanjagk said...

முதல் பத்தியில் உங்களை முன்னிறுத்தி கதை சொல்ல ஆரம்பிக்கிறீர்கள்.. கடைசியில் மதியென்று முடித்திருக்கிறீர்கள். (இந்த இடத்தில் யாரேனும் {சகப்} பின்னூட்டாளர்கள் விளக்கவுரை அளிக்கலாம்{!!!})
அவ்வ்வ்..! என்னோட பறத்தலின் நிழலே பரவாயில்ல போல!! ஹிஹி!!

Chitra said...

இப்ப மூன்று வயது சிவாவுக்கு அம்மாவாக வாழ்ந்துகொண்டிருக்கிறன்.
இன்னும் நிறையக் குழந்தைகளுக்கு உதவிக்கொண்டும் இருக்கிறன்.வாழ நினைச்சால் வாழ வழியா இல்லை யெண்டு இந்தப் செஞ்சோலைச் செல்வங்கள் எனக்குப் பாடம் சொல்லித் தந்து கொண்டிருக்கினம்.நானும் சிவாவோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறன்......................வாழ வழி இல்லை என்று இருக்கும் பலருக்கு இப்படியும் வாழ வழி இருக்கு என்று வலியுடன் சொல்லி இருக்குறீர்கள். அருமை!

நட்புடன் ஜமால் said...

ராஜஸ்வரி சொன்னது போலவே ...

thiyaa said...

என்ன ஹேமா சோகமாக எழுதுறிங்க

க.பாலாசி said...

மற்றுமொரு நெகிழ்வான பகிர்வு உங்களிடமிருந்து....

வாழ்க்கைதான் எவ்வளவு வலிகளை அடக்கிக்கொண்டிருக்கிறது....

aazhimazhai said...

கண்களில் நீர் கோர்ப்பதை தடுக்க முடியவில்லை !!! ரொம்ப நல்ல இருக்கு !!!!

தமிழ் அமுதன் said...

படிக்கும் போதே நெஞ்சில் ஒரு சுமை ஏறிக்கொள்கிறது..!
'''காலம் ஒரு பொன் செய்யும் மருந்து''

வேறென்ன சொல்வது...!

அண்ணாமலையான் said...

நான் இது போன்ற சோக நிகழ்வுகளை (அது உண்மையாக இருந்தாலும் ) படிக்க விரும்புவதிலை. இருந்தும் உங்கள் எழுத்து அழைத்து சென்றது. வாழ்த்துக்கள்.

Kala said...

\\\\\ஹேமா கதையை அழகுபடுத்தேல்ல மெருகாக்கேல்ல எண்டு குறை சொல்றீங்கள்.நானே அப்படித்தான் இருக்கிறன்’என்னைப்பற்றி”இனி நானே
---------------------------------------
என் மனதை அப்படியே பகிரப்போறன் உங்களோட.
---------------------------------------------------------------------------------
||இது என்னை நானே விமர்சிக்கும் ||
----------------------------------
“”ஒரு சந்தர்ப்பம்.””வலி இருந்தாலும் சொல்லியே
ஆகவேணும்.இங்க உங்களிட்ட நான் அனுதாபம்
தேடேல்ல.சொல்றதால ஒரு ஆறுதல் தேடிக்கொள்றன்.அவ்வளவும்தான்.\\\\

ஹேமா முதல் பாகம் கொஞ்சம் சிறுகதை மாதிரி
நகர்ந்தது,இண்டாம் பாகம்......???????
சுயசரிதை மாதிரி வந்து...”மதி”வருகிறார்!!!
பின் தோழியாகிறார் ஏன்? கதை தடுமாறுகிறது?
எவ்வளவோ கேட்க வேண்டும் போல் உள்ளது!
ஆனால்.........வேண்டாம்.

இது நிஐம் என்றால்!! தாழ்வுமனப்பான்மை,
பயம்,இருக்கவே கூடாது.
அழகின்மையோ,ஊனமோ ,குள்ளமோ ஒரு குறையல்ல!
எண்ணமும்,செயலும்,வெளிப்பாடுகளும்,நடத்தையும்...
ஊனமாகாமல்,குள்ளமாகாமல் பார்த்துக் கொள்ளல்
வேண்டும்.இவைகள் முடங்கினால்!அத்தனையும்
ஏன் !வாழ்க்கையே சூன்யம் ஆகிவிடும்.

ஒருபாட்டு ஞாபகம் வருகிறது...அரசமரம் சுற்றியதும் பெண்தான்!!
இன்று அண்டவெளி சுற்றுவதும் பெண்தான்!!!

கோழைத்தனம்,தாழ்வுமனப்பான்மை,தனிமை,
விரக்தி,ஏக்கம்.,என்னால் முடியுமா?இவைகளை
நன்றாக முடிந்து தூக்கிக் குப்பையில் பேட்டுவிட்டு......

{எதையும் தாங்கும்படி மனதைப் பக்குவப்படுத்தி}
ஒரு மனிதரை எளிதில் நம்பிவிடாமல்.....
மனச்சாட்சிக்கு மட்டும்பயந்து, துணிச்சலுடன்,நேர்மையுடன்,
குறிக்கோளுடன்,சமாளிக்கும் திறனும்,இதனுடன் இனிமையாய்
பேச....அழகாய் சிரிக்க...கற்றுக் கொள்ள வேண்டும் அப்புறம்..........
நமக்கு நாமே ராணி.
அதனால் நான் அனுதாபமோ!வாழ்த்தோ! சொல்லப் போவதில்லை

தைரியமாய் வெற்றிநடை போட.....வாழ்த்துக்கள்.

எதற்கும் வயது அழகு தடையல்ல!!!

ஹேமா said...

இரண்டாவது பகுதியை எதிர்பார்த்தவங்களை இன்னும் காணோம்.நைனா,வாலு,நவாஸ்,
மாதேவி,லெமூரியன்,நிலாமதி,
ராகவன் வாங்க வாங்க.

கடை போட்டாச்சு,இன்னும் எல்லாரும் திட்ட வரல.வந்து திட்டிட்டுப் போங்க.

ஹேமா said...

நன்றி ராஜேஸ்வரி.நீங்களும் நேரம் கிடைக்கும்போது வந்து போங்களேன்.இப்பொழுதுதான் கத்துக்குட்டியாய் எழுதிப் பழகிட்டு இருக்கேன்.உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் தரும் வார்த்தைகளால் பலம் பெறுவேன்.

:::::::::::::::::::::::::::::::::

வாங்க ரோஸ்விக்.ஏன் குழந்தைநிலாக்கு வரமாட்டீங்க.வரணும்.

:::::::::::::::::::::::::::::::::

வாங்க ராஜவம்சம்.
உங்க கருத்துக்கும் நன்றி.

::::::::::::::::::::::::::::::

லெமூரியன் வாழ்வின் வலிகளைத் தாங்குவதும் வாழ்வின் ஒரு வெற்றியேதான்.

:::::::::::::::::::::::::::::::::

நன்றி வசந்த்,மனதிற்குள் வேதனைகள் ஒளித்திருந்தாலும் மதி சிவாவின் சிரிப்பில் சந்தோஷமாகவே இருக்கிறாள்.

:::::::::::::::::::::::::::::::::

அன்பான கருத்துகு நன்றி ஸ்டார்ஜன்.

:::::::::::::::::::::::::::::::

சத்ரியா என்னாச்சு.ஒண்ணும் சொல்லாமப் போனா என்ன நினைக்கிறது நான் !

:::::::::::::::::::::::::::::::::

ஆரூரன்,நன்றியோடு உங்கள் அன்பைக் கவனித்தபடியே இருக்கிறாள்.

ஹேமா said...

நசர்,சந்தோஷமாயிருக்கு.இப்பதான் என்னை உற்சாகப்படுத்துற மாதிரி ஒரு பின்னூட்டம் தந்திருக்கீங்க.
இன்னும் நிறையக் கதைகள் பேசிக்கொள்ளலாம்.

::::::::::::::::::::::::::::::::

வேந்தன் என்ன நடந்தது.
சொல்லிப்போட்டுப் போனாத்தானே விளங்கும் எனக்கு.

:::::::::::::::::::::::::::::::

ஜமால் சுகம்தானே.இப்பிடியாச்சும் அடிக்கடி வந்து தலைகாட்டிப் போங்க.சந்தோஷமாயிருக்கு.

::::::::::::::::::::::::::::::::

தியா வாங்கோ வாங்கோ.என்ன செய்யலாம்.சிலநேரங்களில் உண்மைகள் வலிக்கத்தானே செய்யுது.

ஹேமா said...

ஜெகா என்னவோ நிறையக் குத்தம் குறை கண்டுபிடிச்சுச் சொல்றீங்க.
என்னமோஒண்ணுமே புரில மாதிரி இருக்கு எனக்கு.ஆனாலும் என்னைத் திருத்திக்க உங்க பின்னூட்டம் உதவியா இருக்கும்.சந்தோஷமும் நன்றியும்கூட.

இந்த அனுபவத்தை சொல்லணும்போல இருந்திச்சு.
அதோட எங்க பேச்சுவழக்கையும் பதிவாக்கவே மதி சொல்வதாக இரண்டாம்பதிவை எம் யாழ் பேச்சுவழக்கில் எழுத முயற்சித்தேன்.

கற்பனைக் கதை அல்ல என்பதைச் சொல்லவே இறுதியில் அனுபவமான உண்மை என்று சொல்லி முடித்தேன்.

எதுக்கும் கலா வருவாங்க.வாங்கிக் கட்டிக்கோங்க.

:::::::::::::::::::::::::::::::::

நன்றி சித்ரா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.வாழ்வுக்குப் பல வழிகள் அமைந்திருந்தும் சில சமயங்களில் சோர்வுற்றே போகிறோம்.தேடினால் நாங்களே எங்களுக்குப் பலமாக இருப்போம்.

:::::::::::::::::::::::::::::::::

பாலாஜி நன்றி என்றும் எனக்கு ஊக்கம் தரும் உங்கள் வார்த்தைக்கும் அன்புக்கும்.

:::::::::::::::::::::::::::::::::

நன்றி ஆழிமழை.உங்களைக் குன்றனின் பதிவில் பார்த்த ஞாபகம்.
மழையாய்ப் பொழிந்தவர் நீங்கள்தானே.

::::::::::::::::::::::::::::::::

ஜீவன் உங்களைக் கண்டால் என் பதிவு சரி என்கிற ஒரு திருப்தி எனக்குள்.அப்படியிருந்தால் மட்டுமே உங்கள் பின்னூட்டம் கிடைக்கும் எனக்கு.நன்றி.

பூங்குன்றன்.வே said...

நான் எதிர்பார்த்ததைவிட மிக சோகமான கதை,உங்கள் தோழியின் கதை.இருந்தாலும் நம்பிக்கை கொண்டு,வாழ்க்கையை இது போல செஞ்சோலை பிஞ்சுகள் மீது
செலுத்துகையில் எந்த வலியும் பறந்துவிடும் தான்.கதை படித்த என் மனதின் பாரம் குறைய இன்னும் சில நாட்களாகும் ஹேமா.

சத்ரியன் said...

//சத்ரியா என்னாச்சு.ஒண்ணும் சொல்லாமப் போனா என்ன நினைக்கிறது நான் !//


ஹேமா,
படிச்சிட்டு, நான் என்னென்ன‌ நினைச்சேனோ..அது எல்லாத்தையும் நினைச்சிக்குங்க‌..

ஸ்ரீராம். said...

சோகமான அனுபவங்கள் சுமந்து கொண்டிருக்கிறீர்கள். கதையோ அனுபவமோ மனம் சோகமான சூழலை விட்டு வெளிவர முயற்சி செய்யுங்கள். இந்த மனநிலை வாழ்க்கையின் வெற்றிகளைப் பறித்து விடும். கதை என்று எடுத்துக் கொண்டால் நடை பிரமாதம்.

தமிழ் அமுதன் said...

///ஜீவன் உங்களைக் கண்டால் என் பதிவு சரி என்கிற ஒரு திருப்தி எனக்குள்.அப்படியிருந்தால் மட்டுமே உங்கள் பின்னூட்டம் கிடைக்கும் எனக்கு.நன்றி.///

உங்கள் கவிதைகள்,பதிவுகள் எல்லாமே சிறப்பானவை..! உயர்வானவை...!
சில நேரங்களில் கருத்து சொல்லாமல் இருந்திருக்கலாம்..! அது எனது சோம்பல் தன்மையால் மட்டுமே இருந்திருக்கும்..!

மற்றபடி..! உங்கள் கவிதைகளுக்கும்...! பதிவுகளுக்கும் ...முன்னர் நான் வெகு சாதாரணமானவன்...!

தமிழ் உதயம் said...

வலி நிறைந்தது தான் வாழ்க்கை. ஆனால் இத்தனை வலிகளா.

"உழவன்" "Uzhavan" said...

நெகிழ வைக்கும் கதை :-(

S.A. நவாஸுதீன் said...

மனதை பிழிந்தெடுத்துவிட்டது ஹேமா. மதியின் வாழ்க்கை முழுமதிபோல் பிரகாசமாகவே இனி இருக்கட்டும்.

நிலாமதி said...

வந்துடேன் ஹேமா ,...வலி கண்ட வாழ்க்கை . பத்து வருடம் சிவாவுடன் வாழ்த்து விடீர்கள். சிவா.....இனியும் திரும்புவார் தகவல் வரும் எனும் நம்பிக்கையில்லை. அனுபவங்களில் பாடம் படியுங்கள். செஞ்சோலை சிறுமி நல்ல முயற்சி. இனி தேவை ஒரு துணை. அந்த சிறுமியை எடுக்க முயற்சி செய்யுங்கள். அவள் மகளாக துணையாக் இருப்பாள். உங்கள் கல்வி கடைசி வரை சோறு போடும். தள்ளாத காலத்தில் ஒரு துணை தேவை .உங்களின்பலவீனம் ......தனிமை உணர்வு ...பிரிவு ஏக்கம் கதாநாயகி நீங்களாக இருந்தால் உங்களுக்கும் மதியாக் இருந்தால் மதிக்கும் பொருந்தும . எத்ர்பார்புகளை குறைத்து உங்களுக்கென பாதை வகுத்து வெற்றியுடன் வாழ்க.

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்.... சொல்ல தெரியாத நெகிழ்வு... தோழிக்கு ஆறுதல் சொல்லிவிடுங்கள்

சிங்கக்குட்டி said...

உருக வைக்கும் வார்த்தைகள்.

பொதுவாகவே சோகத்தை தவிர்ப்பவன் நான், இருந்தாலும் இதை படித்தேன் உறைந்தேன் ...வேறு என்ன சொல்ல...

பித்தனின் வாக்கு said...

இதை படிக்கையில் மெல்லப் படர்ந்த குறு நகை என் இதழின் ஓரத்தில் முடிந்தது. வாழ்வின் நிகழ்வுகளும், வலிகளும் அது தரும் அனுபவங்களும் ஏராளம். ஆனால் அங்கயே நின்று விட்டால் பயணம் தொடர்வதில்லை. அதுக்காக மூலையில் நின்று கதறும் எண்ணமும் வேண்டாம்.

நம்மால் ஆவதும் ஏதும் இல்லை,
நம்மால் ஈவதும் ஏதும் இல்லை,
வினையின் பயனே, கருமத்தின் கடனே இந்த வாழ்க்கை,
கடவுளின் கட்டளையே, காலத்தின் கட்டாயமே இது.
வாழும் வரை வாழ்ந்து விடு, அன்பு வாசலைத் திறந்து விடு
அதில் ஒரு சிவா மட்டும் இல்லை ஓராயிரம் சிவாக்கள் வருவார்கள்

அது சரி குழந்தைகளையும் ஏன் சிவாவாய் பார்க்க வேண்டும் அவர்களை கடவுளாய், அவரின் தூதராய்,ஒரு மூன்றாம் மனிதனாய் காண்டு இரசிக்க பழக வேண்டும்.
கடலில் ஒரு அலையாய் வந்து சென்ற சிவாவை மறக்காத வரைக்கும் மதிக்கு நரகம் வேறு எதுவும் இல்லை. நன்றி.

கடந்து செல்லும் காற்றையும், மேகங்களையும் அறியா நாம் மனிதர்களை மட்டும் நினைவில் இருத்தி கவலை கொள்வது அறிவீனம்.

குட்டி said...

ஒரு சிலர்க்கு இந்த பதிவு, கதையின் வலி மட்டுமே தெரியும்.
நம்மால் சொல்ல & பதிய முடியாததை அடுத்தவர் சொல்லிவிட்டாரே என்று...!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

இந்தக் கதையில் இருக்கும் ஏதோ ஒன்று மனதை நெருடுகிறது தோழி. கதை சொல்லும் விதம் இடையில் பிழைத்து விட்டது உண்மைதான். படித்தேன். மனம் கனத்துப்போகிறேன்.

Muruganandan M.K. said...

மனதைத் தொடும் பதிவு. நெகிழ வைக்கும் நடை. தொடர்ந்து எழுதுங்கள்.

Anonymous said...

வலி கொல்டுத்தாலும் அழகான எழுத்துக்கள் வாழ்த்துக்களுடன

மேவி... said...

ஹேமா ...பொறந்தாச்சு .....சாகும் வரைக்கும் வாழ்ந்து தான் ஆக வேண்டும் ....

உங்க பகிர்வு கூட என் வாழ்க்கை மாதிரியே தான் இருக்கு...நிறைய தோல்விகள் ....ஆயிரம் அவமானங்கள் ....எல்லாத்தையும் தாங்கி கொண்டு வாழ்கிறேன்.

இப்ப எல்லாம் வாழ்க்கைல எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை ...ஆசைகள் இல்லை..நம்பிக்கைகள் இல்லை......

வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்...சந்தோஷமாக..இறக்கும் வரைக்கும் சந்தோஷமாக தான் இருப்பேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வரிகள் முழுவதும் வலி கொடுக்கும்படியான எழுத்துக்கள்.

ஜெயா said...

மனதை தொட்டுச்சென்றது உங்கள் தோழியின் கதை வலிகளோடு வாழும் மனங்களுக்கு உங்கள் வரிகள் ஆறுதல் சகோதரி, வாழ்த்துக்களுடன் நான் புதியவள்

சிநேகிதன் அக்பர் said...

படிச்சு முடிச்சவுடன் மனதுக்கு கஷ்டமா இருந்துச்சு.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP