Thursday, February 19, 2009

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு.

வனுக்கென்ன மகாராஜாதான்.ஏ.ஸி கார் பெரிய வீடு வாசல் பெரிய உத்தியோகம் கூப்பிட்ட குரலுக்கு உடனே பத்து வேலைக்காரர்கள்."ம்ம்ம்..என்கூட தானே ஒன்றாகப் படித்தவன்.ஆனால் நானும் இருக்கிறேனே!இப்படி இந்தக் கேடுகெட்ட அலுவலகத்தில வந்து குப்பை கொட்டவேணும்ன்னு என் தலை விதி"இப்படிச் சிலர் கவலைப் படுவதுண்டு.

வாழ்க்கையில் சிலர் ஏற்றம்,தாழ்வு,கவலைகள் யாருக்குத்தான் இல்லை.எல்லோருக்கும் கவலை இருக்கத்தான் செய்கிறது.பலர் தங்கள் பிரச்சனைகளை - கவலைகளை
வாய்விட்டுப் புலம்பி வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.ஆனால் சிலர் தங்கள் கவலைகளை வெளியே காட்டிக் கொள்வதே இல்லை.

கவலை என்பது மனதைக் கொல்லும் ஒரு நோய்.அது அமிலம் போல மனதை மெல்ல மெல்ல அரித்துக் கொல்லும்.
கற்பனையில் இல்லாததை எண்ணி கவலைப்படுபவர்கள் இன்று அதிகமாகி விட்டார்கள்.
"எனக்கு வேலை கிடைக்காவிட்டால்....
எனக்குத் திருமணம் நடக்காவிடால்....
என்னைக் காதலிப்பவன் என்னைக் கல்யாணம் செய்யாமல் விட்டு விட்டால்....
எனக்குக் குழந்தை பிறக்காவிட்டால்...."
இப்படி வீணான கற்பனைகள் மனதில் அலை அலையாய் எழும்.இதுவே
கவலைகளைக் கருக்கொள்ளச் செய்துவிடும்.

ஒருமுறை மான்செஸ்டர் நகரத்தில் உள்ள பிரபல மருத்துவரான டாக்டர் ஜேம்ஸ் ஹாமில்டன் என்பவரிடம் ஒருவர் வந்தார்."உங்களுக்கு உடம்பு சரியில்லையா?என்ன செய்கிறது'"டாக்டர் கேட்டார்."உடம்பு நன்றாகத்தான் இருக்கிறது டாக்டர்.ஆனால் என் மனசுதான் சரியில்லை"என்றார் வந்தவர்.
"நீங்கள் கவலைப்படாதீர்கள்...சிரிக்கப் பழகிக் கொள்ளுங்கள்.உங்கள் கவலை பறந்தே போகும்"என்றார் டாக்டர்.
"சிரிப்பை எப்படி வில்லங்கமாய் வரவைப்பது டாக்டர்"என்றார் கண்களை அகல விரித்தபடி.

இன்று இரவு நம் நகரத்திற்கு நடக்கும் சர்க்கஸ்"க்ரீமால்டி"என்கிற கோமாளி செய்கிற கோமாளி வேலைகளைப் பாருங்கள்.சிரிப்பு தானாகவே வரும்"என்றார் டாக்டர்.

"மன்னியுங்கள் டாக்டர்.அது என்னால் முடியாமல் இருக்கிறது"
"ஏன்"
"அந்தக் க்ரீமால்டி நான் தான்"என்றாராம் டாக்டரிடம் கவலைக்கு மருந்து கேட்டு வந்தவர்.
பிறரைச் சிரிக்க வைப்பதே தொழிலாகக் கொண்டவர்களுக்குக்கூட கவலைகள் இருக்கத்தான் செய்கிறது.

"கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு.காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு"என்பது திரைப்படக் கவிஞரின் உற்சாக வரிகள்.

"கவலைப்படுங்கள்.கண்ணீர் விட்டு அழுங்கள்.ஒரு நாளைக்கு ஐந்து நிமிடங்கள் கவலைப்படவும் அழவும் நேரம் ஒதுக்கினால் போதும்.தனியறையில் கவலைகளை நினைத்து கண்ணிர் வடியுங்கள்.ஆனால் அந்த ஐந்து நிமிடம் முடிந்த பின் கவலைகளை உதறிவிட்டு புதிய மனிதனாக அறையை விட்டு வாருங்கள்.பின் நாள் முழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள்"என்கிறார் ஒரு மேலை நாட்டு அறிஞர் ஒருவர்.

ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தான் மன்னன் ஒருவன்.இருந்தாலும் அவன் மனம் கவலைப் பட்டது.வாழ்க்கையில் நின்மதி இல்லை என எண்ணியவன் ஒரு முனிவரிடம் வந்து தனது பிரச்சனையைச் சொன்னான்.

"கவலை நோய் தீரவேன்டும் என்றால் கவலை இல்லாதவனுடைய சட்டையை வாங்கிப் போடு"என்று அறிவுரை கூறினார் முனிவர்.

மன்னர் மாறு வேடத்தில் நாடெல்லாம் அலைந்தான்."கவலை இல்லாதவர்கள் யாராவது இருக்கிறார்களா?"என தேடியவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஒருநாள் மாறு வேடத்தில் ஒரு குடிசை அருகே சென்றான்.வீட்டுக்குள் இருந்து ஒரு குரல் கேட்டது."அப்பாடா எனக்குக் கவலையே இல்லை.இப்படியே கவலை இல்லாமல் இனிமேலும் இருக்க வேண்டும்"என ஒரு ஏழை தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

"அப்பாடாநம் கவலை தீர்ந்தது" என மன்னன் வேகமாக அந்த ஏழையிடம் "நான் உங்கள் மன்னன்.கவலையில்லாத மனிதன் அணியும் சட்டை எனக்கு வேண்டும்.உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்.உன் சட்டையைத் தா"எனக் கேட்டான்.

"மன்னா...உங்களுக்கு என்னால் எதுவும் தரமுடியாது"என்றான் ஏழை

"எவ்வளவு பொன் பொருள் வேண்டும் என்றாலும் தருகிறேன்."

"மன்னா ....என்னிடம் உடம்பில் போட ஒரு சட்டைகூட இல்லை"என்றான் ஏழை.

தனது உடம்பை மறைக்க சட்டை இல்லாதவன் கவலையில்லாமல் வாழ்கிறான்.செல்வச் செழிப்பில் வாழும் மன்னன் கவலையில் வாழ்கிறான்.

மன நிறைவுடன் வாழப் பழகிக் கொண்டால் வாழ்க்கை கவலை இல்லை.பிரச்சனைகளும் குறைந்து மறைந்தே போகும்.

"எங்கள் கைகளுக்குள்தான் எங்கள் சந்தோஷமும் கவலையும்"
"கவலையற்ற இதயம் நீடித்து வாழும்"

ஹேமா(சுவிஸ்)

10 comments:

SUBBU said...

அட சுருக்கமா பதிவு போடுங்க :))

Muniappan Pakkangal said...

Nice post,we must accept facts in life.i remember my father saying "Be Cheerful" when we were crossing a tough period in life.

Anonymous said...

என்ன திடீருன்னு இப்படி ஹேமா? சோகம், சந்தோஷம் போகும் வரும். அதுவும் ஒரு காலநிலை போலதானே.

கவலை வந்தால் முடங்கி போவதும், சந்தோஷம் வந்தால் துள்ளி குதிப்பதும் இயற்கையானது தானே.

கவலை இல்லாத மனிதர்கள் யாரும் உலகத்தில் இல்லை.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி கவலை இருக்கும். அதையெல்லாம் மறந்து விட்டு ஏதாவது வழியில் அமைதியையும் சந்தோஷத்தையும் தேடிக்கொண்டு தான் இருக்கிறhர்கள்.

நல்ல பதிவு.

ஹேமா said...

நன்றி சுப்பு.நீங்க சொல்றதைக் கவனத்தில எடுக்கிறேன்.அதுக்காக சுருக்கமா எழுதுறேன்னு உங்க பதிவில ஒண்ணையுமே காணோமே!

ஹேமா said...

முனியப்பன் நானே என்னைப் புரிந்துகொண்டாலும்,என் வாழ்வு,எம் தேசம் என்று மனம் பிய்த்துப் போட்டபடியே இருக்கிறது.கடையம் ஆனந்த் அவர்களின் நீண்ட நாள் குற்றச்சாட்டு நான் எப்பவும் கவலையான பதிவுகள் மட்டும்தான் போடுகிறேன் என்று.
முயற்சிக்கிறேன்.என்றாலும்-என்னதான் தத்துவம் பேசினாலும் ...முடிவு!

ஹேமா said...

ஆனந்த் நன்றி உப்புமடச் சந்திப்பக்கம் வந்ததுக்கு.நீங்கல் சந்தோஷமாக இருக்கச் சொல்வீர்கள்.நானும் இப்படியெல்லாம் தத்துவம் பேசி-எழுதி சந்தோஷமாக இருக்கப் பார்க்கிறேன்.எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொள்கிறேன்.

பாருங்க அடுத்த பதிவுகள் எல்லாம் சிரிப்பு வெடிகள் கேக்கப்போகுது உங்க கடையம் வரைக்கும்.வந்திடுங்க... சத்தம் கேக்கும்.

VIKNESHWARAN ADAKKALAM said...

அருமையாக சொல்லி இருக்கிங்க ஹேமா... கவலைகள் இல்லை என்றால் மகிழ்ச்சியின் அர்த்தம் புரியாமல் போய்விடும்...

*இயற்கை ராஜி* said...

கவலை வந்தால் முடங்கி போவதும், சந்தோஷம் வந்தால் துள்ளி குதிப்பதும் இயற்கை தானே.:-)

தமிழ் மதுரம் said...

அவனுக்கென்ன மகாராஜாதான்.ஏ.ஸி கார் பெரிய வீடு வாசல் பெரிய உத்தியோகம் கூப்பிட்ட குரலுக்கு உடனே பத்து வேலைக்காரர்கள்."ம்ம்ம்..என்கூட தானே ஒன்றாகப் படித்தவன்.ஆனால் நானும் இருக்கிறேனே!இப்படி இந்தக் கேடுகெட்ட அலுவலகத்தில வந்து குப்பை கொட்டவேணும்ன்னு என் தலை விதி"இப்படிச் சிலர் கவலைப் படுவதுண்டு.//

இதைப் பார்த்ததும் ஏதோ சிறுகதை என்று நினைத்தால் இப்பிடி தத்துவம், அறிவுரை எல்லாம் சொல்லிக் கவிழ்த்திட்டீங்களே? ம்..என்னிடம் உங்கள் பழைய உப்புமடச் சந்தி முகவரி தான் இருந்தது.. அது தான் தாமதம்...உங்கள் பதிவு பழைய பதிவையே எனது தளத்தில் காட்டிக் கொண்டிருந்தது?

உப்புமட சந்தி கலக்கல் தான்?

தமிழ் மதுரம் said...

ஹேமா நீங்கள் எப்ப சைக்கோலஜி/ உளவியல் டொக்டராகினீங்கள்? சொல்லவேயில்லை?

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP