Tuesday, December 08, 2009

உறவு தேடும் உள்ளம் 1

புரண்டு புரண்டு படுக்கிறேன்.நித்திரை பக்கமும் இல்லை.என் உளட்டலினால் கட்டில் அசைய என் கணவர் சிவா விழித்துக்கொள்கிறார்.என் பக்கம் திரும்பி "என்ன மதி இன்னும் நித்திரை கொள்ளேல்லையோ" என்று கேட்க நானும் இல்லையென்ன்று சொல்லவும் என்னை இடையோடு அணைத்தபடி திரும்பவும் தன் மூச்சுக்காற்றை என்னில் பரவவிட்டுத் தூங்கத்தொடங்கினார்.

கோழிக்குஞ்சுகள் தாய்க்கோழியின் இறக்கைகளுக்குள் அடைவதுபோல உரோமங்கள் நிறைந்த அவரது வெற்று மார்புக்குள் முகம் புதைத்துக் கொண்டேன் நானும்.உலகமே எனக்கு மட்டும்தான் என்கிற கர்வம்.இந்தக் கைகள் மட்டுமே போதும் என்கிற அசையாத நம்பிக்கை வேறு எந்தப் பாதுகாப்புமே தேவையில்லை என்கிற இறுமாப்பு.பெருமூச்சொன்று பெரிதாகப் புறப்பட்டு சிவாவுக்குப் பயந்து மெதுவாக வெளியேறியது.மனம் விழித்துக் கிடக்கிறது.எப்படி நித்திரை அருகில வரும்.மனம் முழுதும் கவலை மலை மலையாய் முட்டிக் கொண்டு நிற்கிறது.

இரண்டு மாதத்திற்கு முன் சாடைமாடையாக அரும்பத்தொடங்கிய இந்தநிலை சென்ற இரண்டு கிழமைக்கு முன்பு நிச்சயமாகிவிட்டது.அன்றிலிருந்து ஓ...விடிந்துவிட்டது இன்று.இன்னும் மூன்று நாட்கள்தான் இன்னும் இரண்டு நாட்கள்தான் என்று இன்று இன்று மட்டும் ஒரு நாள் என்கிற கணக்கோடு புரண்டுகொண்டிருந்தேன்.ஆமாம் விடிந்தால் சிவா என்னைவிட்டு வெகுதூரம் போகப்போகிறார்.நினைக்கும்போதே நெஞ்சு வலித்து வெடித்து விம்மியது.சென்ற இரவுகளில் சிவாவுக்குத் தெரியாமலேயே அழுது தீர்த்தேன்.இன்று என்னால் முடியவேயில்லை.சிவாவின் மார்புக்குள் புதைந்தபடியே அழத்தொடங்கிவிட்டேன்.

"என்ன மதி ஏன் இப்பிடிக் கவலைப்படுகிறீர்.நான் தான் சொல்றேனே,இனி இங்க இருக்கேலாது திரும்பிப் போகச்சொல்லி வந்திட்டுது.மூன்று தரம் அப்பீல் பண்ணியும் பாத்தாச்சுத்தானே.நல்ல வேளை எங்களுக்கு கல்யாண எழுத்தில்லாதது நல்லதாப் போச்சப்பா.இல்லையெண்டா இரண்டு பேரையுமெல்லோ கலைச்சிருப்பாங்கள்.இப்போ என்ன நீ தந்திருக்கிற 10,000Sfr வைச்சுக்கொண்டு நான் கனடா போறன்.அங்க எப்பிடியும் ஒரு வருசத்துக்குள்ள காட் தந்திடுவாங்கள்.பிறகென்ன உன்னைக் கூப்பிடுவன்தானே.பத்து வருசமாச்சு உன்னோட குடும்பம் நடத்தத் தொடங்கி.உன்னை எப்பவாவது நீ ஒரு ஏலாதவள் எண்டு நான் கனவிலகூட நினைச்சதில்லையப்பா.இந்தக் கையால எவ்வளவை நீ உழைச்சுக்கொண்டு வந்து தந்திருக்கிறாய்.இஞ்ச பார் மதி.யோசிக்காம கவலைப்படாம நித்திரையைக் கொள்."

என் கணவர் சிவாவை நிமிர்ந்து பார்த்தேன்.அவர் கண்களும் கலங்கியிருந்தன.அவரின் அன்பும் ஆதரவும் என்றும் எனக்கு நிரந்தரம்.சின்னப் பிரிவுதானே கொஞ்ச நாளைக்குத்தானே என்று என்னையே ஆறுதல் படுத்திக்கொண்டு அயரத்தொடங்கினேன்.

அன்றைய இரவு ஓய்வெடுக்கத் தொடங்க பகல் பொழுது சூரியனின் துணையோடு தன் அலுவல்கலைத் தொடங்கியிருந்தது.நான் அழ சிவாவும் அழுது ஆறுதல் சொல்லிப் பயணமானார்.காலத்திற்கு யாரைப்பற்றியுமே கவலையில்லை.நகர்ந்துகொண்டிருந்தது.

அவர் போய் தகவல் வரும் என்று காத்திருந்தேன்.எதுவுமே தெரியவில்லை.சாதரணமாகக் களவாகப் போகிறவர்கள் உடனடியாகப் போய்ச்சேரவோ போனாலும் உறவினர்களோடு தொடர்புகொள்ளவோ சீக்கிரமாக நடக்கிற காரியமல்ல.எனவே காத்திருப்பு மூன்று நாட்கள் மூன்று வாரங்கள் என மூன்று வருடங்கள் வரை நீண்டுகொண்டே போய்விட்டன.இன்று வரை எதுவித தகவலுமேயில்லை.(அன்றைய சூழ்நிலையில் வருடக்கணக்காகச் செய்திகள் கிடைப்பதில்லை)

ஒருவேளை போகும் வழியில் ஏதாவது ஆகியிருக்குமோ.எங்காவது காவல்துறையினரால் கைதாகியிருப்பாரோ.மனம் உளைந்து சந்தேகப் பூச்சிகளாலும் சூழ்ந்துகொள்கிறது சிலசமயம்.சிவாவா...என்சிவா என்னை ஏமாற்றுவாரா.சீ....என்ன இப்படி நினைக்கிறேன். இல்லை இல்லை.அவர் ஏதோ எங்கோ ஒரு சிக்கலுக்குள்தான் அகப்பட்டுக்கொண்டார்.
பயமில்லை.காலம் தாமதமானாலும் செய்தி வரும் நிச்சயம் என என்னையே சமாதானம் செய்துகொண்டேன்.

என் மனதை நம்பிக்கையால் நிரப்பியிருந்தேன்.ஏனென்றால் நானும் என் சிவாவும் வாழ்ந்த வாழ்க்கை அப்படியானது.என்னை முதன் முதலாக் ஜேர்மனியில்தான் சிவா சந்தித்தார். என்னைப்போலவே அவரும் ஜேர்மனிக்கு அவரும் வந்திருந்தார்.அகதிப்பதிவு உதவிப்பணம் பெற அவரும் வந்திருப்பார்.அந்த நேரங்களில் பலதடவைகள் நாங்கள் கண்டு பழகியே அந்தப் பழக்கம் காதலாக மலர்ந்தது.அப்போது எனக்கு வயது 26.நான் சிவாவிடம் காதலை எதிர்பார்த்திருக்கவில்லை.அதிர்ச்சி பயமாகி என் நிலைமையையும் உணர்ந்து அவரது காதலை மறுத்தேன்.பின்னரும் அவரது அன்பைத் தவிர்க்கமுடியாமல் அவரது சமாதனத்திற்குள் இணங்கிகொண்டேன்.

(இன்னும் இதேயளவு ஒரு பகுதி இருப்பதால் பதிவை இரண்டாக்குகிறேன்.)

ஹேமா(சுவிஸ்)

21 comments:

நையாண்டி நைனா said...

நிறைய இடைவெளி இடாமல் அடுத்த பகுதியையும்...... சீக்கிரம்..

க.பாலாசி said...

//சின்னப் பிரிவுதானே கொஞ்ச நாளைக்குத்தானே என்று என்னையே ஆறுதல் படுத்திக்கொண்டு அயரத்தொடங்கினேன்.//

லேபிளில் அனுபவம் சிறுகதை என்று படித்தேன். அனுபவம் என்றால்?

பிரிவுதான் எத்தனை ஏக்கங்களையும் சுமைகளை விட்டுச்செல்கிறது...

இரண்டையும் தொடருங்கள்....

S.A. நவாஸுதீன் said...

அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். விரைவில் போடவும்.

வால்பையன் said...

//உரோமங்கள் நிறைந்த அவரது வெற்று மார்பு//

முரண்பாடா இருக்கே!?

வால்பையன் said...

அனுபவம்னு வேற லேபிளில் இருக்கு!

யோசிச்சு பகிர்ந்துகோங்க!

ஆரூரன் விசுவநாதன் said...

மிக நெகிழ்வான பதிவு.....

மண் பிளந்து நெல் முளைத்தது-உழவர்கள் உவகை கொண்டனர்....

வான் பிளந்து மழை பெய்தது-உலகம் வளர்ச்சி பெற்றது.....

இப்படி பிரிவுதான் வாழ்க்கை யென்றால் பேசிச் சிரித்ததெல்லாம் பொய்யா தோழி..

என்று எங்கோ படித்தது நினைவிற்கு வருகிறது...


அடுத்த பதிவை விரைவில் இடுங்கள்...மனம் அமைதியாய் இல்லை..

தமிழ் உதயம் said...

இரண்டாம் பகுதியை எதிர்பார்க்கிறேன்

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல கதை ; நல்லாருக்கு ஹேமா மேடம்

நசரேயன் said...

//
வால்பையன் said...

அனுபவம்னு வேற லேபிளில் இருக்கு!

யோசிச்சு பகிர்ந்துகோங்க!
//

வால் சொன்னதை நானும் சொல்லிகிறேன், மத்தபடி கதையா இருந்தா அருமைன்னு வழக்கம் போல சொல்லிட்டேன்.

மாதேவி said...

"உறவு தேடும் உள்ளம்" பிரிவின் தாக்கத்தைச் சுமக்கும் கதை. மிகுதியை எதிர்பார்க்கிறேன்.

thamizhparavai said...

//பெருமூச்சொன்று பெரிதாகப் புறப்பட்டு சிவாவுக்குப் பயந்து மெதுவாக வெளியேறியது//
ரசித்த வரிகள்...
உங்கள் பேச்சு படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது...
அடுத்த பகுதி போடவும்...
இன்னும் வார்த்தைகளைச் செதுக்கலாம்..

லெமூரியன்... said...

mmm....waiting for the continuity...!

இராகவன் நைஜிரியா said...

அடுத்தப் பதிவை எதிர் நோக்கி காத்திருக்கின்றேன்..

நிலாமதி said...

அடுத்தபதிவை மிக்க ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். மனதை எதோ நெருடுகிறது ...சீக்கிரம் பதியுங்கள். அழகானஎழுத்துநடைஆவலுடன்
காத்திருக்கிறேன்.....

ஆ.ஞானசேகரன் said...

நெகிழ்வாய் இருக்கு ஹேமா,... வால்பையன் கூறியதும் யோசிக்கின்றேன்...

பல இடங்களின் எனக்கு என்னை பற்றிய நினைவுகளும் வந்தது.

பாராட்டுகள் ஹேமா

பூங்குன்றன்.வே said...

மனதை பிழியும் கதை.அடுத்த பகுதிக்காக மிக ஆவலுடன் உள்ளேன் ஹேமா.
ரொம்ப சோகமா இருக்ககூடாதுப்பா.

வேந்தன் said...

அடுத்த பதிவை விரைவில் இடுங்கள்.
நல்ல சிறுகதை.

//அனுபவம்//
?? :(

ராஜவம்சம் said...

காலம் என்பது நீர் ஓடை போல் கல்விழும்போது கலங்கும் நீர் சிறிது நேரத்தில் தெழிந்துவிடும் ,சோகமும் துக்கமும் அப்படித்தானோ.

Kala said...

ஹேமா அடுத்த பகுதியும் வந்தால் தான்
என் நோ{ஓ}ட்டம் தொடரும்.............

Nathanjagk said...

அனுபவ லேபிள் என்றாலும் ஆழமான உண்மையின் திறவுகோலாக இருக்கிறது கதை.
வாழ்க்கை விவரணையாக இல்லாமல் சிறுகதை வாசத்தோடு இன்னும் தீற்றியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
தடை கடந்து, பயம் களைந்து எழுதுங்கள்.
பதிவுலகப் பெண்களிடம் நான் கேட்பது இதுமட்டும்தான்:
வெட்கப் போர்வையில் உள்ளுக்குள்ளேயே வேர்த்துக் கொட்டாமல் வெளிச்ச வெளியில் உலாத்துங்கள் தோழியரே!

ஹேமா said...

இந்தப் பதிவில் கருத்துத் தந்த அன்பான

நைனா
பாலாஜி
நவாஸ்
வாலு
ஆரூரன்
தமிழ்
ஸ்டார்ஜன்
நசர்
மாதேவி
தமிழ்ப்பறவை அண்ணா
லெமூரியன்
யாதவன்
இராகவன்
நிலாமதி
ஞானம்
குன்றன்
வேந்தன்
ராஜவம்சம்
கலா
ஜெகா

எல்லாருக்கும் என் நன்றி.முடியும் பகுதியில் நிறைவான கருத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP