Thursday, November 18, 2010

அவன் அவள் அவர்கள்.

த்மன் அலைபேசியோடு அப்படியே சாய்ந்திருந்தான் சுழல்நாற்காலியில்.மகன் ரிஷி கூப்பிடும் சத்தம் கேட்டே நிலைக்கு வந்தவனாய்..."என்னப்பா" என்றான்.

"ஜெனியை வீட்டுப்பாடம் செய்ய உதவி செய்யக் கேட்டேன்.தனக்கு நிறைய வேலை இருப்பதாய்ச் சொல்கிறாள்.நீங்களாவது சொல்லித் தாருங்கள்" என்று ஜேர்மன் மொழியில் கேட்டபடி நின்றிருந்தான் ரிஷி.

பத்மனுக்கு அவ்வளவாக சொல்லிக்கொடுக்கத் தெரியாது.சுவிஸ் வந்து 15 வருடமாகியும் மொழித் திறன் இல்லை.

"ஏன் இன்று அம்மாவிடம் கேட்டுக்கொள்ளவில்லை"... என்றபடி வாங்கிப் பார்த்தான் பத்மன்.

"சரி இரு...அக்காவிடம் சொல்லித் தரச்சொல்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே...

"ஜெனி ப்ளீஸ் மா தம்பிக்குச் சொல்லிக் கொடு.எனக்கு சொல்லிக் கொடுக்கத் தெரியவில்லை"... என்றான் தமிழ் பாதியும் ஜேர்மன் பாதியுமாய்.

அப்பா இறந்து 6 மாதங்களாகிறது.அம்மா தனித்துவிடப்பட்டதாய் தான் உணர்ந்தாலும் தன்பாட்டில் எனக்கும் பிள்ளைகளுக்கும் தனக்கு முடிந்ததைச் சமைத்துத் தந்துகொண்டிருந்தா.பிள்ளைகளும் என்றும் இங்கு தங்குபவர்கள் இல்லை.கிழமையில் செவ்வாய்,புதன் கிழமைகளில் மாத்திரமே.ஜெனி ஓரளவு எங்கள் சாப்பாடான சோறு,புட்டு, உறைப்புக்கறிகள் சாப்பிடுவாள்.ரிஷிக்கு வாழைப்பழரொட்டியும்,பால்புட்டும் பிடிக்கும்.அவனுக்காகவே அம்மா உழுந்து வறுத்து அரைத்து பால்புட்டு,அரிசிமாக்கழி என்று செய்து கொடுப்பா.இல்லாவிட்டால் மக்டோனால்ஸ்,பூஸ்ட் என்று ஏதாவது நான்தான் தெரிந்த சுவிஸ் உணவுவகைகளைச் செய்துகொடுப்பேன்.

இன்றும் அம்மா செய்யும் எங்கள் சமையலின் வாசனை கதவு தாண்டி வெளியில் போய்க்கொண்டிருந்தது.எங்களுக்கு வாசனை.வெளியில் சுவிஸ்காரருக்கு அது நாத்தமாகக் கூட இருக்கலாம்.

அப்பா அம்மா இரு தங்கைகளோடு 5 வருடங்களுக்கு முன் இங்கு அழைத்துக்கொண்டேன்.தம்பியைக் கனடா அனுப்பிவிட்டேன்.ஒரு தங்கையைச் சொந்தத்தில் திருமணம் செய்து கொடுத்தேன்.மறு தங்கை ஊரில் இருக்கும்போதே பிரான்ஸ்ல் இருக்கும் ஒரு பையனை விரும்பியிருந்தாள்.

வந்து ஒரு வருடத்திலேயே மூத்த தங்கையின் திருமணம்.சொந்தம் என்றபடியால் பெரிதாகச் செயவு இல்லை.அதோடு மாமா மாமி மச்சான் எல்லோருமே இங்கு வந்து திருமணம் செய்துகொண்டு கூட்டிப்போனார்கள் தங்கையை.எல்லாச் செலவும் தானே ஏற்றுக்கொண்டான் மச்சான் என் நிலை அறிந்தவனாய்.நான்கு பேரைக் களவாக இலங்கையிலிருந்து கூப்பிடுவது என்பது ஏஜென்சிக்குப் பெரிய தொகை செலவு.அவர்கள் வந்து அடுத்த வருடத்திலேயே பெரிய செலவு என்று சொல்லிக்கொண்டிருந்தாள் கிரட்.

அதே வருடத்தில் அப்பாவுக்கும் சிறிது சிறிதாக நோய் வந்தும் போயும் கொண்டிருந்தது.அதுவும் அடிக்கடி செலவுதான்.என்ன செய்யலாம்.வாழ்வின் அத்தியாவசியச் செலவுகளைக் கிரட்டும் செய்துகொண்டுதான் இருந்தாள்.

அவளின் அன்புக்கும் உதவிக்கும் ஈடு இல்லை.அவளால்தான் நான் இத்தனை உயர்ந்தேன்.சுவிஸ் வந்து 6 மாதங்கள் வேலை இல்லாமல் இருந்தேன்.அந்தச் சமயத்தில் உதவிப்பணம் தருவார்கள்.அது வாங்கப் போகும் வேளையில் அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருத்தியாகவே இந்த மார்கிரட்டைச் சந்தித்தேன்.என்னைப்பற்றி எங்கள் நாட்டின் அவலங்கள் பற்றி என் குடும்பம் பற்றி விசாரிக்கத் தொடங்கியவள் மெல்ல மெல்ல என்னை விரும்புவதாகச் சொன்னாள்.

ஓரளவு ஆங்கிலம் தெரிந்தபடியால் அவளோடு என் நிலைமைகளை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தேன்.என்னைப் பத்து...என்றே அழைத்து என் கை வருடி ஒரு தாயின் அன்போடு எனக்கு ஆறுதலாயிருந்தாள் கிரட்.

எங்கள் பழக்கவழக்கம்,பண்பாடு,கலாசாரம் எல்லாம் பற்றிக் கதை கதையாகச் சொன்னேன்.சமையல் பற்றிச் சொன்னேன்.அடம்பிடித்தாள் சமைத்துக் காட்டச்சொல்லி.சமைத்துச் சாப்பிட்டோம் இருவருமாக.புரிதல் நிறைவாகவே பட்டது எனக்கும்.எங்கள் பெண்கள் போலவே பண்பாடினாள்.ஒத்துக்கொண்டது ஒட்டிக்கொண்டது மனங்கள்.அறிவித்தோம் இருபக்கப் பெற்றவர்களுக்கும்.சட்டப்படி இணைந்துகொண்டோம்.

வாழ்வு வித்தியாசமாய் இனிதாய் அன்புத் துணையோடு நகர்ந்துகொண்டிருந்தது.எங்கள் சாப்பாடு தொடக்கம் இனிமையான பாடல்கள் வரை ரசிக்கப் பழகியிருந்தாள் கிரட்.பத்து...பத்து என்று என்னைப் பற்றிப் படர்ந்திருந்தாள் என் தோழியாக.

மூன்று வருடங்களின் பின் பிறந்தாள் ஜெனி.அதன்பின் ரிஷி.

அவளாகவே சொல்லிப் பணம் அனுப்புவாள் அப்பா அம்மாவுக்கு.ஓரளவு தமிழ் சொற்கள் கதைக்கப் பழகிக்கொண்டாள்.

அத்தை....சுகமா இருக்கீங்களா....உங்க மகன் ரொம்ப குழப்படி.என் பிள்ளைங்க நல்லம்.அவங்களும் சுகம்.

இப்படியாகச் சின்னச் சின்னதாக பேசப் பழகியிருந்தாள்."மலரே மௌனமா...மிகவும் பிடித்த பாடல்.எந்தப் பிடித்த பாடலுக்கும் பொருள் கேட்டுத் தெரிந்துகொள்வாள்.

இப்படியாய் இருந்த அவள்தான் இன்று இரண்டு பட்டுப் பிரிந்து நிற்கிறாள்.என்னைவிட அவளுக்குத்தான் வேதனை அதிகம்.

காரணம் அவர்களின் வாழ்க்கை பாரங்கள் சுமக்காமல் இலேசானது.என் வாழ்க்கை...என் பாதை என்று பெற்றவர்கள் கையில் இவர்களோ இவர்கள் கையில் பெற்றவர்கள் பிறந்தவர்களோ தங்கியிருப்பதில்லை.சிறு சிறு உதவிகள் சந்தோஷங்களோடு மட்டுமே இவர்களின் உறவு.அமைதியை விரும்புபவர்கள்.மன உளைச்சலைத் தவிர்ப்பவர்கள்.

ஆரம்ப காலத்தில் என் குடும்பத்தோடு மாதம் அனுப்பும் பணமும் தொலைபேசியோடு மட்டுமே இருந்த தொடர்பு என் குடும்பம் நாட்டின் சூழ்நிலையால் அவர்களையும் ஒரு அமைதியான வாழ்க்கைக்குக் கொண்டு வர நினைத்தே ...

அதற்கு அவளும் சம்மதித்தாள்.பணமும் உதவினாள்.

ஒருவேளை இப்படியாகும் என்று அவள் எதிர்பார்க்கவில்லைப் போலும்.

அப்பா அம்மா தங்கை ஹொங்ஹொங் போய் அங்கு 7 மாதங்கள் பிறகு எங்கெங்கெல்லாமோ அலைந்து அங்கங்கெல்லாம் தேடுதலும் தொலைபேசிச் செலவும்.ஒரு மாதிரி 11 மாதங்கள் அலைந்து வந்து சேர்ந்தார்கள்.மறுபக்கத்தில் தம்பி பயணித்தான் கனடா.அதன் செலவு.வீட்டிலும் இரு குழந்தைகளோடு இருவரும் வேலைக்குப்போவதும் குடும்பத்தைப் பராமரிப்பதுமான செலவுகள்.

இது என் தலையில் சுமக்கும் பாரமாயிருந்தாலும்...கிரட்டுக்கு இருக்கும் முழுச் சந்தோஷம் நானும் குழந்தைகளும் மட்டுமே.வாரம் ஒருநாள் ஞாயிறு மட்டுமாவது வெளியில் எங்காவது போய்வர வேண்டும்.விடுமுறைக் காலங்களில் இரண்டு வாரமாவது எங்காவது சுற்றுலாப் போகவேண்டும் என்பது நியதியும் ஆசையும்.

எனக்கு இருக்கும் மனநிலையில் என் சொந்தச் சந்தோஷங்களைத் தவிர்க்கத் தொடங்கினேன்.இங்கேதான் பிரச்சனையே தொடங்கியது.

"பத்து....எனக்குப் பிடிக்கவில்லை.நீ கடன் கடன் என்கிறதும்......எந்த நேரமும் உன் குடும்பம் பற்றி மட்டும் யோசிச்சுக் கொண்டிருக்கிறதும்...."

உண்மைதான் கடன் முட்டி வந்து நிற்கிறது.

அப்பா அம்மா வந்து 5 வருடத்திற்குள் நான் ஆலாய்ப் பறக்கத் தொடங்கிவிட்டேன்.என் குடும்பச் சந்தோஷங்களைத் தொலைத்துவிட்டேன்.கிரட் தள்ளியே உணரத் தொடங்கிவிட்டாள்.

அவளும் புரிந்துகொள்கிறாள்.ஆனாலும் முடியவில்லை.ஒரே சலசலப்பு வீட்டில்.

இரண்டாவது தங்கைக்கும் திருமணம் சீக்கிரத்தில் அதுவும் நிறைவான சீதனத்தோடு அப்படி இப்படியென்று செய்துகொடுத்தேன்.

மூத்த தங்கைக்குக் குழந்தை பிறந்திருக்கிறது.நான் மாமாவாம்.கண்டிப்பாய் முறைதலைகள் செய்யவேணுமாம்.கடமைகள் தொடர்ந்தபடி.

இதோடு புதுக்கதை...குழந்தை பிறந்ததிலிருந்து தங்கைக்கு மனநிலை சரியில்லையாம்....மச்சான் ஒருமாதிரிக் கதைக்கிறார்.என்ன ஆகுமோ என்றபடி !

என்னதான் ஒத்திழுத்தாலும் பொறுமையிழந்து பார்த்துக்கொண்டிருக்கிறாள் கிரட்.

அப்பாவின் நோய் வர வர கூடிகொண்டே போனது.வயோதிபத்தின் தன்மையால் அவருக்குக் கொடுக்கும் மருந்துகள் சிகிற்சைகள் பலன் ஏதும் தராமல் குறைவதும் கூடுவதுமாகவே இருக்கிறது.

இப்போ அதுவும் வேலையோடு வேலையாகிவிட்டது எனக்கு.கிரட்டுக்கு குடும்பப் பாரம் கூடியிருந்து.குழந்தைகளைக் கவனிக்கவோ பாடசாலையால் கூட்டி வரவோ ...ஏன் வீட்டு மளிகைச் சாமான்கள் வாங்குவது வரை எல்லாமே கிரட்தான் பார்த்துக்கொண்டாள்.எனக்கு வேலையும் வைத்தியசாலையுமே உறவாகிவிட்டிருந்தது.அம்மாவையும் அடிக்கடி கூட்டிப் போகவும் வேண்டியிருந்தது.

இந்கக் கால்கட்டத்தில்தான் கிரட் ஒருநாள்...

"பத்து....இனி என்னால் உன்னோடு வாழமுடியாது.ஆனால் இப்போதும் உன்னை விரும்புகிறேன்.நீ...இப்போவெல்லாம் என்னை மறந்தே போகிறாய்.இன்னும் வர வர உன் குடும்பத்தின் பாரமும் செலவுகளும் கூடிக்கொண்டே போகிறது.நானும் குறையும் என்றுதான் சமாளித்துக் கொண்டிருந்தேன்.உன் அப்பாவுக்குச் சுகமில்லை.உன் மூத்த மச்சான் வேறு திருமணம் செய்ய்ப்போவதாகச் சொல்கிறான்.அந்தத் தங்கையும் குழந்தையும் இன்னொரு பாரம் உனக்கு.அவர்கள் அங்கு இருந்தாலும் அதன் வேதனை பாரம் எல்லாமே நீதான் சுமக்கப் போகிறாய்.எனக்கு ஒரே நெஞ்செல்லாம் வலிக்குது.நீ யாரையும் அவர்கள் பாட்டுக்கு விடுவதாயில்லை.எல்லாவற்றையும் உனதாக்குகிறாய்.என்னால் இதைப் பார்த்துக்கொண்டிருக்கவோ இதற்குள் கிடந்து உளரவோ முடியவில்லை.மன அழுத்தம் அதிகமாகிறது எனக்கு.இப்படியே போனால் மனம் குழம்பிவிடும்போல இருக்கு.

ஆனால் உன்னை இந்த நிலையில் விட்டுப் போகவும் விருப்பமில்லை.இப்போதும் உன்னை விரும்புகிறேன்.ஆனால் எனக்கானவனாய் மட்டும் நீ முன்னைப்போல இல்லை.என்னாலும் பெரியதொரு குடும்பச் சிக்கலுக்குள் பின்னித் தவிக்க முடியவில்லை.எனவே நான் முடிவு செய்துவிட்டேன்.நான் உன்னை விட்டுப் பிரிந்திருக்கப்போகிறேன்.என்னால் இனி முடியாது.நான் இதை இன்று ஒரே இரவில எடுத்த முடிவல்ல.பல நாட்களாகச் சிந்தித்து என் பெற்றோருடனும் கலந்தே இப்படியொரு முடிவெடுத்திருக்கிறேன்."என்று தன் மனதில உள்ள அத்தனையும் கொட்டி முடித்தாள்.

என்னால் எதுவுமே சொல்ல முடியவில்லை.உண்மைதான்.என் குடும்பச் சிக்கல் இன்னும் கூடிக்கொண்டே போகிறதே தவிர குறைவதாயில்லை.

அவர்கள் வாழ்வில் இப்படியான விஷயங்களைச் சந்தித்தே இருக்க மாட்டார்கள்.பொருளாதாரம் நிறைவாக இல்லாவிட்டாலும் அவர்களுக்குத் தேவையானதை அவர்களது நிலைமைக்கேற்றபடி அரசாங்கம் கவனித்துக்கொள்ளும்.பாசம் இருந்தாலும் எதையும் பெரிதாக அலட்டிக்கொள்ளாத மனநிலை அவர்களுடையது.ஒருவருக்கு ஒருவர் பாரமாக இருக்கமாட்டார்கள்.பாரத்தை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள்.நான் மௌனித்து ஏதோ ஒரு பேச்சுக்குச் சமாதானம் சொல்லிக்கொண்டு வேறு வழியற்று அவளை அணைத்தபடி ஊமையாய் இருந்தேன்.

"எனக்கு இதைவிட வேறு வழி தெரியவில்லை பத்து...அன்புக்குள் கட்டிக்கிடந்தபடியால்தான் இந்தப் பத்து வருடங்களை உன்னோடு என்னால் பகிர்ந்துகொள்ள முடிந்தது.இனியும் முடியாதுப்பா என்றாள்."கண்கள் கலங்குவதை மட்டும் அவளால் தடுக்க முடியவில்லை.அது அன்பின் ஊற்றெடுப்பு.

பிள்ளைகள் அங்கும் இங்குமாக பெற்றவர்களைப் பங்கெடுத்துக்கொண்டார்கள்.ஜெனிக்கு ஓரளவு புரிந்தும் புரியாத கணக்கானது அப்பா அம்மாவின் வாழ்வு.

ரிஷி மட்டும் அடிக்கடி கேட்டுக்கொள்வான்....
"ஏன் அம்மா தனியாக இருக்கிறா.நான் அம்மாவோடு கோபம்..."என்று மட்டும் சொல்லுவான்.ஆனால் அம்மாவோ அம்மா தந்த பொம்மையோ வேணும் தூங்குவதற்கு.

என்றாலும் நேரம் ஒதுக்கி நல்ல சிநேகிதர்களாய்ச் சந்திப்பதும்,பிள்ளைகளோடு உணவகம் போவது,சுற்றுலாப் போவது என்றும் தீர்மானித்திருந்தார்கள்.

இப்போ....அப்பாவும் அதே நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார்.

கிரட் வந்திருந்தாள்.மாமா..என்று உருகி மனம் விட்டு பாசத்தோடு அழுதாள்.அப்பா வாங்கிக் கொடுத்த சிரட்டையிலான ஒரு பொம்மையைத் தன் தலை மாட்டில் வைத்திருப்பதாகச் சொல்லிக் கொள்வாள்.ஆனால்....ஏன் ....!

இனி..அம்மா தங்கை குழந்தைகள் என்று அந்தப் பாரங்களைச் சுமந்தபடியே பத்மனின் வாழ்க்கை சுமைதாங்கியாய் ஒற்றை இடத்தில் நகராமால் அப்படியே.கிரட் என்கிற அன்பு இருக்கிறவரை அவன் அப்படியேதான் இருப்பான்.சாய்ந்துவிடவும் மாட்டான்.சாய்ந்துவிட விடவும் மாட்டாள் அவனது கிரட்.

ஹேமா(சுவிஸ்) படங்கள் உதவி - இணையம்.

33 comments:

எல் கே said...

கதை அருமை ஹேமா..

தமிழ் உதயம் said...

சரளமாய் ஓடிய நடை. குறும்படம் பார்த்தது போல், ஈழத்தமிழை அங்கங்கே ரசித்து. நல்ல கதை.

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள் ஹேமா......

ராஜ நடராஜன் said...

//ஓரளவு எங்கள் சாப்பாடான சோறு,புட்டு, உறைப்புக்கறிகள் //

உறைப்புக்கறிகள்,மரக்கறிகள்,கடல் உணவுகள் போன்றவற்றை உங்களவர்களிடமிருந்தே கற்றுக்கொள்ள முடியும்.

எங்களுக்கு வெஜிடபிள்,ஃபிஷ் மட்டுமே பழக்கம்:(

'பரிவை' சே.குமார் said...

அருமையான நடையில் நல்ல கதை ஹேமா.

சாந்தி மாரியப்பன் said...

நல்ல கதை ஹேமா...

ராஜ நடராஜன் said...

உறைப்பு கறின்னு சொன்னதும் இன்னுமொன்று நினைவுக்கு வருகிறது.புட்டு,இடியாப்பத்துக்கு உங்க வீட்டு காரம்,எங்க வீட்டு காரமெல்லாம் ஒண்ணா சேர்த்து சாப்பிடீறீங்களே அதெப்படி?

ஒரு தொலைக்காட்சி சமையலில் பார்த்தேன்.வாணலியில் எண்ணெய் சூடானதும் முதலில் கொட்டியது நீளவாக்கில் இரண்டான பச்சை மிளகாய்கள்.யப்பா!

எங்களுக்கு கடுகுதான் முதலில் வெடிக்கணும்:)

தமிழ் அமுதன் said...

ஆசைகளுக்காகவும்,
தேவைகளுக்காகவும்
உருவாகும் கலாச்சாரம்தான் சர்ச்சைக்கு உள்ளாகும்..!

ஆனால்..? அன்பை ஆணிவேராக வைத்து உருவாகும் கலாச்சாரம் எங்குமே உயர்ந்து நிற்கும்...!
இது எல்லா நாட்டிற்க்கும் பொருந்தும்.!

கேட்க படாத பல கேள்விகளுக்கு கூட
இந்த கதையில் விடை உள்ளது..!
அருமை..அருமை..!

ராஜ நடராஜன் said...

புலம்பெயர் நம்மவர்களின் குடும்ப பிரச்சினைகள அப்படியே.

கவிதைக்கு சொற்களின் ஆளுமை எப்படி முக்கியமோ அதே மாதிரி சிறுகதைக்கு வட்டார வழக்கு சொற்கள்.
எனக்கு வட்டார வழக்கு சொற்கள் வராததால் சிறுகதை பக்கமே போவதில்லை.ஆனால் குறை மட்டும் நல்லா சொல்வேன்:)

நிலாமதி said...

சொந்தங்களின் சுமை எங்களுக்கு சுகம் அவர்களுக்கு ...........ஈழத்து ஆண்மகனின் சுமைகளை அழகாக் விபரித்து இருக்கிறீர்கள் .
ஆனால் எல்லா ஆண் மக்களும் ( பத்மன் ) போல அல்ல

Unknown said...

புலம்பெயர்ந்து வாழ்தலில் மட்டுமல்ல என்னைபோல கிராமத்தில் இருந்து நகர வாழ்விற்கு நகர்ந்த ஆட்களுக்கும் இம்மாதிரி பிரச்சினைகள் இருக்கு.. காலம் நம்மை கூறு போட்டு விட்டது..

ஜோதிஜி said...

ராஜ நடராஜன்

விரல் வலி தாங்கமுடியாத போதும்

உங்கள் சமையல் ஆர்வம் ம்ம்ம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான நடை

லெமூரியன்... said...

ஹ்ம்ம்....கதையோ அல்லது நிசமோ....


படிக்கும் பொழுது பெருமூச்சு தான் வந்தது.....

புலம்பெயர்ந்தவருக்கு கலாசார ரீதியாக ஏக பாதிப்புகள்...

இல்லையா??

அம்பிகா said...

நிஜத்தில் இப்படி நிறைய சுமைதாங்கிகள்....ஹூம்.
நல்லாயிருக்கு ஹேமா.

Bibiliobibuli said...

ஹேமா,

புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் எம்மவர்களை நிறையவே, (எம்மவர்களே கூட), விமர்சனம் செய்கிறார்கள். ஆனாலும், எங்கட ஆட்களிடம் எனக்கு மிகவும் பிடித்த குணம், தான் தப்பினால் போதுமென்று நினைப்பதில்லை. உறவுகள், நட்புகள் என்று பார்த்துப்பாராமல் உதவுவார்கள். ஒன்றிரண்டு விதி விலக்குகள், பிணக்குகளும் உண்டு.

நேசமித்ரன் said...

நல்ல நடை ஹேமா

yarl said...

ஹேமா, ஹேமா, ஹேமா, வாசித்து விட்டு கொஞ்ச நேரம் அப்பிடியே இருந்துவிட்டேன். என்னத்தை சொல்ல? இது உண்மை கதையோ, கற்பனையோ அது உங்களுக்கு மட்டும் தானே தெரியும். என்னுடைய மனதில் இந்த மார்கிரட் உயர்ந்து தான் நிற்கிறாள். என்னென்றால் "உங்கட தாய் தகப்பனை கொண்டே old people home இல விட்டிட்டு வாங்கோ. அவை இந்த வீட்டில இருக்கும்மட்டும் கடைசி வரை இந்த வீட்டு வாசல் மிதிக்க மாட்டேன்" என்று பெத்த பிள்ளைகளையே விட்டிட்டு தன் சிநேகிதி வீட்டை போய் எந்த கூச்சமும் இல்லாமல் இருக்கிற எமது தமிழ் பெண்களை எனக்கு தெரியும். மனைவியா, பிள்ளைகளின் எதிர்காலமா, தன்னை பெற்றவர்களா என்று வேதனையில் உழன்று கொண்டு புலம் பெயர்ந்த நாட்டில் எங்கள் ஆண்கள் படும் பாடு அப்பப்பா!!!! இதை நான் லண்டனில் நேரில் பார்த்து கலங்கியவள்.
அன்புடன் மங்கை

Anonymous said...

ரொம்ப நல்லா இருக்கு ஹேமா..
கதையின் கடைசி வரிகள் அன்பின் வடிவம்..

VELU.G said...

மிக அருமை ஹேமா

ஸ்ரீராம். said...

வித்தியாசமான களம். அன்பையும் பிரிவையும் ஒரே நேரத்தில் இணைக்க முடியவில்லை. எனினும் இயல்பை, இயற்கையான நடையில் எழுதியிருக்கிறீர்கள். அருமையான கதை ஹேமா...

ஜெயா said...

கதை வாசித்து முடித்ததும் அப்படியே ஒரு உண்மைக்கதை போலவே இருந்தது ஹேமா.... பாராட்டுக்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நல்ல கதை ஹேமா..

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஃஎன்றாலும் நேரம் ஒதுக்கி நல்ல சிநேகிதர்களாய்ச் சந்திப்பதும்,பிள்ளைகளோடு உணவகம் போவது,சுற்றுலாப் போவது என்றும் தீர்மானித்திருந்தார்கள்.ஃஃஃஃஃ இந்த உலகம் எப்படிப் பரந்திரந்தாலும் மனங்கள் சுருங்கித் தானே இருக்கிறது

அப்பாதுரை said...

உறவுகளினால் ஏற்படும் வாழ்க்கைச் சிக்கலை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். 'எல்லாவற்றையும் உனதாக்குகிறாய்' உணர்வைத் தொட்டது. கூட்டுக்குடும்பங்களின் காரணமோ எதுவோ, நம் அணுவுக்குள் ஊறிய உணர்வு - குருதிப் பாசம். சிறகு வந்தும் பறக்க விரும்பாமல் தவித்துக் கூட்டுக்குத் திரும்ப நினைக்கும் எண்ணற்ற குருவிகளின் கதையை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். (சற்று நீளமோ?)

நிலாமகள் said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ஹேமா... புலம் பெயர்ந்தவங்களோட வாழ்நாள் எவ்வளவு சுமைகளை ஏற்றிவிடுகிறது அவர்களது முதுகில்...! பாரமாய் உணர்கிறேன்.

பித்தனின் வாக்கு said...

நல்ல கதை, அனுபவங்களை கோர்த்து எழுதும் நடை. உண்மை சம்பவங்கள் என்பது படிக்கும் போதே புலப்படுகின்றது. கவிதையும், கதையும் நல்லா எழுதுகின்றாய்.

Prabu M said...

எங்கே போனாலும் தமிழன் தமிழனாகத்தான் வாழ்கிறான்...
வாழ்க்கையின் நிதர்சனங்களோடு... காதல்,அன்பு,கடமை,பொறுப்பு,பாசம் என்று ஒவ்வொரு படிக்கட்டிலும் சிலுவை மரம் சுமக்கும் பாத்திரத்தின் வலியும் வேதனையும் மனதை நிறைக்கிறது....
அலட்டலில்லாமல் ஆட்கொள்ளும் பாந்தமான நடை... இயல்பான வார்த்தைகளில் ஈழத்தமிழின் வாசனை ஈர்ப்புவிசை கூட்டுகின்றன.... குறையில்லா படைப்பு அக்கா.... மனமார்ந்த வாழ்த்துக்கள்...

அன்புடன்

பிரபு எம்

சிநேகிதன் அக்பர் said...

அருமையான கதை ஹேமா

ஹேமா said...

கார்த்திக்....முதலாய் ஓடி வந்து ஊக்கம் தந்ததுக்கு நன்றி நன்றி !


தமிழ்...உங்கள் ரசிப்புத்தான் இன்னும் என்னை எழுதத் தூண்டும்.ஈழத்தவர் வாழ்வைப் பற்றி இன்னும் எழுத நிறைய இருந்தாலும் வடிவம் தெரியவில்லை.நன்றி !


அரூரன்....வாங்க வாங்க ரொம்பக் காலத்துக்கு அப்புறமா என் பக்கம்.எனக்குன்னு நான் எந்தப் பக்கமும் இல்லை.சிலர் குழுக்களாகச் சேர்ந்து பக்கமாகியிருப்பது புரிகிறது இணையத்தளங்களில் !


நடா...நானும் கேட்பேன் என்ன சமையல்ன்னா....சாம்பார் சாதம்.தயிர்சாதம்...என்னாதிது?
நல்லா சாப்பிடணும்.சூடா சொறணையா...உறைப்பா புளிப்பா...!குறை சொன்னாலும் அடிக்கடி என் பக்கம் காண்கிறேன் ஓரவஞ்சகம் இல்லாமல்.சந்தோஷம் !


குமார்...நன்றி வரவுக்கும் ஊக்கம் தரும் வார்த்தைக்க்கும் !


சாரல்...எங்கே காணோம்
கவிதைப் பக்கம் !


ஜீவன் அமுதன்...**அன்பை ஆணிவேராக வைத்து உருவாகும் கலாச்சாரம் எங்குமே உயர்ந்து நிற்கும்...!இது எல்லா நாட்டிற்க்கும் பொருந்தும்.!**அழகாய்ச் சொன்னீங்க.இதுதான் அடிப்படை !


நிலாமதி...மனதிலுள்ள பாசத்தின் அளவைப் பொறுத்தே வாழ்வாகிறது.பாவம் சில எங்கள் ஆண்களுக்கு கல்யாணமே ஆவதில்லை தலை மொட்டையாகும்வரை !


செந்தில்...உண்மைதான் அகதி வாழ்வில் மட்டுமல்ல இப்படியான நிலைமை !


ஜோதிஜி...அவ்ளோ சமையல் ஆர்வமா ....சாப்பாட்டு ஆர்வமா.
புட்டும் நண்டுக் குழம்பும் சாப்பிட்டுப்பாருங்க !


ராதாகிருஷ்ணன் ஐயா...அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி !

ஹேமா said...

லெமூரியன்....உண்மைதான் நீங்க சொன்னது.கலாசார சீரளிவுகள் நிறைய எங்கள் போர்க்கால வாழ்வில்.எங்கள் பண்பாட்டின் அடையாளங்களே அழிந்துகொண்டிருக்கிறது !


அம்பிகா...வாழ்வுதான் கதை.கதையேதான் வாழ்வு !


ரதி...எங்கள் குணமேதான்
சிலசமயம் எங்கள் பலஹீனம் !


நேசன்...உங்களைப்போல கவிதையாய் இல்லாவிட்டாலும் கதையாய் இருக்கிறேன் !


யாழ் மங்கை...நாங்கள்தானே எங்களுக்கு எதிரி எல்லா இடங்களிலும் !


பாலா...அன்புதான் எங்களை எல்லா இடத்திலுமே ஆட்டி வைக்கிறது.ஆடுகிறோம் !


வேலு...நன்றி நன்றி.கடவுள்போல சில மனிதர்கள் உலகில்.கடவுள் !


ஸ்ரீராம்...என்றும் என் எழுத்துக்கு ஊக்கம் தரும் ஒரு நல்ல மனம் உங்களுக்கு !


ஜெயா...உண்மை கலந்த பொய்க்கதை !


ஜெஸி...ம்ம்ம்....கதைதான்.எங்கள் வாழ்வின் அகதிப் பதிவுகள் இவை !


சுதா....உலகம் இயற்கை.மனம் எங்களுக்குள்.அதுதான் சுருக்கவும் விரித்து வைக்கவும் கற்றுக்கொண்டிருக்கிறோம் !


அப்பாஜி...என் கதை நீளமா,
இல்லை உங்கள் பின்னூட்டம் நீளமா.இரண்டுமே தேவையானதுதான் !


நிலா...அகதி வாழ்வின் சுமைகள் பாரமும் விரக்தியும் நிறைந்தது.பார்ப்பவர்களுக்கு சுகபோகம் மட்டுமே !


பித்தரே...ஹேமு கதையும் எழுதுகிறேன் என்கிறீர்கள்!


பிரபு...ஈழத்தமிழன் போகுமிடமெல்லாம் வருங்காலத்திற்க்கு பாடப்புத்தகமாக இருக்கிறான்.உங்கள் தமிழ்ப்பற்று என்றும் கூடவே இருக்கட்டும் !


அக்பர்....ஊருக்குப் போயிருந்தீங்களா.சுகம்தானே !

Prasanna said...

பக்கத்து வீட்டுக்காரரின் அனுபவத்தை பகிர்ந்து கொள்வது போல இருந்தது :)அருமை

அப்பாதுரை said...

மறுபடி படித்தேன். மறுபடி ரசித்தேன்.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP