Tuesday, March 01, 2011

ததரினன தாத்தா.

ஐந்து நாட்கள் தொடர் லீவு.வெளில குளிர்ப்பூக்களின் சிதறல்.கணணியும் இந்த நேரம் பாத்து பிச்சுக்கொண்டு போய்ட்டுது.புதுசு புதுசாக் கிடக்கு.இன்னும் சரியாக் கையாளவோ அதுக்கு என்னென்ன செய்யவேணுமோ அரைகுறையா...எதுவும் விளங்கேல்ல.வெளில பார்த்தா அமைதியான இலையில்லா மரங்கள்.பூனையொன்று குறுகி நடந்தபடி.வேற என்ன செய்ய நான்.வானொலியில் "பொட்டு வைத்த முகமோ...".கூரையில்லா வீட்ல முகடு பாத்துப் படுத்துக்கிடக்கிறன்.அப்போ என்ன ஆகும்.ஒரே ஊர் ஞாபகம்தான்.

அதோட போன கிழமை தமிழ்நதி அக்கான்ர ஒரு பதிவும் வாசிச்சன்.அதுதான் இந்த ஞாபகச் சிதறல்கள்.சுற்றம் சூழல் எத்தனை மனிதர்கள்.பார்ப்போம் பழகியிருக்கமாட்டோம். சிரித்திருப்போம் பேசியிருக்கமாட்டோம்.
சொந்தமாயிருக்கும் சண்டைபோட்டதால் போயிருக்கமாட்டோம்.ஆனால் அத்தனைபேரும் ஞாபகத்தில் அடிக்கடி வந்துபோகும் உறவுகள்.நம்மவர்கள்.சொந்தங்கள்.யார் எங்கு.இப்போ இருப்பார்களா இல்லையா என்றும் தெரியவில்லை.பெருமூச்சில் கரையும் அவர்கள் முகங்கள்.சிலசமயங்களில் ஒருவேளை செத்திருந்தால்.....இனிக் காணவே முடியாதே.எத்தனை வருடங்களின் வேகப் பாய்ச்சல்.

அந்தக் கதை வாசிச்ச பிறகு வந்துபோகும் ஒருமுகம் எங்கள் கிருஷ்ணமூர்த்தித் தாத்தா.நாங்கள் அவருக்கு வச்சிருக்கும் பெயர் என்ன தெரியுமோ..."ததரினன தாத்தா".ஏனென்றால் ஏதோ ஒரு இராகம் சத்தமாய் முணுமுணுத்தபடிதான் எந்த நேரமும்.நாய்க்கு பூனைக்கும் அதே ராகம்தான்.அந்த வயதில சந்தோஷ ராகமா துக்கமா தெரியாது.நாயை அடிச்சுக் கலைக்கவும் ராகம்தான்.

அவரை எல்லாருக்கும் தெரியும்.அவர் பெரிய பேர் புகழான மனுஷன்மாதிரித்தான் எங்கட ஊர்ல.இத்தனைக்கும் அவர் ஒரு சாதரண கோயில் தவில்காரர்தான்.ஆனால் குஞ்சு குருமான்ல இருந்து பெரிய பெரிய மாடிவீட்டுக்கார மகேஸ்வரி அக்கா,தாவடிச்சந்தி தாண்ட வரும் தவறணைச் சின்னத்தம்பியண்ணை,றோசாப்பூக்கடை தயா,கொக்குவில் பள்ளிக்கூட அதிபர், சந்திப்பிள்ளையார் கோயில் ஐயர் வரைக்கும் அத்துப்படி இந்தப்பெடி ததரினானானா.

காக்கா வருது...இந்தாபூனை...பிள்ளைபிடிகாரன் வாறான்...அங்கபார் நிலாவில பாட்டி சம்பல் அரைக்கிறா....எந்தப் பூச்சாண்டிக்கும் மசியாத சாப்பிட மறுக்கும் சின்னனுகள் இந்தா வாறார் ததரினனா தாத்தா என்றால் கண்ணை உருட்டித் தேடியபடியே எப்பிடி என்றே தெரியாமல் சாப்பிட்டுவிடுவார்கள்.அதற்காக குழந்தைகளுக்கு வில்லன் இல்லை அவர்.எப்போதும் வேட்டி மடிப்பில் ஏதோ ஒரு இனிப்பு வகை இருந்துகொண்டேயிருக்கும்.கோயிலால் கொண்டுவரும் பொங்கலோ மோதகமோ வடையோ வழியிலேயே கொடுத்துக் கொண்டாடிவிடுவார் தாத்தா.வீட்டிலே சின்னாச்சிக் கிழவி சமைக்காம இவர் சாப்பிடக் கொண்டு வருவாரென்று பாத்துக்கொண்டு பட்டினியாக் கிடக்கும் பாவம்.

தாத்தா ஒரு தண்ணிக்காக்கா.தண்ணியடிக்காத பகல் நேரங்களில் நிறையக் குழந்தைகள் சுற்றிய றாட்டினம்மாதிரித்தான் அவர்.ஒரு ஆள் தலையிலயும் முதுகிலயுமாய் யானை விளையாட்டெல்லாம் நடக்கும்.இருக்கிற கடைசிச் சில்லறை வரைக்கும் ஏதோ எல்லாம் வாங்கிக் குடுத்திடுவார்.சின்னாச்சி திட்டினா..."சும்மா இரடி உதுதான் எங்களுக்கு ஒரு குஞ்சு இல்லாமல்போச்சு...."என்று முடிக்கும்போது தனக்கொரு குழந்தையில்லாத ஆதங்கம் வெடித்துச் சிரிப்போடும் ஏதோ ஒரு இராகத்தோடும் சின்னாச்சியின் காதிலயும் பட்டுப் பறக்கும்.

பகல் நேரங்களில சின்னாச்சியைத் தூக்கி வச்சுக் கொண்டாடுவார்.அம்மா ஆச்சி எணை எண்டபடி பூனைக்குட்டிபோல பின்னுக்கும் முன்னுக்கும் திரிவார்.சின்னாச்சியும் எல்லாம் மறந்து அவருக்கு என்ன பிடிக்கும் எண்டு தேடித் தேடி வாங்கிச் சமைப்பா.மீன் இறைச்சி எண்டு வாங்கிக் கொண்டு வந்து குடுத்திட்டு தானும் உதவிகள் செய்து குடுப்பார்.

சமையல் முடியிற கட்டத்தில இஞ்சாரப்பா..... எண்டு சைக்கிளோட வெளிக்கிடுவார் தாத்தா."சரியாப்போச்சு துலைவான் வெளிக்கிட்டிட்டான் இண்டைக்குச் சாப்பிட்டமாதிரித்தான்"....எண்டு ஆச்சி தலையில அடிச்சுக்கொள்ளாத குறையா புலம்பத் தொடங்குவா.

"ச்ச....சும்மா கத்தாத...நான் இப்ப வந்திடுவன் நீ சாப்பாட்டைப்போடு"... எண்டபடி போனாரெண்டா பிறகென்ன சைக்கிளையும் ஆளையும் ஆராச்சும் தூக்கிக்கொண்டு வருவினம்.இல்லாட்டி தானே சைக்கிளைத் தூக்கிக்கொண்டு வேட்டி அவிழ்றதும் தெரியாம இடுப்பில பெல்ட்தான் மானத்தைக் காப்பாத்தும்.

இதுக்கிடையில சின்னாச்சி கறி சோறெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து வேற இடத்தில பக்குவப்படுத்திடுவா.அவவுக்குகெல்லோ தெரியும் என்ன சன்னதம் ஆடுவாரெண்டு.

"ஓமடி ஓமடி உன்ர கொம்மா கோழி சமைச்சு ஒளிச்சுவச்சல்லோ மூத்த மருமோனுக்கு குடுத்தவ.எனக்கு வெறும் குழம்பும் ரசமும் ஏனோதானோவெண்டு தட்டில போட்டுத் தள்ளிவிட்டவ.ஆனா கடைசில நான்தான் ஆசுப்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைஞ்சனான்".

இது மட்டும்தான் எப்பவும் பல்லவியாய்த் தொடங்கும்.அப்பத்தான் அவருக்கு எப்பவோ ஆச்சி சொன்னது அவவின்ர அப்பா சொன்னது எல்லாம் ஞாபகத்தில வரும்.

ஆச்சியையும் எப்பிடியெண்டாலும் கோவப்படுத்திடுவார்.உன்ர கொப்பர்...கோச்சி எண்டு அங்கால நல்ல நல்ல செந்தமிழ் எல்லாம் கலந்து கட்டி ஆடத் தொடங்குவார்.

ஆச்சியும் "என்ன சொன்னவர் என்ர அப்பா.அவரும் இல்லையெண்டா ரோட்டிலதான் பாய் போட்டுக்கொண்டு பிச்சை எடுத்திருப்பியள்.வந்திட்டார் பெரிசா பீத்திக்கொண்டு....."எண்டு அவர் ஆரம்பிக்க எடுத்துக் கொடுத்திடுவா.பிறகு கேக்கவும் வேணுமே.

"என்னவோ என்னவோ....ஓமடி நான் ராணிமாதிரியெல்லோ உன்னை வச்சிருக்கிறன்.ஏன் உனக்கெல்லாம் மறந்துபோச்சோ.""நான் மறக்கேல்ல...அப்ப சொல்லுங்கோவன்.தெய்வமா போனதுகளை ஏன் இப்ப இழுக்கிறியள்.நானெல்லோ அதுகளைத் திட்டவேணும்.உங்கட தலையில என்னைக் கட்டிப்போட்டுப் போய்ட்டுதுகள்....." எண்டு ஆச்சி அழத்தொடங்க.எணை எணை...அழாத எண்டு சமாதானப்படுத்தி முடியாமப்போக முடிவில சமைச்சு வச்ச கறி சோறெல்லாம் மண்பானை சட்டியோட உடைபடும்.அதோட கேள்வியும் போச்சு பதிலும் போச்சு.அடுத்த தண்ணியடி வரைக்கும் சத்தமே இருக்காது.இரணடு மாசத்தில ஒருக்காவெண்டாலும் இப்பிடி நடக்கும்.நடுநடுவில சின்னச் சின்ன அலங்காரங்கள் மட்டுமே.

ம்ம்ம்...ஆச்சி எல்லாம் பொறுக்கித் துப்பரவாக்க தாத்தா அப்பிடியே நித்திரையாயிடுவார்.ஆச்சியும் திட்டினாலும் சாப்பிடாமப் பாத்துக்கொண்டிருப்பா.பிறகு சூரியன் சரியத்தொடங்கத்தான் எழும்புவார்.பிறகும் அரைகுறை வெறியில் ஆச்சி தாயே...நீயேதான் தெய்வம்.நீதானடி என்ர கடவுள்.உன்ர அப்பாபோல ஒரு மனுசனை உலகத்தில காணமுடியுமோ.நான்தான் அவையளுக்கு ஒண்டும் சரியாச் செய்யேல்ல எண்டெல்லாம் புலம்பினபடி வாய் கோணக்கோண புகழ்ந்து தள்ளுவார்.

"சரியப்பா....சரியப்பா இப்ப சாப்பிடுங்கோ..." எண்டு ஆச்சியும் வாய் ஓயாமச் சொல்லிக் கேக்கும்.அவவுக்குப் அக்கறையோட அடுத்த நிகழ்வுக்குப் பயம்.சாப்பிட்டாத்தான் மற்றத்தரம் தவறணைக்குப் போகமாட்டார்.இல்லாட்டி ராத்திருவிழாவும் தொடரும்.

தாத்தா நல்லாக் குடிச்சு பெரிய கலாட்டா செய்தாரெண்டா பிறகு ஒரு கிழமைக்கு சாமிதான்.
ஆளைப்பாக்கவேணுமே.ஆச்சிக்கு விறகு கொத்திக்கொடுப்பார்.உதவி செய்றன் எண்டு அவவின்ர தோச்சு வச்ச சீலையெல்லாம் திருப்பி எடுத்துத் தோய்ப்பார்.ஆச்சி குளிக்க தொட்டி நிறைய தண்ணி இறைச்சுவிடுவார் .இப்பிடி வீட்டு வேலையெல்லாம் ஒழுங்கா நடக்கும்.

ஆனா ஆச்சி கடுகடுவெண்டு முறைச்சுக்கொண்டு திரிவா.தேத்தண்ணி சாப்பாடெல்லாம் "டொம்" எண்டுதான் கொண்டு வந்து வைப்பா.அதுக்கும் கிண்டல் விடுவார்."ஏனப்பா இப்பிடிச் சுடச் சுடத் தாற ஆத்தித் தா...."எண்டு வேணுமெண்டு திருப்பிக் குடுப்பார்.அதுவும் நாங்கள் ஆரும் கிட்ட இருந்தால் அவரின்ர கிண்டல் கூடுதலா இருக்கும்.ஆச்சியும் அவருக்குத் தெரியாம கொடுப்புக்க சிரிப்பா.காதலும் கலாட்டாவாவும் இருக்கும்.

இப்பிடித்தான் ஒருக்கா மலைநாட்டுப்பக்கம் 10 நாள் ஒரு கோயில் சேவுகத்துதுக்காக போனவர்தான் ஆளையே காணேல்ல.அது சிங்கள ஆட்கள் இருக்கிற இடம்.ஆச்சி அழுது புரளத் தொடங்கிட்டா.சொந்தக்காரர் தேடிபோச்சினம்.ஆள் 10 நாள்முடிய திருவிழா முடிய அங்கயிருந்து உடன் போனவர்களோட சேராம தான் தனிய வருவன் எண்டு தனிய வெளிக்கிட்டு இருக்கிறார்.எவ்வளவோ சொல்லியும் அவர் கேக்காம தனியாகவே போய்ட்டாராம்.

பிறகென்ன.தேடி ஓய்ஞ்சு போன ஒரு 10-15 நாளுக்குப்பிறகு கையில ஒரு நெசவு சீலையும் ஆளுமா செம்பாட்டுப் புளுதியும் பல்விளக்காத முகமுமாய் வாறார்.கழுத்தில போட்டிருந்த சங்கிலி தவில் எல்லாம் போச்சு.என்னப்பா எண்டா ஆச்சிக்கு சீலை தேடி வாங்கிக்கொண்டு வாறாராம். தனக்குச் சிங்களமும் தெரியால்லையாம்.சரியாக் கஸ்டப்பட்டுப் போய்ட்டாராம்.
பிறகென்ன ஆச்சி அழ தாத்தா அழ நாங்களும் அழ அழுது முடியத்தான் ஆச்சி ஓடி முழிப்பா.

"எங்கயப்பா....சங்கிலி,தவில்..." எண்டா அங்க இஞ்ச எண்டு எத்தனை புளுடாக் கதை எல்லாம் விடுவார்.ஆச்சி "நாசமாப் போக....எண்டு தொடங்கித் திட்டி அழுது முடிப்பா.தெரிஞ்ச யாரிட்டயாவது வித்திருந்தாரெண்டா அவர்களே கொண்டு வந்து கொடுப்பார்கள். ஆச்சியின் அக்கா மகன்தான் இவர்களுக்கு ஆதரவு.அவர் அதற்குண்டான பணத்தைக் கொடுத்தனுப்புவார். கொஞ்ச நாளைக்கு இந்தப் பூனையும் பால் குடிக்குமோ என்கிறமாதிரி வீபூதிப்பட்டையும் ஆளுமா சின்னப்பிள்ளைகளோட விளையாடிக்கொண்டும் ஆச்சிக்கு உதவியாயும் இருப்பார்.எப்ப வேதாளம் முருங்கை மரம் ஏறுமோ எண்டு ஆச்சி சொல்லிச் சிரிப்பா.

தாத்தா சின்னனில சரியான குழப்படியாம்.கலைச்சுக் கலைச்சு தவில் வாராலதான் அடிவிழுமாம்.ஆனாப் பிடிபடமாட்டாராம்.கிணத்துக்குள்ள இறங்கிநிண்டு கூத்துக்காட்டுவாராம்.இல்லாட்டி பிடியுங்கோ பாப்பம்...எண்டு துலாக்கட்டில ஏறி இருப்பாராம்.இரவிலயும் வரமாட்டாரம்.அம்மாவை வெருட்டி தூர இருந்தபடியே சாப்பாடு வாங்கிச் சாப்பிடுவாராம்.ஆனா கடைசில அடி வாங்கித்தான் வீட்டுக்குள்ள வரமுடியுமாம்.தான் தவில் பழகின தன் குருவுக்கு மட்டும்தானாம் பயம்.அதனால மூன்றாம்வகுப்பு மட்டும்தான் படிச்சவராம்.அதுக்குப்பிறகு தன் குருவின் வீட்லயே வளர்ந்தவராம்.

இப்பிடி அவர் ஓய்வா இருக்கிற காலத்தில தன்னைப் பெட்டையள் சுத்தினதும் தான் பெட்டையளுக்கு கச்சான் கடலை வாங்கிக் கொடுத்ததும்,ஐஸ்கிரீம் காரனோட சண்டை போட்டதும் எண்டு தன் இளைமைக்காலக் கதையெல்லாம் சொல்லுவார்.ஆச்சியும் ரசிப்பா.

ஏனெண்டா அவ இவரை காதலிச்சுத்தானாம் கல்யாணம் செய்துகொண்டவ.இவர் கொஞ்சம் குழப்படி எண்டாலும் தொழில் சுத்தமாம்.அதனால ஆச்சியிண்ட அப்பா இவரைத் தனக்கு தவில்காரனா வீட்ல வச்சிருந்தவராம்.அந்தக்காலத்தில வீட்டோட ஒரு வெளி ஆண் இருந்தால் வீட்டிலுள்ள பெண்புரசுகளைக் காணேலதாம்.எல்லாரும் பின்பக்கமாகவே புழங்கிக்கொள்வார்களாம்.

இவர் அடிக்கடி கிணத்தடிக்குப் போவாராம்.ஏனெண்டா அங்கதான் வாழைமரத்தடில சின்னக்கா....அவதான் சின்னாச்சி பாத்திரங்கள் கழுவுவாம்.இவர் செருமுவாராம். இருமுவாராம்.சின்னக்கா பாக்கவே மாட்டாவாம்.இவவைக் கேக்காமலே வாளி நிறையத் தண்ணி நிரப்பி வச்சிட்டு வருவாராம்.அவவும் அதிலதானாம் பாத்திரம் கழுவுவாவாம்.

பிலாமரத்தடிலதான் பாய் விரிச்சு தவில் வேலை எல்லாம் செய்வாராம்.அது காத்தாட என்கிற பொய்யோட கருக்குமட்டைக்குள்ளாள ஆச்சியப் பாக்கலாமெல்லோ அதுக்குத்தான்.ஆச்சியும் பாக்கிறா எண்டு நினைச்சுக் கொள்ளுவாராம்.ஆச்சியை நாங்களும் கிண்டிக் கிளறிக் கேட்டுப் பாத்தம்.நீங்களும் பாத்தனிங்களோ எண்டு.அவ கடைசி வரைக்கும் சொல்லவேயில்ல.ஆனா வெக்கப்பட்டுக்கொண்டு உள்ளுக்க போய்டுவா.

இப்பிடி ஒரு நாளுமே நேருக்கு நேர கதைக்கவோ பாக்கவோ இல்லையாம்.ஆனா இவருக்கு வீட்ல கல்யாணம் பேசத் தொடங்க இவர் தன்ர வீட்ல சொன்னவராம்.ஆச்சி வீட்டுக்காறார் நல்ல பேர்புகழனா நாதஸ்வரக் குடும்பமாம்.அதோட பெரிய பணக்காரருமாம்.அதனால வீட்ல சிக்கலாம்.இவர் என்ன செய்திருக்கார் தெரியுமோ.தான் சின்னாச்சி நினைவோட அவவுக்காக காத்திருந்த பிலா மரத்திலயே தூக்கு மாட்டி சாகவேண்டு கயிறு மாட்டிட்டாராம்.

அப்பத்தானாம் மெல்லமா ஆச்சி அழுத்தவ.அவவின்ர அம்மாவுக்கும் விளங்கினதாம் ஆச்சிக்கும் விருப்பமெண்டு.அப்பத்தானம் இரண்டு வீட்டுக் காரரும் கல்யாணப் பேச்சுக்கள் பேசினதாம்.ஆனாலும் சாதகம் பொருத்தமில்லையாம்.எண்டாலும் நாங்கள் இவ்வளவு காலம் சந்தோஷமா வாழ்ந்திட்டம்தானே எண்டு பெரிய சந்தோஷமாச் சிரிச்சு தோழில சால்வையை உதறிப்போடுவார் தாத்தா.

அப்ப நான் சின்னனா இவையளை பாக்கிற நேரமே அவையளுக்கு 60-65 வயசு இருக்கும்.இணுவிலிலதான் இருந்தவை.இப்ப நிச்சயமா இருக்கமாட்டினம்.
என்றாலும் அடுத்தமுறை அப்பாவோட கதைக்கேக்குள்ள கேக்கவேணும். கிருஷ்ணமூர்த்தி தாத்தாவையும் சின்னாச்சி அம்மாச்சியையும் ஞாபகப்படுத்தின தமிழ்நதி அக்காவுக்கும் நன்றி.

"எங்கிருக்கிறாய் என்கிறார்கள் இப்போதும்.நான் இங்கில்லை என்கிறேன்".

ஹேமா(சுவிஸ்)

41 comments:

சமுத்ரா said...

:) nice

Priya said...

இயல்பான நடையில் நினைவுகளை தொகுத்து மிக அழகா எழுதி இருக்கிங்க ஹேமா.

VELU.G said...

நினைவலைகள் எப்போதும் இனிமை

நிரூபன் said...

வணக்கம் சகோதரி, ஊர் நினைவுகளை அப்படியே வார்த்தைகளால் செதுக்கியிருக்க்றீர்கள். எல்லோர் வாழ்விலும் பல முதியவர்கள் சில சிந்தனைகள் உருவாகுவதற்கு காரணமாய் அமைந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த தாத்தாவும் ஒரு சான்று.

நீங்கள் புலம் பெயர் நாட்டிலிருந்து எங்களின் ஊர் நினைவுகளை, எங்களின் அதே மண் வாசனை கமழும் பேச்சு வழக்குகளோடு தந்திருப்பது அருமை. நினைவு மீட்டலாய் தாத்த ததரினன இசைத்தபடி இப்போது எங்களோடும் கலந்து விட்டார்.

தமிழ் உதயம் said...

உங்களின் அருமையான மொழி நடையில் ஒரு ஞாபக பகிர்வு.

அன்புடன் அருணா said...

மலரும் நினைவுகள்.

thiyaa said...

நளினமான நடையில் அருமையா இருக்கு

Unknown said...

//எல்லோர் வாழ்விலும் பல முதியவர்கள் சில சிந்தனைகள் உருவாகுவதற்கு காரணமாய் அமைந்திருக்கிறார்கள் //

Unknown said...

இப்பொதும் நினைவோடைகளில் இருக்கும் பந்தங்கள்...

குறையொன்றுமில்லை. said...

அருமையான எழுத்து. நினைவுகளை நல்லாவே சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

நசரேயன் said...

//கணணியும் இந்த நேரம் பாத்து பிச்சுக்கொண்டு போய்ட்டுது//

அடிக்கடி இப்படி போச்சுன்னா நாங்க நிம்மதியா இருப்போம்

ஹுஸைனம்மா said...

//இப்பிடி வீட்டு வேலையெல்லாம் ஒழுங்கா நடக்கும//

ஹா.. ஹா.. தாத்தாவானாலும், குமரனானாலும் இதுதான் பொதுவிதி போல!!

நல்ல சரளமான எழுத்து பிரவாகம் போல.

ஜெயா said...

அழகான நினைவுகள் ஹேமா....

மதுரை சரவணன் said...

nice. good write up.. vaalththukkal

ஜெய்லானி said...

நினைவுகள்தானே நம்மை நடத்திகிட்டு இருக்கு அருமையான நடையில் நினைவுகள் :-)

ஸ்ரீராம். said...

கடைசி வரிகள் பிரமாதம். நினைவுகளில் எங்கோ போய் எங்களையும் அங்கு கொண்டு சென்று விட்டீர்கள் உங்கள் எழுத்தில்.

எல் கே said...

உங்கள் ஊர் மொழி நடை சில இடங்களில் எனக்கு விளங்கவில்லை. நல்லைருன்ஹாலும் ஊர் மணம் கமழும் கதை

எல் கே said...

/அடிக்கடி இப்படி போச்சுன்னா நாங்க நிம்மதியா இருப்போம்//

@நசரேயன்
உன் பொட்டிக்கு ஒன்னும் ஆகலையே :(

Kousalya Raj said...

தோழி நலமா ?

ஹேமா உங்களோட இந்த எழுத்துக்களை சத்தமா வாசித்து படித்தேன்...உரைநடையாக தெரியவில்லை, அழகா பாடல் போல இருக்கு. தமிழ் உங்களவர்களின் மூலமே சிறப்பாய் வாழ்ந்து கொண்டிருக்கிறது ஹேமா.

தமிழ்நாட்டில் தமிழ்...?!!!

நினைவுகளின் தாலாட்டு !!

Unknown said...

இனிய நினைவுகள்...

'பரிவை' சே.குமார் said...

இனிய நினைவுகள்.
அழகா எழுதி இருக்கிங்க ஹேமா.

கீறிப்புள்ள!! said...

படிக்கும்போது என்னுடைய தாத்தாவின் நினைவுகள் பல கண்முன் வந்து போனது!! ரொம்ப அருமையா எழுதிருக்கீங்க!!

சாந்தி மாரியப்பன் said...

மொழி நடை மேலும் சுவையை கூட்டுது ஹேமா :-)))

சி.பி.செந்தில்குமார் said...

>>>>இந்த ஞாபகச் சிதறல்கள்.சுற்றம் சூழல் எத்தனை மனிதர்கள்.பார்ப்போம் பழகியிருக்கமாட்டோம். சிரித்திருப்போம் பேசியிருக்கமாட்டோம்.
சொந்தமாயிருக்கும் சண்டைபோட்டதால் போயிருக்கமாட்டோம்.

ஹேமா எம் ஏ சைக்காலஜி போல...

கலா said...

ஹேமா,
ஆழப்பதிந்ததை
அலசிக் காயவிடீர்கள்
ததரினன தாத்தா.
எங்கள் மனக்கொடிகளிலும்
தொங்கி ஆடுகிறார்


நன்றி ஹேமா உங்கள் பகிர்தலுக்கு!

சி.பி.செந்தில்குமார் said...

>>>அந்தக்காலத்தில வீட்டோட ஒரு வெளி ஆண் இருந்தால் வீட்டிலுள்ள பெண்புரசுகளைக் காணேலதாம்.எல்லாரும் பின்பக்கமாகவே புழங்கிக்கொள்வார்களாம்.

பழமை நினைவுகளை சிலாகிக்கும் புதுமை

சி.பி.செந்தில்குமார் said...

>>>"எங்கிருக்கிறாய் என்கிறார்கள் இப்போதும்.நான் இங்கில்லை என்கிறேன்".

சிறுகதையின் கடைசி பஞ்சிங்க்காக அமைந்த இந்த வரி ஒரு நல்ல கவிதைக்கான அழகான கருவாக அமையலாம்

சி.பி.செந்தில்குமார் said...

ஹேமா... உங்கள் கவிதைகளில் எப்போதும் ஒரு மெல்லிய சோகமும், வலியும் இருக்கும்,ஆனால் கதையில் அப்படியே பேட்டர்ன் மாறுது.. அழகு நடை

நிலாமகள் said...

"எங்கிருக்கிறாய் என்கிறார்கள் இப்போதும்.நான் இங்கில்லை என்கிறேன்".

சுற்றம் சூழல் எத்தனை மனிதர்கள்.பார்ப்போம் பழகியிருக்கமாட்டோம். சிரித்திருப்போம் பேசியிருக்கமாட்டோம்.
சொந்தமாயிருக்கும் சண்டைபோட்டதால் போயிருக்கமாட்டோம்..ஆனால் அத்தனைபேரும் ஞாபகத்தில் அடிக்கடி வந்துபோகும் உறவுகள்.நம்மவர்கள்.சொந்தங்கள்//

உங்கள் அனுபவப் பகிர்தலில் தாத்தாவும் சின்னாச்சியும் எங்களுடன் ஒன்றறக் கலந்து விட்டனர். இழையோடும் நகைச்சுவை வெகு அருமை. நன்றி ஹேமா... அசைபோடலில் எங்களையும் இணைத்துக் கொண்டமைக்கு!

Sriakila said...

கதை நல்லா இருக்கே..

எச்சூச்சுமி, உங்க template ல இருக்கிற குரங்கு பொம்மை என்ன வெலை? அது கண்ணாடின்னு மட்டும் சொல்லிராதீங்க..அவ்வ்வ்வ்வ்வ்!!

சத்ரியன் said...

//"ச்ச....சும்மா கத்தாத...நான் இப்ப வந்திடுவன் நீ சாப்பாட்டைப்போடு"... எண்டபடி போனாரெண்டா பிறகென்ன சைக்கிளையும் ஆளையும் ஆராச்சும் தூக்கிக்கொண்டு வருவினம்.இல்லாட்டி தானே சைக்கிளைத் தூக்கிக்கொண்டு வேட்டி அவிழ்றதும் தெரியாம இடுப்பில பெல்ட்தான் மானத்தைக் காப்பாத்தும்.//

ஹேமா,

பெல்ட் இடுப்புல தானே இருக்கும். அதெப்படி மானத்தை காப்பாத்தும்?

ஆனாலும்,

பாட்டி சொல்ற மாதிரியே இருந்துச்சி கதை. அருமை.

மோகன்ஜி said...

பிரிய ஹேமா!
ததரினன தாத்தா என் மனசில் ஈசிசேர் போட்டுக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.அருமை!

ரிஷபன் said...

ததரினன தாத்தா.. என்னவொரு இயல்பாய் நடை.. ரசிக்க வைத்த பதிவு.. கூடவே பெருமூச்சும்.
‘தானெனும் அகந்தை தலைக்கு ஏறாமல்.. ‘ என்றூ ராகமிசைத்துக் கொண்டிருந்த என் முந்தைய அலுவலக தாத்தா ஞாபகத்துக்கு வருகிறார்.

ராஜ நடராஜன் said...

வட்டார வழக்குத் தமிழ் கொஞ்சி விளையாடுது ஹேமா!கூடவே வாழ்க்கையோட்டத்தில் யாரையோ சந்தித்தது மாதிரி உணர்வு!

மாதேவி said...

அருமை. ஊருக்குச் சென்றுவந்தமாதிரி இருந்தது ஹேமா.

ஜோதிஜி said...

வட்டார மொழி வழக்கில் எழுதுவது மிகக் கடினம். உங்களுக்கு நன்றாக வந்துள்ளது.பள்ளி பருவத்தில் அப்துல் அமீது குரலை இலங்கை வானொலியில் கேட்ட நாட்கள் நினைவுக்கு வருகின்றது.

ஹேமா said...

சமுத்ரா....நன்றி முதல் வருகைக்கு !

ப்ரியா...அன்புக்கு நன்றி தோழி !

வேலு..நினைவலைகள் இனித்தாலும் சிலசமயம் வேதனையாவும் இருக்கு !

நிரூபன்...ததரினனா தாத்தாவும் சின்னாச்சியும் இப்போ உயிரோடு இல்லையாம்.என்றாலும் மனதோடு பதிவாகிவிட்டார் !

தமிழ்...ஞாபகங்கள்தான் இன்னும் என்னை உயிரோடு வைத்திருக்கிறது !

அருணா டீச்சர்...முதன் முதலாக வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.நன்றி !

தியா...மறக்காமல் வந்திருக்கிறீர்கள்.நேரம் கிடைக்கும்போதெல்லாம் எட்டிப் பாத்துக்கொள்ளுங்கோ !

பாரத்..நன்றி நன்றி !

செந்தில்...ரொம்ப பிஸியோ...குழந்தைநிலாப்பக்கம் காணோம்.இல்லன்னா என்னமோ பிடிக்க்லைன்னு தெரியுது !

லஷ்மி அம்மா...அகதி வாழ்வு கடந்துகொண்டிருப்பதே நினைவுகளோடுதான் !

நசர்...என்ன சொல்ல உங்களை.உப்புமடச் சந்தி
சந்தோஷமா சிரிக்கத்தானே !

ஹுசைனா...வீட்டுக்கு வீடு வாசல்படிதான்.எல்லாரும் வெளியில்தான் வீரர்கள் !

ஜெயா...சுகம்தானே.ஏன் தளம் தொடங்கியும் ஒன்றும் பதிவுகள் காணோம் !

சரவணன்...நன்றி உங்கள் அன்பான வாழ்த்துக்கு !

ஜெய்...ஏதாச்சும் சந்தேகம் இல்லையே.அதுவரைக்கும் சந்தோஷம் !

ஸ்ரீராம்...கடைசி வரியில் ஒரு பெரு வலியே இருக்கு.வரும் கவிதையாக !

எல்.கே...விளங்கலியா....இப்போ எல்லாம் ஈழத் தமிழ் ஓரளவு புரிஞ்சே வச்சிருக்காங்கன்னு நினைச்சு மொழிபெயர்க்கவில்லை !

கௌசி...ஈழத் தமிழையும் சிலர் கொச்சைத் தமிழ் என்றுதானே சொல்கிறார்கள்.
ம்....உண்மையும்தான் !

கலாநேசன்...எங்க இப்பல்லாம் காணல அடிக்கடி !

ஹேமா said...

குமார்...வாங்க.உங்க சிறுகதை அளவிற்கு என்னால் எழுதமுடியவில்லை.என்றாலும் ரசித்திருக்கிறீர்கள் !

கீறி(ரி)ப்பிள்ளை..நன்றி.என் சாக்கில் உங்கள் தாத்தாவும் வந்தாரே.சந்தோஷம் !

சாரல்...என் தமிழை ரசித்திருக்கிறீர்கள்.நன்றி !

சிபி...எப்போதும்போல உங்கள் நிறைவான கண்ணோட்டம் சந்தோஷம்.கவிதை வரும்.நான் எம் ஏ சைக்காலஜியா...ம் சரிதான் !

நிலாமகள்...நன்றி நன்றி அன்புக்கு !

அகிலா...என்னையும் மன்னிக்கணும்.அது நான் விரும்பி வச்சிருக்கிற நம்மோட முன்னோர்கள்.விக்கிறதுக்கு இல்ல !

சத்ரியன்...நீங்க ஏன் பெல்ட் கட்டுறீங்க.வேட்டியை இறுக்கமா வச்சிருக்கத்தானே.ம் ...நான் பாட்டின்னா நீங்க..!

மோகண்ணா...அவரைப்போல எத்தனை நம் பெரியவர்கள் எம் வழிகாட்டல்களாய் !

ராதாகிருஷ்ணன் ஐயா...தேர்தலோடு சண்டை போட்டபடியே இருக்கு உங்கள் பதிவுகள் !

ரிஷபன்...ஒருவர் நினைவைத் தொட தொட்டுப்போன நினைவுகளும் தொடர்கிறது.இதுதான் வாழ்க்கையோ !

நடா...சந்தோஷம் இங்க வந்ததுக்கு.நீங்களும் ஜோதிஜியும் கதைச்சுப் பேசி குழந்தைநிலாவுக்கு வராம இருக்கீங்க.சொல்லிட்டேன் வந்திடுங்க....!

மாதேவி...ம்ம்...ஊரை நினைக்கவே இனிக்குது மாதேவி !

ஜோதிஜி...நடாவுக்குச் சொன்னதுதான் உங்களுக்கும்.வந்திடுங்க !

இராஜராஜேஸ்வரி said...

இயல்பான நடையில் நினைவுகளை தொகுத்து மிக அழகா எழுதி இருக்கிங்க

போளூர் தயாநிதி said...

நீங்கள் புலம் பெயர் நாட்டிலிருந்து ஊர் நினைவுகளை, அதே மண் வாசனை கமழும் பேச்சு வழக்குகளோடு தந்திருப்பது அருமை.

அப்பாதுரை said...

ஊர் ஞாபகம் எப்பவுமே சிக்கல் தான். வானொலி தான் கால எந்திரம் :)
சுவையான நினைவுகள்.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP